Sunday, March 13, 2011

"கோர்ட்டுக்கு வெளியே சொன்ன தீர்ப்பு"

1985 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்களும், ஆசிரியர்களும் இணைந்து அரசுக்கெதிராக ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். தங்களுடைய கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்த அரசுக்கு எதிராக ஒரு வழக்கையும் நடத்தினார்கள். மூத்த வழக்குரைஞர் திரு.என்.டி.வானமாமலை போராட்டக்குழு சார்பாக வழக்கில் வாதாடி வெற்றிபெற்றுக்கொடுத்தார்.

தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், ஆசிரியர்கள் ஒரு பெரிய தாம்பூலத்தட்டில் பழங்களுடன் ஒரு பெரிய தொகையை ஃபீசாக வைத்து என்.டி.வி.யிடம் நீட்டினார்கள். அப்போது என்.டி.வி. சொன்னது:

"ஏழை மாணவர்களுக்கு ஒழுங்காக படிப்புச் சொல்லிக்கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அவர்களுக்கு ஒழுங்கான கல்வி கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. அவர்கள் மட்டும் நன்றாகப்படிக்க வாய்ப்பு கிடைத்தால் பல பிரச்சினைகள் இந்த நாட்டில் தீர்ந்துவிடும். நீங்கள் எல்லோரும் ஆசிரியர்கள். இனிமேலாவது ஏழை மாணவர்களுக்கு சீராக கல்வி கற்றுக்கொடுப்போம் என்று உறுதிமொழி எடுப்பீர்களானால் அதுதான் நீங்கள் எனக்குக்கொடுக்கும் அதிகபட்ச ஃபீஸ்."

நடந்தது என்ன?

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் புழக்கத்தில் இல்லாத மெட்ரிக் கல்விமுறை தமிழ்நாட்டில் மட்டும் தழைத்து நிற்கிறது.

தமிழ்க்குழந்தைகளின் நாவில் தமிழ் தவிக்கிறது.

ஆங்கிலம் தள்ளாடுகிறது.

கல்வி வியாபாரிகளின் காட்டில் மழையோ மழை!

இறகு

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராப்பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது
----தருமு சிவராம்

