Thursday, August 6, 2009
காதிருந்தும் செவிடராய்....
செவித்திறன் குறைந்தவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பள்ளிகளை நடத்தி வருகிறது.
1979 வரை தமிழக அரசின் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தப்பள்ளிகள் இயங்கி வந்தன.
இப்போது சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகின்றன.
இந்தப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பல ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
.
சேலத்தில் இயங்கும் செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்புப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் கடந்த பத்து ஆண்டுகளாக பூஜ்யம்தான்.
மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்று காரணம்கூறி அரசு தப்பிக்க முடியாது.
இந்தப்பள்ளியில் ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்கு கணிதப்பாடம் போதிக்கும் ஆசிரியர் 1998 முதல் நியமிக்கப்படவில்லை.
இப்போது இருப்பவர் வெறும் பொறுப்புத்தலைமை ஆசிரியர்தான்.
இவரது பொறுப்பான நினைவூட்டல்கள் செவித்திறன் குறைந்த சமூகநலத்துறையை எட்டாதது ஒன்றும் வியப்பான செய்தி இல்லை.
தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் 11 பள்ளிகளிலும் இதே நிலைதான்.
அனைத்துப்பள்ளிகளிலும் 35 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு, ஊட்டி, தருமபுரி, விருதுநகர் இங்கெல்லாம் இயங்கும் பள்ளிகளில் கணித ஆசிரியர்களே இல்லை என்பதில் இருந்து அரசின் செவித்திறன் குறைந்துவருகிறது என்பது தெரிகிறது.
செவித்திறன் குறைந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 30 தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.
இந்தப்பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்வதற்கான அனுமதி 1992 க்குப்பிறகு வழங்கப்படவில்லை.
சட்டமன்றத்தில் அடிக்கடி மேசையைத்தட்டும் ஒலி கேட்கிறது.
உறக்கத்தில் இருக்கும் தமிழக சமூக நலத்துறையை தட்டி எழுப்புவதற்காக அந்த மேசைகள் ஒருமுறையாவது தட்டப்படுமா என்பதே பாவப்பட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
Labels:
என் பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment