Thursday, August 27, 2009

புதுவாழ்வு பெறுமா சமச்சீர் கல்வி?

சமச்சீர்கல்வி மீண்டும் செய்தித்தாட்களில் இடம்பிடித்துள்ளது. இந்த முறை முதல்வர் சமச்சீர்கல்வியை உச்சரித்திருக்கிறார்.

2010-2011 ஆம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சமச்சீர்கல்வி முறை கல்வியாளர்களின் தணியாத தாகம்.

அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் பொது பாடத்திட்டம், பொது பாடநூல்கள் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் செயல்கள் நடைபெறுமாம்.

பயிற்றுமொழியாக தமிழுடன் இப்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடருமாம்.

சமச்சீர் கல்வி முறை எதிர்கொள்ளவெண்டிய பாதை கரடுமுரடானது.

எனினும் முதல்வரின் கவனதைப்பெற்றிருப்பதால் இந்தப்பாதை சீரமைக்கப்படும் என்று நம்புவோம்.

Tuesday, August 18, 2009

பூதலூரில் கட்டடப்பொறியாளர்களின் சாதனை

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது.

ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

சுற்றுச்சுவர் கட்டிய பொறியாளர்கள் ஒரு சாதனை செய்ய விரும்பினர்.

அதாவது, சுற்றுச்சுவரில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் செய்தால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ள விரும்பினர்.

எனவே மழைநீர் வெளியேறும் ஓட்டை இல்லாமல் பள்ளியின் சுற்றுச்சுவரை கட்டிமுடித்தனர்.

கடந்த திங்கட்கிழமை பெருமழை பெய்தது.

மழைநீர் வெளியேற வழியில்லாததால் பள்ளிவளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கிநின்றதைப்பார்த்து பொறியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மழைநீரில் நீந்திவிளையாடிக்கொண்டிருந்த பாம்பு ஒன்று வீரமணி என்னும் மாணவனக் கடித்தது.

தற்போது வீரமணி தஞ்சாவூர் மருத்துவமனையில்.

சுற்றுச்சுவர் கட்டிய பொறியாளர்கள் மகிழ்ச்சியில்.

வாழ்க பாரதம்.

Thursday, August 6, 2009

காதிருந்தும் செவிடராய்....




செவித்திறன் குறைந்தவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பள்ளிகளை நடத்தி வருகிறது.

1979 வரை தமிழக அரசின் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தப்பள்ளிகள் இயங்கி வந்தன.

இப்போது சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகின்றன.

இந்தப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பல ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
.
சேலத்தில் இயங்கும் செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்புப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் கடந்த பத்து ஆண்டுகளாக பூஜ்யம்தான்.

மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்று காரணம்கூறி அரசு தப்பிக்க முடியாது.

இந்தப்பள்ளியில் ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்கு கணிதப்பாடம் போதிக்கும் ஆசிரியர் 1998 முதல் நியமிக்கப்படவில்லை.

இப்போது இருப்பவர் வெறும் பொறுப்புத்தலைமை ஆசிரியர்தான்.

இவரது பொறுப்பான நினைவூட்டல்கள் செவித்திறன் குறைந்த சமூகநலத்துறையை எட்டாதது ஒன்றும் வியப்பான செய்தி இல்லை.

தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் 11 பள்ளிகளிலும் இதே நிலைதான்.

அனைத்துப்பள்ளிகளிலும் 35 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரோடு, ஊட்டி, தருமபுரி, விருதுநகர் இங்கெல்லாம் இயங்கும் பள்ளிகளில் கணித ஆசிரியர்களே இல்லை என்பதில் இருந்து அரசின் செவித்திறன் குறைந்துவருகிறது என்பது தெரிகிறது.

செவித்திறன் குறைந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 30 தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

இந்தப்பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்வதற்கான அனுமதி 1992 க்குப்பிறகு வழங்கப்படவில்லை.

சட்டமன்றத்தில் அடிக்கடி மேசையைத்தட்டும் ஒலி கேட்கிறது.

உறக்கத்தில் இருக்கும் தமிழக சமூக நலத்துறையை தட்டி எழுப்புவதற்காக அந்த மேசைகள் ஒருமுறையாவது தட்டப்படுமா என்பதே பாவப்பட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பு.