Saturday, February 12, 2011

குஸ்தி

மலையாள மூலம்: பி.கேசவதேவ்
தமிழில்: மு.குருமூர்த்தி

"எதிர்பாருங்கள்...விரைவில் எதிர்பாருங்கள்...காணக்கிடைக்காத குஸ்திப்போராட்டம்..."
பப்புபிள்ளையின் டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு ஒரு வாலிபன் குஸ்தி நோட்டீஸ்
வாசித்துக்கொண்டிருந்தான்.
அடுப்பிற்கு பக்கத்தில் உட்கார்ந்து தோசை சுட்டுக்கொணடிருந்தான் பப்புபிள்ளை.
அவனுடைய குரல் ஓங்கி ஒலித்தது.
"கொஞ்சம் சத்தமா படிங்க சார்...நானும் கேக்கறேன்."
வாலிபனின் குரல் உயர்ந்தது.
"விளையாட்டுக்கலை ரசிகர்களுக்கு..........கண்ணையும் கருத்தையும் தட்டிப்பறிக்கும்
ஒரு போட்டி..நழுவவிடாதீர்."
டீக்கடையை ஒட்டியிருந்த பெட்டிக்கடையில் குனிந்தவாறு பீடியிலை வெட்டிக்
கொண்டிருந்த அத்துருமான் தலைநிமிர்ந்து பார்த்தான்.
"குஸ்தியா சார்?... எங்கே?"
அதைக்காதில் வாங்காத பாவனையில் வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
"காணக்கிடைக்காத ஒரு மல்யுத்தப்போட்டி... வெற்றிதோல்வியை தீர்மானிக்க
முடியாத ஒருஆக்ரோஷமான மல்யுத்தம்... இதுவரை கண்டதில்லை...
இனியும் காணப்போவதில்லை..."
அத்துருமான் கையில் கத்தரிக்கோலுடன் எழுந்து வந்தான்.
"அப்படின்னா ... நானும் பாக்கணும். எங்கே சார்...எங்கே சார் நடக்கப்போவுது?"
ஒருகரண்டி தோசைமாவை கல்லில் ஊற்றிப் பரப்பிவிட்டு பப்புபிள்ளை வாலிபனின்
பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.
"ஆக்ரோஷமான குஸ்தியா...அப்படின்னா...நானும் பாக்கணும். பயில்வானுக யாராரு?"
"படிங்க சார்...படிங்க..."அத்துருமானும் பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.
வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
"மையநாட்டு ஹனுமான் விலாஸம் ஸ்டேடியத்தில் தனுமாதம் ஒண்ணாம் தேதி
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு....ஆக்ரோஷமான மல்யுத்தம்...
கூட்டத்தை அடக்கிவைக்க போலீஸ்காரர்கள் வருவார்கள்."
அத்துருமானுக்கு பொறுமையில்லை.
"பயில்வான்களோட பேரு வாசியுங்க சார்..."
"இனிமேல் அதைத்தான் வாசிக்கப்போறேன்."
வாலிபன் சிரித்துக்கொண்டே வாசிப்பைத் தொடர்ந்தான்.
"பயில்வான்கள்...ம்ம்....ம்ம்....."
"கொஞ்சம் இருங்க..."
பப்புபிள்ளை ஓடிப்போய் கல்லில் கிடந்த தோசையை திருப்பிபோட்டுவிட்டு வந்தான்.
"ம்ம்...படியுங்க சார்..."
வாலிபன் சிரிப்பை அடக்கிக்கொண்டு வாசித்தான்.
"அகில கேரளத்திலும் புகழ்க்கொடிநாட்டி அகில இந்தியாவிலும் பெயர்பெற்ற
மலையாளிகளுடைய மனம் கவர்ந்த காமா பயில்வான் மேக்காட்டு நாணுப்பிள்ளை..."
பப்புப்பிள்ளை துள்ளிக்குதித்தான். அவனுக்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டியது.
"பேஷ்..பேஷ்...நாணுப்பிள்ள சேட்டன்னு சொல்லிட்டா கேக்கவே வேண்டாம்...ஜெயிக்க்ப்
போவது யாருங்கிறது தெரிஞ்சுபோன விஷயம். மேக்காடன் யானைய தூக்கி அடிக்கிறவன்."
அத்துருமான் கிண்டலாக சிரித்தான்.
" பிள்ளே...கொஞ்சம் அடக்கி வாசிடா..எதிர்க்குற பயில்வான் யாருன்னு கேட்றலாம்."
பெட்டிக்கடைக்காரன் குஞ்சுமொய்தீன் காசு எண்ணிக்கொண்டிருந்தான்.
எண்ணிய காசை பெட்டியில் வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
"என்னடா அத்துருமான் அங்கே...?"
அத்துருமான் வாய்விட்டுச்சிரித்தான்.
"கேட்டியாண்ணே...ஒரு வேடிக்கை. மேக்காடன் யானையைத்தூக்கி பந்தாடுவானாம்."
"ஏன்...பந்து கெடைக்கலேண்ணு யானையைத்தூக்கி விளையாடுவானாக்கும்?
அது இருக்கட்டும்... சேதியெச்சொல்லுடா."
குஞ்சு மொய்தீனும் நோட்டீஸ் வாசித்துக்கொண்டிருந்தவனுடைய பக்கத்தில் வந்து
நின்றுகொண்டான்.
வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
"பஞ்சாப் சிங்கம் என்ற புகழ்பெற்ற பயில்வான் முகம்மது ஹுசைன்..."
"அடடா...நம்ம முகம்மது ஹுசைனா! "குஞ்சு மொய்தீன் ஹா ஹா என்று சிரித்தான்.
"மேக்காடனை தூக்கி அடிக்கிறவனாச்சே"
ஆமோதிக்கிற பாவனையில் அத்துருமான் தலையாட்டினான்.
"பத்து மேடக்கானை சுருட்டி கக்கத்திலெ வச்சிகிட்டுப் போறவன் ஹுசைன்... தெரியுமா?"
பப்புபிள்ளையின் முகம் சுருங்கிப்போயிற்று.
மறுக்கிற பாவனை அந்த முகத்தில் தெரிந்தது.
"மேடக்கானெ சுருட்டி கக்கத்திலெ வைக்கிறதுக்கு பிரம்மா வந்தாலும் முடியாது
தெரிஞ்சுக்கடா."
குஞ்சுமொய்தீனுடைய புருவங்கள் நெளிந்தன.
"ஒங்க பிரம்மாவாலெ முடியாதது எங்களோட ஹுசைனாலெ முடியும்...தெரியுமாடா?"
"அப்படிச்சொல்லுண்ணே. அதுதான்சரி" அத்துருமானின் குரலில் வீரம் கொப்புளித்தது.
பப்புபிள்ளையின் உடம்பு குலுங்கியது.
"ஒங்களோட ஹுசைனும் அல்லாவும் சேந்து வந்தாக்கூட எங்களோட மேடக்கானோட
பெருவிரலெ மடக்கமுடியாதுடா..."
அத்துருமான் மொய்தீனை தள்ளிக்கொண்டு முன்னால் பாய்ந்தான்.
"டேய் பொறுடா அத்துருமானே." மொய்தீன் அவனை அடக்கினான்.
அத்துருமான் துள்ளிக்குதித்தான்.
"இல்லேண்ணே, இந்த காபரு சொன்னதெக்கேட்டியா அல்லா வந்தாலும் மேடக்கானோட
பெருவிரலெ மடக்கமுடியாதுன்னு சொன்னதெ..."
பப்புபிள்ளை இன்னும் வேகமாக தாண்டிக்குதித்தான்.
"மடக்கமுடியாதுன்னு சொல்லலே... பெருவிரலுக்கு சமமில்லேன்னு சொன்னேன்..."
அத்துருமான் இன்னும் முன்னோக்கிப்பாய்ந்தான்.
"இன்னொரு தடவை சொல்லுடா பாப்போம்..."
குஞ்சுமொய்தீன் மறுபடியும் அத்துருமானை அடக்கினான்.
"டேய் நீ பேசாம இருடா...சொல்றேன்லே..."
"இல்லேண்ணே. அந்த நோட்டீசப்பாரு. மேடக்கானெ காமா ன்னு போட்டிருக்கு.
காமாங்கறது இஸ்லாமில்லயா. இஸ்லாம் பேரு காபருக்கு எப்படி வைக்கலாம்?"
"டேய் மனுசனோட பெயரெ நாய்க்கு வெக்கிறதில்லையா?"என்றான் குஞ்சு மொய்தீன்.
பப்புபிள்ளைக்கு இதற்குமேல் அடங்கியிருக்கமுடியவில்லை.
"ஏய்...பன்னி.." என்றபடி குஞ்சுமொய்தீன்மேல் பாய்ந்தான்.
நோட்டீஸை வாசித்துக்கொண்டிருந்த வாலிபன் துள்ளிஎழுந்து பப்புபிள்ளையை
சமாதானப்படுத்தினான்.
"ஏய்..என்னடா பைத்தியக்காரத்தனம்?... யாரோ எங்கேயோ குஸ்திபோட்டா உங்களுக்கு
என்னடா?'
"எங்களுக்கு என்னவா...அந்தப்பன்னி சொன்னதெக்கேட்டியா"
குஞ்சுமொய்தீன் முன்னோக்கிப்பாய்ந்தான். பப்புபிள்ளையின் கன்னத்தில் ஒரு குத்து
விழுந்தது.
இரண்டு மூன்று நிமிஷங்களில்...
பப்புபிள்ளையின் கையில் இருந்த தோசை திருப்பி உயரே ஏறியது. அதே வேகத்தோடு
குஞ்சுமொய்தீனின் தலையில் இறங்கி நின்றது.
"அல்லா..."
குஞ்சுமொய்தீனின் தலை பிளந்தது. ரத்தம் சிதறித்தெறித்தது.
அவன் மல்லாந்து விழுந்தான்.
"கொல்லுடா...அந்தப்பன்னியெ கொல்லுடா..." குஞ்சுமொய்தீன் கூவினான்.
அத்துருமானின் கை உயர்ந்து தாழ்ந்தது. பீடியிலை வெட்டுகிற கத்தரிக்கோல்
பப்புபிள்ளையுடைய வயிற்றில் பாய்ந்து இறங்கியது.
பப்புபிள்ளை மல்லாந்து விழுந்தான். உக்கிரமாக அலறியபடி அத்துருமான்
பப்புபிள்ளையுடைய நெஞ்சில் ஏறி உட்கார்ந்து கத்திரிக்கோலால் ஓங்கி
குத்தினான்.
டீக்கடை ரத்தக்களமாகிப்போனது
பொது இடங்கள் கொலைக்களமாகிப்போயின.
கோவில்கள் கசாப்புக்காரர்கள் சந்திக்கும் இடமாகிப்போனது
ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டனர்.
அடுத்தவீட்டுக்காரர்கள் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டனர்.
அன்று மாலையில் இந்தக்கலவரம் பட்டணத்தைக்கடந்து கிராமங்களுக்கும்
பரவியது.
கோவில்கள் பற்றியெரிந்தன.
அலறல்கள், ஆவேசக்கூச்சல்கள், அபயக்குரல்...ஓலங்கள்.
நாட்டில் மனிதர்கள் இல்லாமற்போனார்கள்.
ஒருவர் கழுத்தை மற்றவர் அறுக்கும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமே
அங்கே இருந்தனர்.
தங்களுடைய எஜமானர்களுக்கு பைத்தியம்பிடித்ததைப்பார்த்த நாய்கள் கூட
ஓலமிட்டு அழுதன.
.
மனிதர்கள் பிசாசுகளாக மாறிப்போன அவலத்தை யாரும் பார்க்கக்கூடாதென்று
நித்திரை தேவியின் இருள் கரங்கள் மறைத்துக்கொண்டன.
