Thursday, July 15, 2010

பெரீரீரீரீ.....ய மனிதர்களுக்கு சிறிய அன்பளிப்பு

தமிழ்நாட்டில் கல்வியை வியாபாரமாக்கிய பெரீரீரீரீ...ய மனிதர்களுக்கு காமராஜர் பிறந்த நாள் நினைவாக ஏதாவது அன்பளிப்பு கொடுக்கவேண்டுமென்று ஆசை.

இந்தப்படங்கள் கிடைத்தன.

இவை போதும் என்று நினைக்கிறேன்.



Wednesday, July 7, 2010

லஞ்சாதிபதியே நமஹ!




அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருப்பது யார்?

கடவுளா? லஞ்சமா?

கொஞ்சகாலத்திற்கு முன்பு எங்கும் நிறைந்தவன் பரம்பொருளாக இருந்திருக்கலாம்.

இந்த மனிதர்கள் பகுத்தறிவாளர்களாக மாறிப்போன பிறகு அந்த இடத்தை லஞ்சமும், ஊழலும் பற்றிப்பிடித்துக்கொண்டன.

லஞ்சம் மனிதர்களோடு இரண்டறக்கலக்கவேண்டும் என்பதற்காகவே அரசு சில திட்டங்களை வைத்திருக்கிறது.

மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்திட்டம் என்றொரு திட்டம்.

மணப்பெண்ணுக்கு 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இது.

இந்த உதவித்தொகையை பெற்றுத்தரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் சமூக நல விரிவாக்க அலுவலருக்கு இன்றைய மார்க்கெட் நிலவரப்படி லஞ்ச நிர்ணயம் 700 ரூபாய்.

07.07.2010 நாளிட்ட செய்தித்தாளில் இருந்து இன்றைய லஞ்ச மார்க்கெட் நிலவரம் தெரியவந்திருக்கிறது.

டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி உதவித்திட்டம் என்றொரு திட்டம்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பெற்றுத்தருவதற்காக செவிலியர்கள் லஞ்சம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இன்றைய மார்க்கெட் நிலவரம் தெரியவில்லை.

திருமணத்தின்போதும், கருவாக வளரும்போதும் ஊடாடும் லஞ்சம் வளர்ந்து பள்ளிக்கூடம்போகும்போது நம்மை விட்டுப்போய்விடுமா என்ன?

சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று இவற்றையெல்லாம் வழங்கும் கடவுளுக்கு கிராம நிர்வாக அலுவலர் என்று பெயர்.

இந்தக்கடவுளை மேற்பார்வை செய்யும் பெரிய கடவுளர்களுக்கு வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என்றெல்லாம் அச்சுறுத்தும் பெயர்கள்.

ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவரமறிந்த மாணவனிடம் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று இவற்றை வாங்குவதற்கு மார்க்கெட்டில் எவ்வளவு லஞ்சம் என்று கேட்டுப்ப்பாருங்கள்.

பளிச்சென்று ஒரு புன்னகையோடு பதில் வரும்.

“ஐம்பது ரூபாய்”

திருமணத்தில் தொடங்கி, கருவோடு வளர்ந்து, பள்ளிப்பருவத்திலே மனதில் பதிந்த லஞ்சம், அரசியல்வாதியான பிறகு விட்டுப்போய்விடுமா என்ன?

தமிழ்நாட்டு அரசியல்வாதியிடம் “லஞ்சம் பெருத்துப்போச்சே” என்று அலறிப்பாருங்கள்.

உடனடியாக பதில் வரும்.

கேரளாவை விட, கர்நாடகத்தைவிட, ஆந்திரத்தை விட தமிழ்நாட்டில் லஞ்சரேட் குறைவுதான் என்று புள்ளிவிவரம் கொடுப்பான் அந்த அரசியல் வித்தகன்.

ஏதாவதொரு கோவிலில் சொல்லித்தொலைப்போம்!




தமிழக கல்வித்துறையின் புகழ் மகுடத்தில் இன்னுமொரு வண்ண இறகு கூடியிருக்கிறது.

அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருவது....

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவது....

கல்வி வியாபாரத்தில் புதுப்புது வியாபாரிகள் நுழைந்து கல்லா கட்டுவது....

தமிழ்க்குழந்தைகள் நாவில் தமிழை அந்நியப்படுத்துவது....

பள்ளிக்கூடம் போகும் ஒட்டகங்களாக தமிழ்க்குழ்ந்தைகளை பொதி சுமக்க வைப்பது....

அரசு விதித்த கல்விக் கட்டணங்களை ஏறிமிதிக்கும் தனியார் பள்ளிகளின் பக்கம் தன்னுடைய குருட்டுப்பார்வையை திருப்புவது....

கட்டணக்கொள்ளையால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் அவலக்குரலுக்கு தன்னுடைய செவிட்டுக்காதைக்காட்டுவது....

என்று பலவண்ண இறகுகள் இன்றைய கல்வித்துறையின் புகழ் மகுடத்தை அலங்கரிக்கின்றன.

இவை போதாதென்று இப்போது பாடநூல்கள் தட்டுப்பாடு என்றொரு கூக்குரல்.

இது அலட்சியப்படுத்தக்கூடிய குரல் அல்ல.

அபயக்கரம் நீட்டவேண்டிய குரல்.

1 ஆம் வகுப்பிற்கு நான்கு புத்தகங்கள்.
பாடநூல் கழகத்திடம் பள்ளிகள் நேரடியாக வாங்கினால் 200 ரூபாய் விலையாம்.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் வாங்கினால் 240 ரூபாயாம்.

6ஆம் வகுப்பிற்கான ஐந்து புத்தகங்களும் பாடநூல் கழகம் 250 ரூபாய்க்கு விற்கும்போது, விற்பனையாளர்கள் மட்டும் 325 ரூபாய்க்கு விற்கும் நிலை.

விலை குறைவாக இருக்கிறதே என்று பாடநூல் கழகத்திற்கு பணம் செலுத்திய பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்கள் அனுப்பப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

போகட்டும்.....கடையிலாவது வாங்கி பிள்ளைகளை சமாதானப்படுத்தலாமென்றால் புத்தகவிலையேற்றம், விற்பனையாளர் கமிஷன் குறைவு ஆகியகாரணங்களால் 1 ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு புத்தகங்களை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

பள்ளிக்கூட பிள்ளைகளின் கவலையைத்தீர்ப்பதில் விற்பனையாளர்களுக்கு ஆர்வமில்லை.

மாணவர்களின் படிப்பு பாழாகிறதே என்று கல்வித்துறைக்கும் கவலையில்லை.

தான் பெற்றெடுத்த பிள்ளை எக்கேடாவது கெட்டுப்போகட்டும் என்று பெற்றவன் விட்டுவிட முடியுமா என்ன?

ஏதாவதொரு கோவிலிலாவது சொல்லித்தொலைப்பானில்லையா