Wednesday, April 15, 2009

இடியன் பணிக்கர்



மலையாளத்தில்:வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: மு.குருமூர்த்தி


இடியன் பணிக்கர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவுட்போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகப்போகிறான் என்ற செய்தி கேட்டவுடனேயே லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு சந்தோஷம்.

அது மட்டுமல்ல.

கைதி தானியேலின் நொந்துபோன இதயம் இடியன் பணிக்கரிடம் இப்படிச் சொன்னது:

"போ...போ...நீ அப்படியே போயிடுவே."

ஓர் அரசு ஊழியனை அப்படி சபிக்கலாமா?

ஆனால் தானியேல் இடியன் பணிக்கரின் உருவத்தில் ஒரு முழு அரசாங்கத்தையும்
அல்லவா பார்த்தான்!

அப்படிப்பார்ப்பது சரியல்ல என்பது தானியேலுக்கு தெரியவில்லை. அவனுக்கு கல்வியறிவு இல்லை. கொஞ்சமாக எழுதப்படிக்கத்தெரியும். மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தார்கள். வயிற்றுப்பிழைப்பிற்கென எந்த தொழிலும் தெரியாது.

வெறும் கம்போஸிட்டர். ஒருநாள் அந்த வேலையும் போய்விட்டது.

வேலை போனபிறகு பத்து இருபது மைல் தொலைவில் இருந்த பட்டணத்திற்கு

வந்து பல அச்சகங்களிலும் வேலை தேடினான். பயனில்லை.அப்படி அலைந்து திரிந்தபோதுதான் இடியன் பணிக்கரிடம் சிக்கிக் கொண்டான்.

எந்த வேலையுமில்லாமல் அலைந்து திரிந்ததால் சந்தேகக்கேஸ். தானியேலை லாக்கப்பில் வைத்து இடியன் பணிக்கர் செம்மையாக அடித்து உதைத்தான்.

அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம்மாறிப்போகிறான்.

லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன்பணியாற்றிய போலீஸ் காரர்களுக்குக்கூட சந்தோஷம்தான்.

இடியன் பணிக்கரை யாருக்கும் பிடிக்காது. இன்ஸ்பெக்டரை சந்தோஷப்படுத்த அவன்
எதுவும் செய்வான். எதுவும் சொல்வான்.

மூச்சுக்கு முன்னூறு தடவை "ஆர்டர்...ஆர்டர்..." என்ற கர்ஜனை வேறு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அசிங்கமான வார்த்தைகள்.

எல்லோருடைய சாபத்திற்கும் இடியன் பணிக்கர் ஆளாகிப்போனது இப்படித்தான்.

தானியேலும் கைதிகளும் கம்பிகள் வழியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இனிமேல் கொஞ்சநாளைக்கு தாளம் தட்டுதலும், சலங்கைச்சத்தமும் கேட்டுக்கொண்டிருக்கும்.

இடியன் பணிக்கர் அடிப்பதும் உதைப்பதும் அதற்காகத்தான்.

"போயிட்டு வரேன் ரைட்டர் ஸார்..." என்று சொல்லியபடி இடியன் பணிக்கர் ரைட்டரின் மேசைக்கு எதிரில் போய் நின்றான்.

நீண்டு மெலிந்த தேகம் அவனுக்கு. சுருட்டை முடி. சாந்தமான கண்கள்.

புன்சிரிப்புடன் கைதிகளையும் ஒரு பார்வை பார்த்தான்.

ஸ்டேஷன் ரைட்டர் சிரித்துக்கொண்டே அனுமதி கொடுத்தார்.

வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, இடது கையில் யூனிபார்ம்

மூட்டை...சகிதமாக இடியன் பணிக்கர் ஸ்டேஷனை விட்டு இறங்கிப்போனான்.

"அப்படியே போயிடுவே போ..." தானியேல் மறுபடியும் மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.

கொஞ்ச நாட்கள் கழிந்தபிறகு ஒரு துக்கச்செய்தி: இடியன் பணிக்கர் அவுட்போஸ்ட் போலீஸ்
ஸ்டேஷனில் தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போனான்.

அதற்கப்புறம் தானியேல் கேள்விப்பட்டசெய்தி இதுதான்:

இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் அவுட்போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போனபோதுதான்
சடலத்தைப்பார்த்திருக்கிறார்கள். ஸ்டேஷனின் உள்ளே உத்திரத்தில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் சுவரோடு சேர்த்து ஒரு மேசை இருந்திருக்கிறது. மேசைமேல்
ஏறி உத்திரத்திற்குப்போயிருக்கிறான். அங்கிருந்து சுருக்குப்போட்டுக்கொண்டு தொங்கியிருக்கி
றான்.

எனவே அது தற்கொலை என்று பதிவு செய்யப்பட்டது.

ஆனால் தானியேலுக்கு நிம்மதியில்லை. இடியன் பணிக்கருக்கு மனைவியும் ஐந்து பிள்ளை
களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருந்த ஆதாரம் அழிந்து போயிற்றே!
தானியேல் கொடுத்த சாபத்தினால் மட்டும் இடியன் பணிக்கர் செத்துப்போகவில்லை.
இன்னும் எத்தனைபேர் சாபம் கொடுத்தார்களோ? இப்படி சொல்லி தானியேல்
சமாதானமடைந்து கொண்டான்.

அவன் செய்த கொடுமையான செயல்களே அவனுடைய மனசாட்சியை உறுத்தியிருக்க
வேண்டும்.

போலீஸ்காரர்களும், கைதிகளும் பல சம்பவங்களைச் சொன்னார்கள்.

மிளகாயை அரைத்து தேய்த்து கொடுமைப்படுத்தியது.

நிரபராதிப்பெண்ணிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியது...

ஆண்குறியில் எண்ணெய்த்துணியைச்சுற்றி கொளுத்திக்கொன்றது...

ஒரு அரசியல்வாதியைப்பிடித்து அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டது...

இப்படிப்பல கதைகள்.

"எல்லா போலீஸ்காரர்களும் இடியன் பணிக்கரைப்போலத்தான் இருப்பார்களா?"
இல்லை. இல்லை.
எல்லா போலீஸ்காரர்களும் இடியன் பணிக்கரைப்போல அத்தனை கொடூரமானவர்கள் இல்லை.

இடியன்பணிக்கர் கொடூரக்காரனாக இருந்தாலும் அவனுடைய மனைவி அவனிடம்
நேசமாகத்தானே இருந்தாள்.

அவனுடைய குழந்தைகளும் அவனை நேசித்திருப்பார்கள் இல்லையா?

மனைவி அவனை 'அத்தான்' என்று தானே அழைத்திருக்கவேண்டும்.

குழந்தைகள் 'அப்பா' என்றுதானே அழைத்திருக்கவேண்டும்.

இப்போது அந்தக்குடும்பம் தலைவனில்லாத குடும்பமாகிப்போய்விட்டது.

தானியேல் கொடுத்த சாபத்தினால் மட்டுமா இப்படி நடந்துபோனது?

தானியேல் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை.

இடியன் பணிக்கர் போனதற்கப்புறமும் தானியேலுக்கு அடியும் உதையும் விழுந்தன.

உடம்பெல்லாம் சொறியும் சிரங்கும் பீடித்தது. ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டு தானியேல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்.

ஒருநாள் இரவு இடியன் பணிக்கரைப்பற்றி பேச்சு வந்தது.

ஒரு நாடகக்காரியை கொலைசெய்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்த

வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றகைதி ஒருவன் அங்கு இருந்தான். அம்மைத்தழும்பும்,
ஒற்றைக்கண்ணும் கறுத்த உடம்பும் கொண்ட ஒரு தடியன் அவன். ஒருநாள் ராத்திரி அவனுடைய சொந்தக்கதையில் அடங்கியிருந்த வீரப்பிரதாபங்களை கூட்டாளிகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.

"எனக்கு யாரெல்லாம் தொந்தரவு கொடுத்தார்களோ அவர்களை நான் சும்மா விடமாட்டேன்.
நானும் அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பேன். ஒருத்தனை ஒருதடவை தானே கொல்லமுடியும்"

"யாரையாவது இரண்டு தடவை கொல்லவேண்டுமென்று தோன்றியிருந்ததா?" தானியேல் கேட்டான்.

"ஒருவனை மட்டும் கொன்ற விதம் திருப்தியாக இல்லை. துண்டுதுண்டாக அறுத்துக்கொல்லவேண்டிய பரம துஷ்டன் அவன். ஒரே அடியில் செத்துப்போய்விட்டால் சப் பென்று போய்விடாதா நமக்கு?"

"நான் வெறுமனே தொட்டேன். அவ்வளவுதான். முகத்தில் 'சப்'பென்று ஒரு அறை கொடுத்தேன். ஆள் செத்துக்கிடக்கிறான். வேறு யாரும் அங்கே இல்லை. அப்புறம் மேசையை சுவரோடு சேர்த்துப்போட்டேன். ஒரு கயிற்றை கழுத்தில் சுருக்குப்போட்டு அவனை உத்திரத்தில் தொங்கவிட்டேன். "

"யார் அவன்?' தானியேலின் கேள்வி.

அந்த ஆயுள் கைதி சிரித்துக்கொண்டே சொன்னான்."ஒரு போலீஸ்காரன். பெயர் இடியன் பணிக்கர்"

Friday, April 10, 2009

ஓடிப்போ குதிரையே! லாயத்தைப் பூட்டவேண்டும்!



10-4-2009 வெள்ளிக்கிழமை அன்று தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் கருத்தாழமிக்கது. மக்களின் அன்றாட பிரச்சினைய வெளிச்சம்போட்டுக்காட்டும் அந்த தலையங்கத்தை நடுநிலையாளர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் தனியார் பள்ளிகள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதை இந்தத் தலையங்கம் குறைகூறுகிறது. அண்மையில் வெளியான தமிழக அரசின் அறிவிப்பின்படி தேர்தல் முடிந்தபிறகு தவறுசெய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகு முன் தேதியிட்டு இந்த பணப்பயன் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் ஒருநாள் தாமதமாக சம்பளம் கிடைத்தது என்கிற காரணத்திற்காக 74 பள்ளிகளை மூடிவிட்டு 158 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முன் தேதியிட்டு இரத்து செய்யப்பட்டது.

ஆனால் கல்விக்கட்டணம் என்கிற பெயரில் பொதுமக்களிடம் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளின் மீது தேர்தல் முடிந்தபிறகுதான் நடவடிக்கையாம். இது என்ன நியாயம்?

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தனியார்பள்ளிகள் மாணவர் சேர்க்கையை முடித்து கல்லா கட்டிவிடும். குதிரை ஓடிப்போனபிறகு லாயத்தை பூட்டுவது போன்றது இது.

சிறிய நகரத்தில்கூட ஒரு குழந்தைக்கு கல்விக்கட்டணமாக 6,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கொடுத்து அழ வேண்டியிருக்கிறது. இதைத்தவிர பாடப்புத்தகம், சீருடை, காலணி என்று இந்தப்பள்ளிகள் அடிக்கும் கொள்ளை தனி.

ஆனால் இந்த தனியார் பள்ளிகளுக்கு அரசு பல்வேறு வரிச்சலுகைகளை இப்போதும் அளித்து வருகிறது.

பெரும்பான்மையான தனியார்பள்ளிகள் சிறுபான்மையினரால் நடத்தப்படுவதால் தேர்தல் சமயத்தில் அவர்களின் வாக்கு வங்கியை சீண்டவேண்டாம் என்றுகூட இந்த அரசு கருதியிருக்கலாம். தங்களுடைய குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக்கொடுக்கவேண்டும் என்பதற்காக பல சவுகரியங்களையும் தியாகம் செய்யும் பெற்றோர்களை இந்த அரசு எண்ணிப்பார்க்காததுதான் இப்போதைய சோகம்.

இந்த அரசு எதை எதையோ இலவசமாக அளிக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத்தேவையான கல்வியை மட்டும் எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறது.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று மட்டுமே நாம் இப்போது சொல்லமுடியும்.

Tuesday, April 7, 2009

ஆன்லைன் வியாபாரமும் அன்னாடங்காச்சிகளும்...




ஒரு முறை பராளுமன்றத்தில் கூக்குரல் எழுந்தது. அப்போது எலியும் பூனையும் கைகோர்த்து நின்றன.விலைவாசி உயர்ந்துபோனதாக குற்றச்சாட்டு.

"வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா...." என்றார் நிதியமைச்சர்.

"விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதற்கெல்லாம் மந்திரக்கோல் எதுவும் இல்லை," என்றார் பிரதமர்.

வர்த்தக அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கை செய்தி.

பாராளுமன்றத்தில் எழுந்த கூக்குரல் சாதாரணமென்று அலட்சியப்படுத்தக்கூடியதல்ல.

வெங்காயம் விலையேறிப்போனதற்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர்களும், தேர்தலில் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற பெரு மூச்சுடன் அன்றைய பாராளுமன்றத்தில் நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ இருந்ததை தொலைக் காட்சியில் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தற்போதைய ஆளும் கட்சி இதற்கு பொருத்தமான விலையை வரப்போகும் தேர்தல்களில் கொடுத்தாகவேண்டும். வசதிபடைத்த இந்தியர்களைக் காட்டிலும் அன்னாடங்காச்சிகள்தான் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு செல்லுகிறார்கள் என்பதால் ஆளும் கட்சியின் வயிற்றிலும், கூட்டணிக்கட்சிகளின் அடிவயிற்றிலும் புளி கரைக்கத்தொடங்கிவிட்டது.

விளைவு கூட்டணிக்கட்சிகள் பிரிந்து மறுபடியும் கூடியிருக்கின்றன....புதிய வடிவத்தில்.

ஆக்கபூர்வமாக செயல்பட மறந்துபோன அரசு இன்று கையைப்பிசைந்து கொண்டிருக்கிறது.

மத்தியதர வகுப்பினருக்கு வரிச்சலுகைகள், ஆறாவது ஊதியக்கமிஷன், விவசாயக்கடன் தள்ளுபடி, சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் என்றெல்லாம் வித்தை காட்டிகொண்டிருக்கிறது.
கடப்பாரையை விழுங்கிவிட்டு இஞ்சிக்கஷாயம் குடித்துக்கொண்டிருக்கிறது இந்த அரசு.

மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட விலைவாசி உயர்வு அளவு கடந்த 13 மாதங்களில் இல்லாத 6.68 சதவீதத்தை எட்டியிருக்கிறது. உணவுதானியங்கள், சமையல் எண்ணெய், பால்பொருட்கள், இரும்பு, உருக்கு என்று விலைவாசிஉயர்வின் கொடுங்கரங்களில் சிக்கிய பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

இப்போதைய விலைவாசிஉயர்வில் கவலைதரக்கூடிய விஷயம் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இருக்கும் அதிகமான இடைவெளிதான். மொத்த விற்பனையாளர்கள் பொருட்களைப்பதுக்கிவைத்து செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறார்கள்.

பதுக்கல்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், தனக்கு அந்த அதிகாரம் இருந்தால் நாளைக்கே நடவடிக்கை எடுப்பேன் என்றும் நிதியமைச்சர் கூறினார்.....பிரதமரின் முன்னிலையில்.

டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அன்னாடங்காச்சி குடிமகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிகாரம் கிடைக்கிறது. நாளைக்கே அவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவனும் உடனடியாக நடவடிக்கை எடுப்பான்.

இரு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு நிறுவனங்கிளுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்துகொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தம் தான் ஆன்லைன் வர்த்தகம்.

அரிசி பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது இணையதள விற்பனைக்குள் வந்துள்ளன. ஊகவணிகர்கள் கொள்ளைலாபம் சம்பாதிக்கவும், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தைக்கும், விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடுதான் ஆன்லைன் வர்த்தகம் என்பது. இதனுடைய இன்னொரு முகம் ரூபாயின் மதிப்பை உள்நாட்டில் செல்லாக்காசாக்கும் முயற்சி.