அடுத்தநாள்...கலவரச்செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகின.
"பயங்கரமான ஹிந்து-முஸ்லிம் கலவரம்..."
"கிராமங்களுக்கும் கலவரம் பரவுகிறது..."
"மூன்று இடங்களில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது..."
".பதினான்கு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு..."
"இறந்தவர்களின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின்
எண்ணிக்கையும் தெரியவில்லை..."
"நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை..."
செய்திப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள் இப்படிப்போயின.
கலவரத்திற்குக் காரணம் யாருக்கும் தெரியவில்லை.
யாரும் அதைப்பற்றி கேட்கவுமில்லை.
கேட்டவர்கள் கேட்டவர்களைக்கொன்றனர்... கொல்லப்பட்டனர். அவ்வளவுதான்.
காதரும் கோவிந்தனும் மரச்சீனி வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பி
வந்துகொண்டிருந்தார்கள்.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரம் ஆரம்பித்துவிட்டது.
கோவிந்தன் இந்துக்களின் பக்கம் சேர்ந்துகொண்டான். காதர் முஸ்லிம்களின் பக்கத்தில்.
குத்துப்பட்டு இருவரும் இறந்து போனார்கள்.
சீட்டு விளையாடிக்கொண்டிருந்த மூன்று இந்துக்களும் ஒரு முஸ்லிமும்
கலவரச்செய்தி கேட்டனர்.
வாக்குவாதம் முற்றியது.
கடைசியில் சீட்டு விளையாடிய இடத்தில் இரத்தவெள்ளத்தில் குளித்த
இரண்டு சடலங்கள் மட்டும் கிடந்தன.
மதமாச்சரியம் அணு அணுவாக ஒவ்வொரு நிமிடமும் பரவிக்கொண்டிருந்தது.
குஸ்தி நோட்டீசு வாசித்த வாலிபன் ரொம்பவும் கவலையோடு சாலையோரமாக நின்று
கொண்டிருந்தான். கொஞ்சதூரத்தில் ஆரவாரம் கேட்டது.
ஆயுதம் தூக்கிய மனிதப்பிசாசுகள் கூடப்பிறந்தவர்களின் குரல்வளையை அறுப்பதற்காக
கூட்டமாக வருவதற்கான அறிகுறி அது.
அலறல்களும், வெறிக்கூச்சல்களும்...
அப்பப்பா...
எல்லோருக்கும் நோய்முற்றிப்போயிருந்தது.
அந்த வாலிபன் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள முற்பட்டான்.
கூட்டம் அவனைக் கண்டுபிடித்துவிட்டது.
"பிடிங்கடா அவனை.." ஒரு வெறிக்கூச்சல்.
"விடாதே...அவனை" ஒரு கர்ஜனை.
கொஞ்சம்பேர் வாலிபனை வளைத்தனர்.
ஒரு கட்டாரி அவனுடைய நெஞ்சிற்கு மேலே உயர்ந்து தாழ்ந்தது.
சட்டென்று ஒருவன் அந்த கட்டாரியைத் தட்டிவிட்டான்.
"வேண்டாம்டா...வேண்டாம்...அவன் ஹிந்துடா..."
"அப்படீன்னா அவன் கையிலும் கொடு ஒரு கட்டாரியெ." வேறொரு ஆள் சொன்னான்.
வாலிபன் முகத்தில் சோகமான புன்னகை.
"எனக்கு கட்டாரி, பிச்சுவா எல்லாம் வேண்டாம்."
அவனுடைய குரலில் உறுதி தெரிந்தது.
"வாங்குடா கட்டாரியெ" ஒரு கர்ஜனை கேட்டது.
"எனக்கு கட்டாரியெல்லாம் வேண்டாம்." வாலிபனின் குரல் உயர்ந்தது.
"ஆயுதங்களைப்போட்டுவிட்டு எல்லோரும் வீட்டிற்குப்போங்கள்."
"ச்சீ...நீ யாரடா அதைச்சொல்ல..."
"நான் உங்களில் ஒருவன். உங்களின் சகோதரன்."
"அப்படியானால் கட்டாரியெ வாங்கிக்கொண்டு நட. பைத்தியங்களைக் கொல்லணும்.}
"அவர்களும் என்னுடைய சகோதரர்கள்தான்."
"அப்படின்னா நீயும் சாவணும்...குத்துங்கடா அவனை."
வாலிபனின் மார்பில் ஒரு பிச்சுவா ஓங்கி இறங்கியது.
"அய்யோ" வாலிபன் அலறினான்.
மல்லாந்து வீழ்ந்த வாலிபன் இரத்தவெள்ளத்தில் கிடந்து நெளிந்தான்.
"கூடப்பிறந்தவங்களெக் கொல்லாதீங்கடா."
பேயைப்போல் சிரித்துக்கொண்டு கலகக்காரர்கள் ஓடிப்போனார்கள்.
கொஞ்சதூரத்தில் இன்னொரு கூக்குரல் கேட்டது."அல்லாஹூ ...அக்பர்..."
"பைத்தியங்கள்...பைத்தியங்கள்..."
வாலிபனின் கண்கள் மூடின. குரல் அடங்கியது.
பைத்தியம் தெளிந்தது.
அமைதி திரும்பியது.
அது மயானத்தை நினைவு படுத்தியது
ஓடிய இரத்தம் மண்ணில் கலந்து மண்ணாகிப்போனது.
இனிமேலும் வடிப்பதற்கு கண்ணீர் இல்லாமல் போனது.
பிசாசுகள் ஓடித்திரிந்த இடங்களில் மனிதர்கள் நடந்துபோகத் தொடங்கியிருந்தனர்.
