Saturday, February 28, 2009

நலிந்தவருக்கு ஒரு நல்ல திட்டம்...


ஆறாம் வகுப்பு மாணவி அமுதா. வெளுத்து மெலிந்த தேகம். கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு.
அரசு கொடுத்த சீருடைதான். நீலநிற அரை பாவாடை. வெள்ளை சட்டை. காதுகளில் தோடு
இருந்ததற்கு அடையாளமாக துளைகள். இப்போது அதில் குச்சி மட்டும். கணக்குப்பாடத்தில்
அபார ஞானம். வேகமாக கணக்குகள் செய்வதால் ஆசிரியை அவளை உதவிக்கு அழைத்துக்
கொள்வார்.
மெதுவாகப்பேசுவாள் அமுதா. விளையாட்டு வகுப்பிற்குப் போகும்போது உடற்கல்வி
ஆசிரியர் அவளை ஓரமாக உட்காரச்சொல்லிவிடுவார். ஏன் அமுதாவிற்கு என்ன குறை?
பிறவியிலேயே அமுதாவிற்கு இதயத்தில் குறைபாடு. இதயத்தில் ஓட்டை இருக்கிறது.
ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு கூட்டமாக வந்து மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள்
கண்டுபிடித்த உண்மை அது.
பக்கத்தில் இருக்கும் மாவட்ட மருத்துவமனைக்குப் போய் பெரிய டாக்டரைப்பார்க்கும்படி
சிபாரிசு கடிதம் கொடுத்துவிட்டு டாக்டர் கூட்டம் போய்விட்டது.
ஆசிரியை அமுதாவிடம் அப்பாவை கூட்டிவரச்சொல்லி ஒரு மாதமாகிவிட்டது.
ஆள் வந்தபாடில்லை. ஒரு மாலை நேரத்தில் அமுதாவின் தாய் மட்டும் வந்தார்.
அமுதாவின் அப்பா ஒரு தச்சுத்தொழிலாளியாம். வேலைக்குப்போகாவிட்டால்
சம்பளம் கிடைக்காதாம். பள்ளிக்கு வந்துபோக நேரமில்லையாம். அமுதாவிற்கு
நடந்தால் இரைக்கும் என்றும் வீட்டில் சோர்ந்து படுத்து விடுவாளென்றும்
அந்தத்தாய் சொன்னபோது ஆசிரியைக்கு அது வியப்பான செய்தியாகத் தெரியவில்லை.
அதற்கு காரணம் இருக்கிறது.
பள்ளிக்கூடங்களில் பிறவி இருதய குறைபாடுகளுடன் உள்ள குழந்தைகளை ஆசிரியர்கள்
ஒவ்வொரு வருடமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தப்பிள்ளைகள் நன்றாக படிப்பவர்களாக இருந்துவிடும்போது அவர்களின்மீது கூடுதல்
இரக்கம் பிறந்து விடுகிறது.
ஆசிரியர்களால் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்ய முடியாத நிலை.
தமிழக அரசின் ஒரு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரக்ககுணம்
உடைய எவரும் வரவேற்க வேண்டிய திட்டம் இது.
இந்த திட்டத்தின் பெயர் "முதலமைச்சர் இளம் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம்"
இருதயத்தில் குறைபாடு உள்ள இளம் சிறார்கள் பள்ளியிலேயே சோதனை செய்து
கண்டறியப்படுகிறார்கள்.
சாதாரண இருதய மருத்துவ சிகிச்சைக்கு 10,000 ரூபாயும்
சாதாரண திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 60,000 ரூபாயும்
சிக்கலான திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 70,000 ரூபாயும் அரசு வழங்குகிறது.
சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் அவர்கள் விரும்பும் மருத்துவ மனைகளில்
அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்பது ஒரு நல்ல விஷயம்.
இந்ததிட்டத்தை அனைத்து தொண்டு நிறுவனங்களும் கண்காணித்து ஒருங்கிணைத்து நடத்தவேண்டும்.
இந்த திட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும்.
இதுவே நாகரிக உலகத்தின் வேண்டுதலாகும்.

மு.குருமூர்த்தி

No comments:

Post a Comment