பொதுவாக விலையை தீர்மானம் செய்யும் காரணிகள் பொருட்களின் தேவை (DEMAND) எவ்வளவு என்பதும், சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் வந்திருக்கின்றன (SUPPLY) என்பவையும்தான்.
ஒரு பருப்பு வியாபாரி தன்னிடம் இருக்கும் 5 டன் உளுத்தம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கு விற்க இரண்டாவது வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். வெறும் ஒப்பந்தம் மட்டும்தான். சரக்கு இடம் மாறுவதில்லை.

ஒரு மூன்றாவது வியாபாரி கிலோ ஐம்பது ரூபாயானாலும் பரவாயில்லை என்று கேட்கும்போது 30 ரூபாய்க்கு தான் விற்ற அதே பருப்பை 40 ரூபாய்க்கு ஒப்பந்தம்போட்டு வாங்கி 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்.

ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்கள் முன்கூட்டியே வாங்கப்பட்டுவிடுவதால், அரசின் உணவுப்பொருள் வர்த்தகக் கழகம் அத்தியாவசியப்பொருட்களை வாங்கமுடியாமல் முடக்கப்பட்டுவிடுகிறது.

பதுக்கலை ஒழிக்கவேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்று கைவிரிக்கிறார் நிதியமைச்சர். வாக்குச்சாவடிக்கு மக்கள் போகும்போது மக்களுக்கு பிரச்சினைகள் மட்டும்தான் தெரியும். மாநில அரசு, மத்திய அரசு என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக்குத் தெரியவேண்டியதில்லை.

வியாபார சக்திகளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சந்தையில் விளையாட அனுமதித்து விட்டு தற்போது விலைவாசியைக்கட்டுப்படுத்துவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வார்த்தைகள்.

பத்திரிக்கைகள் பணவீக்கம் என்று சுருக்கமாக தீர்ப்பு எழுதிவிடுகின்றன. பணவீக்கம் 7 சதவீதம் என்றால் பொருட்களின் விலை 7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். போனவருஷம் இதே மாதத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த வருஷம் இதே மாதத்தில் 107 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும்.

பணவீக்கத்தை கணக்கிடும் பணியை இந்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொருவாரமும் சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்படுகிறது.

6% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகளின் வைப்பீட்டுக்கும், கடன் பத்திரங்களுக்கும் 6% வட்டி கிடைத்தது. இது RISK FREE RETURN.

பங்குச்சந்தையில் வரும் வருமானம் இதற்கு நேர்மாறானது. வங்கியைவிட பலமடங்கு வருமானம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

வங்கி வட்டிவிகிதம் குறையத்தொடங்கியதும் பணம் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தையை நோக்கி திருப்பிவிட்டனர். இதனால் SENSEX நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்துகொண்டு போனது. நம்முடைய நிதியமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் என்ற கொள்கைகளின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளில் இருந்து நம்முடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் சுயசார்புத்தன்மையை நாம் இழந்துவிட்டோம்.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதையோ, விவசாயத்திற்கு அடிப்படையான மலிவான உடலுழைப்பு இந்தியாவில் நிறைய இருக்கிறது என்பதையோ நம்முடைய ஆட்சியாளர்கள் அடியோடு மறந்துபோனதுதான் இன்றைய சோகம்.

கலப்புப்பொருளாதாரத்தையும், கிராமத்தொழில்களையும் ஆதரித்த நம்முடைய பழம்பெரும் தலைவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. தாராளமயம் என்ற பெயரில் கிராமத்தொழில்களை அழித்து, வேலையிழந்த தொழிலாளர்களை நகரங்களை நோக்கி நகரவைத்து புதுப்புது சேரிகள் உருவாக வழிசெய்ததுதான் அண்மைக்கால ஆட்சியாளர்களின் சாதனை.

நுகர்வுக்கலாச்சாரத்தை மக்களிடையே புகுத்தி அதன்மூலம் நாடுமுன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற மாயத்தோற்றத்தில் மயங்கியதும் இதே ஆட்சியாளர்கள்தான்.

நாடு முன்னேறிக்கொண்டிருந்தாலும் அதன் பயன் ஏழைமக்களைச் சென்றடையவில்லை என்று புலம்பிக்கொண்டிருப்பதும் இதே ஆட்சியாளர்கள்தான்.

நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்று ஓயாமல் புலம்பிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு விளைநிலங்களை மேம்படுத்தவேண்டும் என்பதில் அக்கறையில்லை.

ஓர் ஆண்டில் பெய்யவேண்டிய மொத்த மழையில் 80 சதவீதம் நான்கே மாதங்களில் பெய்து தீர்த்துவிடுகிறது. இந்த மழைநீரை சேமிக்கவும் பகிர்ந்தளிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகள்தான் இன்றைய இந்தியாவின் முதல் தேவை. நமது விவசாயிகளின் துன்பம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர்களின் தற்கொலைகளின் பின்னணியே அந்தக்கதைதான்.

இந்தியாவில் உணவுப்பொருள்விநியோகத்தில்தான் குறைபாடே ஒழிய உணவு உற்பத்தியில் அல்ல. உணவு உற்பத்தியில் மிகக் குறைவான முன்னேற்றம், விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை, உணவு தானியங்களின் சேதாரம் ஆகியவை இந்நாட்டின் தலையாய பிரச்சினைகள் ஆகும்.