பப்புபிள்ளையும், குஞ்சுமொய்தீனும் வைத்திருந்த கடைகளில் கரிக்கட்டைகளும்,
சாம்பலும், அஸ்தியின் மிச்சமீதங்கள் மட்டுமே கிடந்தன.
கடைகளும், அவைகளோடு கடைக்கார்களின் சடலங்களும் எரிந்துகிடந்தன.
சற்றுத்தொலைவில் தீச்சுவாலையில் பற்றியெரிந்து இலைகருகிப்போன ஒரு
மாமரத்தினடியில் கொஞ்சம் மூங்கிலும், கீற்றுகளும் கிடந்தன.
முகம்மது ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்தான். குஞ்சுமொய்தீனின் மகன் அவன்.
பதினேழாம் வயதில் விதவையாகிப்போன தாயையும் மூன்று தம்பிகளையும்
கட்டிக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவன் தலையில் விழுந்திருந்தது.
கடை இருந்த இடத்திற்கு வந்த முகம்மது சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுடைய
கண்களில் கண்ணீர் பெருகியது. தந்தையின் சிதைச்சாம்பலில் தனயனின் கண்ணீர்த்
துளிகள் விழுந்து அஞ்சலி செலுத்தியது.
கோபாலன் கீற்றையும் மூங்கிலையும் தூக்கிகொண்டு வந்ததை முகம்மது பார்க்கவில்லை.
"என்னடா முகம்மது...ஏண்டா அழுகிறெ...?" கோபாலன் ஆறுதலாகக்கேட்டான்.
"இதப்பாரு பிள்ளை. அழாம எப்படி இருக்கமுடியும் பிள்ளை" கண்ணீரைத்துடைத்துக்
கொண்டே கோபாலன் சொன்னான்.
"இனிமே அழுது என்னாகப்போகிறது?... சாகவேண்டியவரெல்லாம் செத்துப்போனார்கள்.
நாம நமக்குள்ள வேலையைப்பார்ப்போம்."
அவன் தலைமீதிருந்த கீற்றுக்கட்டையும், மூங்கிலையும் மாமரத்தடியில் போட்டு
விட்டு வந்தான்.
முகம்மதுவிற்கு ஆறுதலாக கோபாலன் சொன்னான்.
"அழாதேடா முகம்மது...அழாதே..."
"எப்படி அழாமல் இருக்கமுடியும் பிள்ளை... அம்மாவும், மூணு சின்னஞ்சிறுசுகளும்...
எப்படி எல்லாரேயும் காப்பாத்தப் போகிறேன்னு தெரியல்லே."
""முகம்மது...எனக்கும் அம்மா இருக்காங்க. ஒரு தங்கச்சி இருக்கா. அண்ணங்க
ரெண்டுபேரும் செத்துப்போய்ட்டாங்க."
"இனிமே என்ன செய்யப்போறோம் பிள்ளை?"
"அண்ணனோட தொழிலைத்தான் நான் செய்யப்போறேன்."
"கீத்தும் மூங்கிலும் அதுக்குத்தானா?"
"கடைக்காக ஒரு கொட்டகை போடணும்."
"பிள்ளை. எனக்கு அதுக்குக்கூட வழியில்லை. கீத்துமில்லை...மூங்கிலுமில்லை."
கோபாலன் முகம்மதுவின் கையை ஆதரவோடு பற்றிக்கொண்டான்.
"கவலைப்படாதே முகம்மது...நமக்கு ஒரு கடை போதும். பாதி எனக்கும்
மறுபாதி உனக்கும்... சரிதானே?"
நிறைந்த கண்களோடு முகம்மது கோபாலனின் முகத்தைப்பார்த்தான்.
"பிள்ளை...உனக்கு சம்மதமென்றால்....."
"எனக்குசம்மதம் முகம்மது. ஒன்னோட வாப்பாவும், என்னோட அண்ணனும் ஒருதாயோட
பிள்ளைகள் மாதிரியில்லையா பழகினாங்க."
"பழகி என்ன செய்யறது பிள்ளை. கிறுக்குபிடிச்சிபோயி ஒருத்தரை
ஒருத்தரில்லே குத்திக்கொண்டாங்க கடைசியிலே."
"அது சரிதான் முகம்மது. எங்கோ யாரோ குஸ்திபோட்டுக்கப்போய் முகம்மதுவின்
வாப்பவும் என்னோட அண்ணனும் குத்திக்கொண்டது கிறுக்குத்தனமில்லையா?"
"அதைவிட கிறுக்குத்தனம் அது ஊரு முழுக்கப்பரவிப்போனது."
"இது வரக்கூடாத கிறுக்கத்தனம் முகம்மது....மனிதர்கள் மனிதர்களையே கொல்லும்
கிறுக்குத்தனம்."
"வடக்கே இதுபோல ஒருதடவை கிறுக்குபிடித்தது என்று கேள்விப்பட்டிருக்கோமில்லையா?"
"ஆமாம்...வங்காளியும்...பீகாரியும்."
பப்புபிள்ளையின் தம்பியும், குஞ்சுமொய்தீனின் மகனும் ஒருத்தரை ஒருத்தர் கழுத்தறுக்கும்
பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி புலம்பித்தீர்த்தனர்.
பழைய கடை இருந்த இடத்தில் கிடந்த சாம்பலையும், கரிக்கட்டைகளையும், அஸ்தி துண்டுகளையும்
வாரி அள்ளி எறிந்தன்ர். இரண்டு பேரும் சேர்ந்து புதிய கடைக்கு தூண்களை நட்டனர்.
அன்று சாயுங்காலம் அங்கே ஒரு புதிய கடை உருவாகி இருந்தது.
அடுத்தநாள் காலையில் கோபாலனின் டீ வியாபாரமும், முகம்மதுவின் வெற்றிலை பாக்குக்கடையும்
வியாபாரத்தை ஆரம்பித்தன.
கடையின் முன்புறம் தொங்கிக்கொண்டிருந்த ஒரு காகிதத்தில் இப்படி எழுதியிருந்தது.

