Friday, November 20, 2009

இது என்ன கூத்து?




தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு விசித்திரமான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழாசிரியர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுப்பதாகவும், இதன் காரணமாக தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள் மாணவர்களுக்கு அறிமுகமில்லாமல் போய்விடுவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அரசாங்கப்பள்ளிகளுக்கும், அரசாங்கத்தின் உதவிபெற்று நடத்தப்படும் பள்ளிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கட்டிப்போட்டிருக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள் சதா சர்வ காலமும் ஆங்கிலம் கலந்த ‘டமிலில்’ தொழில் செய்துகொண்டிருக்கும்போது வகுப்பறையை மட்டும் செப்பனிட்டுப்பயனில்லை.

தமிழுணர்வையும், தமிழையும் தழைக்கச்செய்யவேண்டிய பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே ‘டமில்’ நிகழ்ச்சிகளில் காசு பார்த்துக்கொண்டிருக்கும்போது, பாவம் இந்த தமிழாசிரியர்கள் என்ன செய்யமுடியும்?

Saturday, November 7, 2009

மணக்கிறது மக்களாட்சி





இப்போதெல்லாம் ஒரு சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற ஒரு கோடி ரூபாய் தேவைப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் தேர்தல் செலவை சந்திக்க வேட்பாளரும் அரசியல் கட்சிகளும் துண்டேந்தி வாக்காளரை படியேறி சந்தித்தனர்.

அப்போதெல்லாம் நிதிபெறுவதற்காக வாசற்படியேறிச்சென்ற வேட்பாளர்கள் இப்போது ‘நிதி’ கொடுப்பதற்காக படியேறிச்சென்று வாக்காளர்களை சந்திக்கிறார்கள்.

இப்போது யாரும் துண்டேந்தி நிதி திரட்டுவது இல்லை.

ஆனால் தேர்தல் நிதியளிப்பு கூட்டங்கள் நடத்துவதும் ‘சூட்கேஸ்’ கட்சித்தலைவரிடம் கொடுக்கப்படுவதும் நடைபெறுகிறது.

இந்த சூட்கேஸ்களில் பணம் எப்படி திரட்டப்படுகிறது?

அரசியல் கட்சிகள் தங்களுடைய தொண்டர்களைக்காட்டிலும் தொழிலதிபர்களையே தேர்தல் நிதிக்காக நம்பியிருக்கின்றனர்.

தொழிலதிபர்களும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்குமே தேர்தல்நிதி கொடுக்கிறார்கள்.

ஆனால் தங்களுக்குள் ரகசியமாக பேசிவைத்துக்கொண்டு எந்தக்கட்சி வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஐம்பது சதவீதம் தொகையை கூடுதலாக கொடுக்கி
றார்கள்.

பணம் வாங்கிக்கொண்ட கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தால், தொழிலதிபர்கள் என்னென்ன சலுகைகள் வேண்டுமென்று கேட்கிறார்களோ அதையெல்லாம் அரசு செய்யவேண்டும்.

எதிர்க்கட்சியில் அமர்ந்தால் தொழிலுக்கு இடையூறு செய்யும் பிரச்சினையான கேள்விகளை சட்டமன்றத்தில் கேட்கக்கூடாது.


'விலைவாசியைக்குறைக்கிறேன்' என்று வியாபாரிகளுக்கு கடிவாளம் போடக்கூடாது.

'அன்னாடங்காச்சிகளுக்கு ஆதரவாக இருப்பேன்' என்று ஆன்லைன் வியாபாரத்திற்கு குறுக்கே நிற்கக்கூடாது.

இவையெல்லாம் ஜனநாயக ஒப்பந்தங்கள்.

மீறினால் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வெடிக்கும்.

அரசின் நடவடிக்கைகளை கூடவே இருந்து கண்காணிக்க சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கவேண்டும்.

எந்த அமைச்சரவையிலாவது, எல்லா அமைச்சர்களும் ‘கக்கன்’களாக இருந்து பார்த்திருக்கிறோமா?