இந்தியர்களின் ஆதாரத்தொழிலான வேளாண்மைக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை அரசு கொடுக்காதவரை எதுவுமே பலனளிக்கப்போவதில்லை.

நம்முடைய ஊரில் உளுந்து பயிரிடும் விவசாயி கிலோ 18 ரூபாய்க்கு தன்னுடைய உற்பத்திப்பொருளை விற்றுவிட்டு, அதே ஊரில் கிலோ 36 ரூபாய்க்கு உளுத்தம்பருப்பை வாங்கவேண்டிய அவலம்தான் இன்றைய பிரச்சினை.

உற்பத்தியிலோ விற்பனையிலோ எந்தவித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்கள் ஊகவணிகத்தின் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க அரசு அனுமதிப்பதிக்கும்வரை அன்னாடங்காச்சிகளின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கப்போவதில்லை.

Monday, April 6, 2009

பழனிவிபூதியும் டெல்லிஅடுப்பும்






மலையாள மூலம்: ராமகிருஷ்ண பாலாட்
தமிழில்: மு.குருமூர்த்தி

சுப்பிரமணியனும் என்னுடைய நண்பன்தான். பழனிக்குப்பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம். கோழிக்கோட்டிற்கு வந்து பிழைத்துக்கொண்டிருந்தான். செருப்புத்தைக்கும் தொழில்தான். ஏழை என்பதை சொல்லவேண்டியதில்லை.

அவனை நான் பார்த்தது ஐந்தாறு மாதங்களுக்கு முன்புதான். ஒருகண்பார்வைதான் அவனுக்கு. பிறவியிலிருந்தே மற்றொரு கண்ணுக்கு பார்வை இல்லையாம். எண்ணெய் பார்க்காத செம்பட்டை தலைமுடியும், எப்போதும் அணிந்திருக்கும் நைந்து கிழிந்த லுங்கியும், பொத்தல் சட்டையும் அலங்காரங்கள்.

சுத்தம் சுகாதாரத்தைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத ஆள் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து போகும். ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு ஞாயிற்றுக்கிழமை வருவான். செருப்பு ரிப்பேர் செய்யவேண்டியிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்னோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டுப்போவான்.

பாலக்காட்டு கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்தபோது தெரிந்துவைத்திருந்த தமிழ் அறிவை உபயோகித்துப்பார்க்க எனக்குக்கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை. அவனுடைய குரல் கேட்டால் போதும். ஒரு கிளாஸ் காப்பியோடு எங்கள் வேலைக்காரி அடுப்படியிலிருந்து வந்துவிடுவாள். சுப்பிரமணியனுக்கு காப்பி கொடுப்பதற்காகவென்றே ஒரு கண்ணாடி தம்ளரை தனியாக வைத்திருக்கிறார்களென்றும், அதை வேறுயாரும் உபயோகிப்பதில்லையென்றும் எனக்கு நேற்றுதான் தெரியவந்தது. இன்று நான் அந்த கிளாஸில் தான் காப்பி குடித்தேன்.

கொஞ்சநாட்களுக்கு முன்னால் காலைநேரத்தில் சுப்பிரமணியன் என்னுடைய வீட்டுக்கு வந்தான். சொந்த ஊருக்குப்போவதாகச்சொன்னான். மகன் தமிழ்ச்செல்வனுக்காக பாளையத்தில் வாங்கிய அல்வாப்பொட்டலம் கைப்பையில் இருந்தது. போகிறவழியில் பழனியில்தான் மனைவிக்கு சேலை வாங்கவேண்டுமாம். பழனியில் சேலை வாங்குவதற்கு பதினைந்து ரூபாய் போதுமாம். ஊரிலிருந்து திரும்பிவரும்போது எனக்கென்று ஏதாவது கொண்டுவரவேண்டுமாம். எனக்கு என்னவேண்டுமென்று தெரிந்துகொண்டு போவதற்காக வந்திருப்பதாக சொன்னான்.

என்னால் உடனடியாக பதில் ஏதும் சொல்லமுடியவில்லை. ஒன்றும் வேண்டாமென்று பலமுறை கூறியும் சுப்பிரமணியன் என்னை விடுவதாக இல்லை.
"பழனி வழியாகத்தானே போகிறாய்? போகும்போது எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டால் அதுவே போதும்."

நான் தட்டிக்கழிக்க முயன்றேன்.

இதைக்கேட்டதும் அவனுக்கு நான் ஒரு பழனிபக்தன் என்று தோன்றியிருக்கவேண்டும்.
"அப்படியென்றால் பஞ்சாமிர்தம் கொண்டுவரட்டுமா?" என்று பிடித்துக்கொண்டான்.

கடைசியில் பழனியிலிருந்து எனக்காக கொஞ்சம் விபூதி கொண்டுவருவது என்று எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. சுப்பிரமணியன் மகிழ்ச்சியோடு அங்கிருந்து போனதும், "எப்போதிருந்து இந்த பக்தி முளைத்தது?" என்ற என்மனைவியின் குரல் உள்ளிருந்து கேட்டது.

அதேநாள் மாலையில் என்னுடைய நண்பன் ஜோசப், மனைவி மேரியோடு அவனுடைய புதிய ஃபியட் காரில் என்னைப் பார்க்க வந்தான். என்னுடைய மனைவி வாசல்வரை ஓடிப்போய் அவர்களை வரவேற்றாள்.

"அதிக நேரம் உட்காரமுடியாது. நாளைக்கு நாங்கள் டெல்லிக்கு போகிறோம். இன்னும் 'பாக்கிங்'கூட ஆகவில்லை." வீட்டுக்குள் நுழையும்போதே மேரி புலம்பிக்கொண்டு வந்தாள்.

இவ்வளவு அவசரமாக வந்திருப்பதால் ஏதாவது முக்கிய காரியம் இருக்கும் என்று நான் நினைத்தேன். விசாரித்ததில் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

"ஆகா, இந்த சேலை எவ்வளவு அழகாக இருக்கிறது! டெல்லியில் இதைப்போல் நிறைய வாங்கலாம் இல்லையா?" என்னுடைய மனைவி அவளுக்குப்பிடித்த விஷயத்தைப்பேசிக்கொண்டிருந்தாள். அதைக்கேட்ட உடனேயே மேரியின் முகம் மலர்ந்தது.
"இதொன்றும் அவ்வளவு விலையில்லை! டூ ஹண்ட்ரட் அண்ட் ஸம்திங்........அவ்வளவுதானே?" மேரி ஜோசப்பைக் கேட்டாள்.
"ம்ஹூம்........அது இருநூற்று நாற்ப்பத்தேழு ரூபாய்!"

ஜோசப் எப்போதும் இப்படித்தான். இத்தனை பைசா என்றுகூட கணக்குப்பார்ப்பான்.

"இவளுடைய ஷாப்பிங்குக்காகத்தான் டெல்லிக்குப்போகிறோம். இங்கேதான் நல்ல 'திங்ஸ்' எல்லாம் கிடைக்கமாட்டேனென்கிறதே?"
'திங்ஸ்' வாங்குவதற்காக டெல்லிக்குப்போகும் அவர்களைப்பார்த்து மலைத்து நின்ற என்னைப்பார்த்து திடுக்கிடவைக்கும் கேள்வியை ஜோசப் கேட்டான்.
"மிஸ்டர் ராமகிருஷ்ணன்! நீங்களும் எங்களோடு வருகிறீர்களா? ஜாலியாகப் போய்விட்டு வரலாம்......என்ன மேரி?....இவர்களும் வந்தால் நல்லா இருக்கும் இல்லையா?"
"ஆமாம் ப்ளீஸ் சீதா! நீங்களும் எங்களோடு வாருங்கள்," மேரி என் மனைவியின் பக்கம் திரும்பி சொன்னாள்.

நான் நினைத்துக்கொண்டேன். 'இவர்கள் டெல்லிக்குப்புறப்பட இன்னும் இருபத்து நான்கு மணிநேரம்கூட இல்லை......இப்போது வந்து கூறுகிறார்கள். நேற்றும் அதற்கு முன் தினமுமெல்லாம் சந்தித்திருக்கிறோம். இன்றைக்கு இந்த நிமிஷம் வரை இப்படியொரு பேச்சு இல்லை. திடீரென்று புறப்பட எங்களால் முடியாது என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் தெரிந்த இவர்கள், நாங்கள் இல்லாமல் தனியாகப் போகமுடியாது என்பதுபோல் பேசுகிறார்கள்!

ஏதோவொரு சமாதானம் சொல்ல நான் திணறிக்கொண்டிருந்தபோது என்மனைவி குறுக்கிட்டாள்."ஓ, மேரி.....நாங்களும் உங்களோடு வரலாம்தான். ஆனால் எங்களுடைய நாயை எங்கே விட்டுவிட்டு வருவது என்பதுதான் ப்ராப்ளம்!"

எங்களுடைய நாயை அடுத்த வீட்டில் விட்டுவிட்டு வாரக்கணக்கில் வெளியூர் போயிருக்கிறோம். இருந்தாலும் சீதா இப்படிக்கூறிய சமாதானம் எனக்கு சரி என்று தோன்றியது.

ஜோசஃப்- மேரி தம்பதியின் முகத்தில் வருத்ததின் நிழலாடியது. நாங்கள் இல்லாமல் டெல்லிக்குப்போகவேண்டியிருப்பதை நினைத்து அவர்களுக்கு துக்கமான துக்கம்போலும்.
அவர்கள் புறப்படுவதற்காக எழுந்தபோது என்மனைவிக்கு 'பளிச்'சென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

"இதோ பார் மேரி! அங்கே 'நூதன் ஸ்டவ்' கிடைக்கும். டெல்லி ஸ்டவ் வாங்கவேண்டும் என்று எனக்கு ரொம்பநாளாக ஆசை. உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையென்றால்....."
"சே....சே...! அதில் என்ன சிரமம்? ஒன்று போதுமா? போதாதென்றால் இரண்டாக வாங்கி வருகிறேன்.

இப்போதெல்லாம் 'காஸ்' தீர்ந்து போனால் மீண்டும் கிடைப்பதற்கு எத்தனை நாட்களாகின்றன!.......இரண்டே கொண்டுவந்து விடுகிறோம். நினைவுபடுத்தியதும் நல்லதாய்ப்போயிற்று. எங்களுக்கும் ஒன்று வாங்கவேண்டும்....." இப்படி ஜோசஃப் உறுதியாகச் சொன்னதால் என் மனைவி உள்ளே போய் நூறு ரூபாயோடு திரும்பி வந்தாள்.