"பைத்தியங்களுக்கு அனுமதி இல்லை."

காதல் கீதம் இசைக்கும் திமிங்கலங்கள் (029)

கிரீன்லாந்தின் வடமேற்கே, டிஸ்க்கோ வளைகுடா பகுதியில் கோபன்கேகன் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆர்ட்டிக் களப்பணி நிலையத்தை நிறுவி இருக்கிறது.

டிஸ்க்கோ வளைகுடாவின் பனிக்கட்டிகள் நிறைந்த நீரில் ஒருகாலத்தில் பெருமளவில் காணப்பட்ட வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் படிப்படியாக குறைந்துபோயின.

அழிந்துபோன உயிரினங்களின் பட்டியலிலும் அவை இடம்பெற்றன.

இவற்றின் தோலுக்கடியில் உள்ள அடர்த்தியான கொழுப்பு படிவங்களும், எலும்புகளும் திமிங்கல வேட்டைக்காரர்களுக்கு இலக்காகிப்போயின.

ஆனால் நிலைமை இப்போது தலைகீழ்.

18 மீட்டர் நீளமும் 100 டன் எடையும் கொண்ட வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் தற்போது டிஸ்க்கோ வளைகுடா பகுதிக்கு திரும்பிவரத்தொடங்கியுள்ளன.

உயர்ந்துவரும் புவிவெப்பம் காரணமாக இதுவரை பனிக்கட்டிகளால் அடைபட்டிருந்த வடமேற்கு பாதை 125,000 ஆண்டுகளில் இப்போதுதான் உருகத்தொடங்கியுள்ளது.

ஆண்டின் சில மாதங்களில் இந்த பனிப்பாறைகள் உருகி வழிவிடுவதால் வடபசிபிக் கடலில் வாழும் வில்வடிவ திமிங்கலங்கள் டிஸ்க்கோ வளைகுடாவிற்குள் இடம்பெயர்ந்து ஏற்கனவே அங்குவாழும் திமிங்கலங்களுடன் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவற்றின் வாய் வில்வடிவத்தில் வளைந்து இருக்கும். கீழ்த்தாடை வெள்ளை நிறமாக இருக்கும். வயிற்றில் வெள்ளைப்புள்ளிகள் காணப்படும்.

பெண் திமிங்கலங்கள் மூன்று முதல் ஆறு வருடங்களில் குட்டி போடும் இயல்புடையவை.

குட்டிகள் பிறந்தவுடன் நீலமும் சாம்பலும் கலந்தநிறத்தில் இருக்கும்.

பின்னர் படிப்படியாக நீலம் கலந்த கறுப்புநிறத்திற்கு மாறுவதும், பின்னர் தாயின் நிறத்திற்கு மாறுவதும் நடைபெறும். மற்ற சிறிய கடல்வாழ் உயிரினங்களை இவை உண்டு வாழ்கின்றன.

நீருக்கடியில் எழுப்பப்படும் ஒலிகளை ஆராயும்போது, இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் தங்களுடைய இணையை ஈர்ப்பதற்காக காதல் கீதம் இசைப்பது தெரியவந்துள்ளது.

திமிங்கலங்களின் காதல் கீதம் என்பது ஒரு புதிய நிகழ்ச்சியல்ல.