Thursday, November 5, 2009

சிவப்புக்கம்பளமும் ரத்தினக்கம்பளமும்



அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மனை ஒதுக்கீடு, வீடு ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை இவற்றுக்கெல்லாம் அமைச்சர் ஒதுக்கீடு, அல்லது சிறப்பு ஒதுக்கீடு என்று பெயரிட்டு ‘ஒதுக்கிக்கொண்டு’ இருப்பது 05.11.2009 நாளிட்ட தினமணி தலையங்கம் வாயிலாக அன்னாடங்காச்சிகளுக்கு தெரியவந்துள்ளது.

பாமரனுக்கு இந்த ஊழல் தெரிந்துபோகாமல் இருப்பதற்காக இந்த அதிகார சுரண்டலுக்கு Discretionary Quota என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த ஊழலின் ஒரு முனை இப்போது சிக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணைக்காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு இந்த அமைச்சர் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாணவர்களும் காவல்துறை ஏடிஜிபி இருவரின் பிள்ளைகள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

விவகாரம் இப்போது முற்றி சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது.

இந்த ஊழலின் சங்கிலிக்கண்ணிகளை நாம் எளிதாக ஊகித்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் பணக்காரவீட்டுப்பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகமே சிவக்கம்பளம் விரிக்கும் என்றால், தனியார் பல்கலைக்கழகங்கள் நன்கொடை இல்லாமலேயே ரத்தினக்கம்பளம் விரிப்பார்கள்தானே!

Tuesday, November 3, 2009

மாறிப்போன வகுப்பறையில் மாறாத உளவியல்






வகுப்பறைச்சூழல் மாறிப்போன காலம் இது.

ஆசிரியர்கள் இதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஆசிரியர் பயிற்சியின்போது அளிக்கப்படும் உளவியல் கல்வியில் இதற்கென மாற்றங்களைக்கொண்டுவர வேண்டியது அவசியம்.

இந்தக்கருத்தை வலியுறுத்தும் தலையங்கம் தினமணி 02.11.2009 ல் வெளியாகியுள்ளது.

தலையங்கத்தின் தலைப்பு “மனம் நோகாமல் சொல்” என்பதாகும்.

மாணவரின் மனம் நோகாமல் ஆசிரியர் கற்பித்தல் பணியில் ஈடுபடவேண்டியது இக்கால அவசியம்.

இக்கால மாணவர்கள் தங்களுக்கு பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.

இந்த எண்ணப்போக்கு ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பாடத்திட்டம், கற்பிக்கும் முறை இவற்றையெல்லாம் அலட்சியக்கண்ணோட்டத்தோடு காணத்தூண்டுபவை.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழாசிரியர் சோலையின் அழகு, வண்டுகளின் ஓசை, நீர்த்தடாகம், நீந்திவிளையாடும் மீன், மீன் முட்டியதால் பால்சுரந்த பசுக்கள், தலைவன், தலைவி, தலைவனின் பிரிவு, தலைவியின் துயரம், பசலை படர்ந்த மேனி, கழன்றுவிழும் வளையல்கள் என்றெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்.

மாணவர்களும் கவனமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

பாடத்தினூடே தமிழுணர்வும், தமிழன் என்ற உணர்வும் ஊட்டப்படும்.

ஆனால் இன்றைய நிலையில் இந்த வர்ணனைகள் மாணவர்களுக்கு ஒரு “சப்பை மேட்டரா”க தெரியக்கூடும்.

இந்தச்சூழலில், மாணவர்களை முட்டிபோடச்சொல்வது, பிரம்பால் அடிப்பது, வேறுவகைகளில் அவமானப்படுத்துவது என்பதெல்லாம் கல்வி உளவியலுக்கு முரண்பட்டச்செயல்கள் என்பதை இந்த தலையங்கம் எடுத்துக்கூறுகிறது.

இன்றைய கல்வியாளர்கள் அரசியல்வாதிகளுக்குள் அடங்கிப்போயிருக்கிறார்கள்.

அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும்.

ஆனால் ஆசிரியர் பயிற்சியின்போது அளிக்கப்படும் உளவியல் பாடத்திட்டத்தில் மட்டும் தேவையான மாற்றங்களை உடனடியாக கொண்டுவரட்டும்.

இல்லையெனில் எதிர்காலம் பொறுப்பானவர்களை மன்னிக்காது.