"என்ன சீதா இது?.....இது எங்களையெல்லாம் 'இன்சல்ட்' செய்வது போல..." என்றெல்லாம் மேரி சொன்னாலும் பணத்தை வாங்கி கைப்பையில் வைத்துக்கொள்ள தவறவில்லை.
அவர்களை வழியனுப்பிவிட்டு வரும்போது இனம்புரியாத வேதனை. முகத்திலுள்ள தசைகளெல்லாம் வலித்துக்கொண்டிருந்தன. ஒரு வேளை ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக முகத்தில் சிரிப்பை வலிந்து வரவழைத்துக் கொண்டிருந்ததால் கூட இருக்கலாம்.

"அப்பாடா! இந்தமுறை 'காஸ்' தீர்ந்துபோனால் கவலைப்படவேண்டாம். இரண்டு நூதன்ஸ்டவ் மட்டும் இருந்துவிட்டால் போதும்!" என்று சொல்லிக்கொண்டே மனைவி உள்ளே போய்விட்டாள்.

இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும். ஒருநாள் அதிகாலையில் சுப்பிரமணியன் வந்தான். பழைய லுங்கியும் சட்டையும்தான். பிரயாணத்தினால் இன்னும் கொஞ்சம் கசங்கியிருந்தன. கையில் சிறிய மூட்டை. நான் இரண்டு கைகளாலும் வாங்கிக்கொண்டேன்.

ஐந்தாறு எலுமிச்சம்பழங்களும், இரண்டு பாக்கெட் விபூதியும், அரைலிட்டர் அளவிற்கு நிலக்கடலையும். இவைதாம் என் நண்பனுடைய அன்பளிப்புகள். ஒரு ரூபாய்க்குக் குறைவான வருமானத்தோடு சில நாட்களையும், முழுப்பட்டினியாகச் சிலநாட்களையும் கழிக்கும் சுப்பிரமணியனுடைய அன்பளிப்பு.

பழனியிலும் வீட்டிலும் நடந்த விஷேசங்களையெல்லாம் என்னிடம் சொன்னான். நான் எவ்வளவோ முயன்றும் கொடுக்க முயன்ற பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டான். தான் கொண்டுவந்த கடலையைக்கொண்டு எப்படிக்கறி செய்யலாம் என்று என்னுடைய மனைவிக்கு சொல்லிக்கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டுப்போனான்.

அன்று சாயுங்காலம் நாங்கள் ஜோசஃப்-மேரி வீட்டிற்கு போனோம். அவர்கள் திரும்பிவந்து ஒருவாரமாகிவிட்டது என்று கேள்விப்பட்டிருந்தோம். காத்திருந்து, காத்திருந்து என் மனைவி பொறுமை இழந்துவிட்டிருந்தாள். 'காஸ்' தீர்ந்துபோகும் நிலையிலிருந்ததால் 'சரி அங்கேதான் போய்வருவோமே' என்று போயிருந்தோம்.

டெல்லியில் எல்லா 'திங்ஸ்' களைப்பற்றியும் அவைகளின் விலைகளைப்பற்றியும் வாய்சலிக்காமல் சொன்னார்கள். ஸ்டவ்வைப்பற்றி ஒன்றும் வாய் திறக்கவில்லை. டெல்லியில் வாங்கிய 'டங் கிளீனரை' பார்ப்பதற்காகவோ என்னவோ சீதாவும் மேரியும் உள்ளே போயிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் 'ஸ்டவ்' விஷயத்தை எடுத்தேன். முதலில் ஜோசப் 'என்ன...ஏது' என்று புரியாமல் விழித்தான்.

"ஸ்டவ்வா?....எந்த ஸ்டவ்?....ஓ நூதன் ஸ்டவ்வா? வெரி ஸாரி! நாங்கள் அதை மறந்தே போய்விட்டோம். சே! கொஞ்சம்கூட ஞாபகம் இல்லாமல் போய்விட்டது. பரவாயில்லை. பக்கத்தில் மிட்டாய்த் தெருவில்தான் நல்ல ஸ்டவ் கிடைக்குமே! அப்பாடா! ஒரு வார அலைச்சல்! ஐயாயிரம் ரூபாய் காலி!"

ஜோசஃப் மீண்டும் விலைவாசியைப்பற்றி அலச ஆரம்பித்துவிட்டான்.

உள்ளேயிருந்து வந்த என் மனைவியின் முகத்திலும் மகிழ்ச்சியில்லை.

"பாருங்க....டெல்லியில் எல்லா இடத்திலும் கேட்டிருக்கிறார்கள். நூதன் ஸ்டவ் 'அவுட் ஆஃப் ஸ்டாக்'காம். நமக்காகத்தேடி அலைந்ததில் ஒரு நாள்முழுவதும் வீணாகப்போய்விட்டதாக மேரி சொல்லுகிறாள். நமக்காக அவர்களுக்கு ரொம்ப கஷ்டம்! " சீதா வருத்தத்தோடு சொன்னாள்.
நான் ஜோசஃப் முகத்தைப்பார்த்தேன். அது நன்றாக இல்லை.

"ம்.....பெரிய நூதன்! சரிதான் போ!...இங்கே 'ஜனதா ஸ்டவ்' இருக்கவே இருக்கிறது! 'ஈக்வலி குட்' அதைவாங்கினால் போதும், போ!"