ஆனால் இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் பலகுரலில் காதல் கீதம் இசைப்பதுதான் புதுமையான நிகழ்வு. அவை முதலில் இரண்டு வெவ்வேறு குரல்களில் கீதமிசைக்கின்றன. பின்னர் அவற்றை இணைத்தும் ஒலியெழுப்புகின்றன.

மற்ற திமிங்கலங்கள் இதுபோன்ற இசையை எழுப்புவதில்லை.

இதில் வியப்பைத்தரும் இன்னொரு செய்தியும் உண்டு. ஓர் ஆண்டில் திமிங்கலங்கள் எழுப்பும் இந்த இசையை அடுத்த ஆண்டில் எழுப்புவது இல்லையாம். ஒவ்வோர் ஆண்டும் புதிய காதல்கீதங்களை இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் உருவாக்கி இசைப்பது ஏன்?

திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதால் இனச்சேர்க்கைக்கான எதிர்பாலினரின் எண்ணிக்கையும் குறைந்துபோனது. எதிர்பாலினரை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஒவ்வோர் ஆண்டும் புதிய காதல்கீதங்களை இவை இசைக்கின்றன என்பது வியப்பான செய்தி.

இவற்றின் காதல் கீதம் உயர் அதிர்வெண் கொண்டது. 100 முதல் 2000 அதிர்வெண்கள் கொண்ட ஒலியில் இந்த கீதங்களை இசைக்கின்றன என்கிறார் கோபன்கேகன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஓட்டி மரியா டெர்வோ என்னும் ஆய்வாளர்.

இவர் வில்வடிவ திமிங்கலங்களின் காதல்கீதங்களை ஆய்வுசெய்து வருகிறார். இந்த காதல் கீதங்களைக்கொண்டு அவற்றை இசைப்பது ஆணா பெண்ணா என்பதை இதுவரை தீர்மானிக்க இயலவில்லை.
வில்வடிவ தலையுடைய திமிங்கலங்களின் காதல்கீதத்தை நீங்களும் இங்கே கேளுங்கள்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/07/090729074523.htm

Wednesday, February 9, 2011

கனிகளின் சிகரம் பப்பாளி (028)




கனிகளின் சிகரம் பப்பாளி. நமக்குத்தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மரம் இது.

கர்ப்பிணிப்பெண்களுக்கு ஊட்டச்சத்துக்களை வாரிவழங்கும் பழம் இது. கருவை காக்கும் பழமாக இருப்பதைப்போலவே கருவை அழிக்கும் பழமாகவும் இது இருக்கிறது.

பப்பாளிப்பழத்தில் இருபதுக்கும் அதிகமான சத்துக்கள் உள்ளன. இதன் பழம், காய், பால், விதை அனைத்தும் மருத்துவப்பண்புகளைக்கொண்டது. வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த பழம் இது. மலத்தை இளக்கி மலச்சிக்கலைப்போக்கும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு. பப்பாளிக்காய்களை சமைத்துச்சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

பப்பாளியை பயிர்செய்வதற்கு தனியாக கவனம் ஏதும் செலுத்தவேண்டியதில்லை. பப்பாளி மரங்களை கழிவுநீரில் வளர்த்தால் அதன் குணங்கள் குறையக்கூடும். கன்று வளர்ந்து ஒரு வருடத்தில் பழங்களைத்தரத்தொடங்கும். கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை பலன் கொடுக்கும்.

பப்பாளியில் மூன்று வகைகள் உண்டு. ஆண் மரம், பெண் மரம், அலிமரம்.

ஆண் மற்றும் அலிமரத்தின் பூக்கள் சிறிதாய் இருக்கும். ஆண் மரத்தின் பூக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

அலிமரத்தின் பூக்களால் எந்தப்பயனும் இல்லை.

பெண்மரத்தின் மலர்கள் பெரியதாக இருக்கும்; காய்களும் பெரியதாக சுவை கூடியும் இருக்கும்.

செம்மண் பூமியில் நன்றாக வளரும் மரம் இது. பப்பாளி மரத்தின் தண்டுகள் வலிமை குறைந்தவை.

பப்பாளிப்பழங்களை சேதமில்லாமல் பறிக்க சற்று நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

நன்றி: கலைக்கதிர்

Monday, February 7, 2011

கல்லீரல் புத்துருவாக்கம் (027)





கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், கல்லீரலை கொடையாக வழங்கக்கூடியவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.

இந்த சிக்கலைத்தீர்ப்பதற்கான கண்டுபிடிப்பு ஒன்று அண்மையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. Wake Forest University Baptist Medical Center அறிவியலாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். ஆய்வுக்கூட சூழலில் ஒரு கல்லீரல் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது வெற்றிகரமாக கருதப்பட்டாலும் இன்னும் பல படிநிலைகளை கடந்துவரவேண்டியுள்ளது.

விலங்குகளின் கல்லீரலில் உள்ள அனைத்து செல்களும் மென்மையான டிட்டர்ஜண்ட் உதவியால் அகற்றப்பட்டன. ஆனால் செல்களை தாங்கிப்பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு மட்டும் அப்படியே இருக்குமாறு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு decellularization என்றழைக்கப்படுகிறது.

Decellularization காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தில் முதிர்ச்சியடையாத நிலையில் உள்ள மனிதசெல்கள் (progenitors) நிரப்பட்டன. இரத்தக்குழாய்களை உருவாக்கும் endothelial செல்களும் இந்த வெற்றிடங்களில் நிரப்பப்பட்டன. இந்த அமைப்பு முழுவதும் ஒரு உயிரி உலையினுள் (bioreactor) வைக்கப்பட்டது.

உயிரி உலைகள் உறுப்பு முழுமைக்கும் ஆக்சிஜனையும் உயிரூட்டப்பொருட்களையும் வழங்கவல்லவை. ஒரு வாரம் கழித்து உருவான மனித திசுக்கள் ஆராயப்பட்டபோது அவற்றில் மனித கல்லீரலின் செயல்பாடு காணப்பட்டது.

ஆய்வுக்கூடத்தில் இதற்கு முன்பாக விலங்குகளின் கல்லீரல்கள் உருவாக்கப்பட்ட போதிலும் மனித கல்லீரலை உருவாக்கும் முயற்சியின் தொடக்கநிலை வெற்றி இது.

உயிரி தொழில்நுட்பத்தால் விளைந்த கல்லீரலைக்கொண்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகளைக்கூட ஆராய முடியும்.

ஆய்வுக்கூடத்தில் சிறுநீரகம், பித்தப்பை போன்ற உறுப்புகளை புத்துருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளை அறிவதற்கு இந்த ஆய்வு உதவக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.


இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2010/10/101030111057.htm

Saturday, February 5, 2011

கருத்தடை மாத்திரை இப்போது ஆணுக்கும்....(026)




The Federation of American Societies for Experimental Biology (FASEB) தன்னுடைய டிசம்பர் 2009 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஆண்களின் இனப்பெருக்கத்திறனை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் இப்போது சாத்தியமாகி உள்ளதாக தெரிவிக்கிறது.

1960 ல் இருந்து பெண்களுக்கு மட்டுமே புழக்கத்தில் இருந்துவந்த கருத்தடை மாத்திரைகள் இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்குமாம்.

ஆண்களுக்கான விந்தகங்களில் ஆண்மை ஊக்க ஹார்மோன்கள் எங்கு, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக்கண்டறியும் ஆய்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் விளைவு இது.

இந்த ஆய்வுகளின் பயனாக ஆண்களின் இனப்பெருக்கத்திறனை வேண்டும்போது திறந்து மூட முடியும். அனைத்து ஆய்வுகளும் இப்போது எலிகளில் நடத்தப்பட்டிருந்தாலும், மனிதர்கள் உட்பட்ட பாலூட்டிகளுக்கு இந்த முடிவுகள் பொருந்தக்கூடியதே.

ஆண்களுக்கான கருத்தடை மருந்துகள் மாத்திரைகள் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பான அம்சம். விந்தணு எண்ணிக்கை குறைபாடு காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இந்த ஆய்வுகள் பயன்படுவதாக டாக்டர் மைக்கேல் வெல்ஷ் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இவர் இங்கிலாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் இயங்கும் தி குவீன் மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் இனப்பெருக்க உயிரியல் துறை விஞ்ஞானியாவார்.

இந்த ஆய்விற்கு பயன்படுத்திய எலிகளை டாக்டர் வெல்ஷ் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரித்துக்கொண்டனர். முதல் குழுவைச்சேர்ந்த எலிகள் இயல்பானவை. இரண்டாவது குழுவைச்சேர்ந்த எலிகளின் விந்தகங்களில் peritubular myoid எனப்படும் தசையொத்த பொருளில் இருந்து ஜீன்கள் அகற்றப்பட்டிருந்தன. இந்த ஜீன்கள் ஆண்மை ஊக்க ஏற்பிகளை இயங்கச்செய்யக்கூடியவை. இதன்காரணமாக இரண்டாவது குழுவைச்சேர்ந்த எலிகளுக்கு விந்து உற்பத்தி குறைந்து இனப்பெருக்கம் தடைப்பட்டது.

1960ல் பெண்களுக்கான கருத்தடை மாத்திரகள் புழக்கத்திற்கு வந்தன. அப்போதே, ஆண்களுக்கும் இதுபோன்ற மாத்திரைகள் வேண்டும் என்று பெண்கள் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டது.

கடினமான முயற்சிக்குப்பிறகு பெண்களின் ஆவல் இப்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை உருவாக்குவது மட்டுமே இந்த ஆய்வின் நோக்கமாக இருந்தாலும்கூட, ஆண்மைக்குறைவின் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த ஆய்வுகள் பயன்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/11/091130112419.htm