பிறகு ஜோசஃப் என்னை ஏறிட்டுப்பார்க்கவில்லை.

வீட்டுக்குத்திரும்பி நடந்துகொண்டிருந்தபோது சீதா சொன்னாள்.

"எப்படிப் புளுகுறாங்க!......பார்த்தீங்களா? அவங்க கொண்டுவந்திருக்கிற புது நூதன் ஸ்டவ் அடுப்படியில் இருப்பதை நானே பார்த்தேன். அப்படியிருந்தும் ஸ்டவ் கிடைக்கவில்லையென்று எதற்காக இப்படி நேருக்குநேர் பொய்சொல்லவேண்டும்?"

"அந்தப்பணத்தை மேரி திருப்பிக்கொடுத்துவிட்டாளா?" நான் கேட்டேன்.
"சே!....அதை எப்படிக்கேட்பது? அவர்களாகத்தரும்போது தரட்டும். வேகமாக நடங்கள். சுப்பிரமணியன் சொன்னமாதிரி கடலைக்கறி சமைத்துப்பார்க்கவேண்டும்." மனைவி நடையை எட்டிப்போட்டாள்.

கதவைத்திறந்ததும் வேலைக்காரி "காஸ் தீர்ந்து போச்சு," என்றாள்.

எத்தனையோ வருஷங்களுக்குப்பிறகு நான் அன்றுதான் நெற்றிநிறைய விபூதி இட்டுக்கொண்டேன்.

நிச்சயமாக அது கடவுள்மீது எனக்குள்ள பக்தியினால் அல்ல!

இரண்டு கிளாஸ் எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்தேன். அதுவும் நிச்சயமாக தாகம் தணிப்பதற்காக அல்ல!

அவன் அல்லவா உண்மையில் மனிதன்!

Sunday, April 5, 2009

நாளெல்லாம் போகிப்பண்டிகைதான் இனி நமக்கு...




சாமிக்கண்ணுவோட வயலில் களையெடுப்பு.
பதினோரு சனத்துக்கு டீயும் வடையும் போயாகணும்.
கோணமுக்கு சிங்காரம் டீக்கடையில் நிற்கிற சாமிக்கண்ணுவுக்கு அவசரம்.
சாவகாசமாக அஞ்சு பார்சல் டீயை கொதிக்கக்கொதிக்க கலந்து பிளாஸ்டிக் கேரி பையில் போட்டு முடிச்சும் போட்டாயிற்று.
பன்னிரெண்டு வடையை இன்னொரு கேரி பையில் போட்டு அதையும் முடிச்சு போட்டாயிற்று.
இரண்டு முடிச்சையும் இன்னொரு கேரி பையில் போட்டு கூடவே பன்னிரண்டு பிளாஸ்டிக் கப்பையும் எண்ணிப்போட்டு காசை வாங்கிக்கொண்டான் சிங்காரம்.

எங்கெல்லாம் உடலுழைப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் பதினோரு மணிக்கு டீயும் வடையும் போயாகணும்.
சூடான டீயை மலிவான பிளாஸ்டிக் கேரி பையில் கொண்டுபோய் பிளாஸ்டிக் கப்பில் பிதுக்கிக்கொடுப்பது இன்று சர்வசாதாரணம்.

வேலைசெய்யும் இடம் எதுவாக இருந்தாலும் சரி...
அது வயல் வரப்பாக இருக்கலாம்....
பூமிக்கு மேலே துருத்திக்கொண்டிருக்கும் கட்டிடமாக இருக்கலாம்....
தொழிற்பட்டறையாக இருக்கலாம்........
அங்கெல்லாம் இறந்துபோன பிளாஸ்டிக் குப்பைகள் மவுனமாக கிடப்பது அன்றாடக்காட்சி.

ஒரு பார்சல் சாப்பாடு வாங்கப்போனால் பெரிய கேரி பைக்குள் ஒன்பது சிறிய கேரி பைகள்............

சந்தைக்கு நண்டுவாங்கப்போன கணவன் திரும்பும்போது இரண்டு கேரி பைகள். நண்டுக்கால்கள் பொத்தலிட்ட ஒரு பிளாஸ்டிக் பை.

தக்காளியும், பச்சைமிளகாயும், கொத்துமல்லித்தழையும் பிதுங்கிக்கிடக்கும் இன்னொரு பிளாஸ்டிக் பை.

டாஸ்மாக் கடைக்கு போனால் குடிகார பற்களால் கடிபட்டு வீசிஎறியப்பட்ட காலி தண்ணீர் பைகள், ஊறுகாய் பைகள்......

கிராமப் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்குள் பள்ளிவிட்டபிறகு சென்று பார்த்தால் காலி பாக்குப்பொட்டல உறைகள்........

உடலுழைப்புத்தொழிலாளிகள் பசியைமறக்க பயன்படுத்திய பான்பராக்கு காலி உறைகள்....

விளையாட்டு மைதானத்தில்கூட வெற்றியைக்கொண்டாட பான்பராக்கு உபயோகம்....

திருமணக்கூடத்தில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கப்புகளும், பைகளும்........

சித்திரைமாதத்தில் வயல்களில் எரு அடிப்பார்கள். நிலமில்லாதவர்களின் வீடுகளில் இருக்கும் குப்பைமேட்டை விலைபேசி வண்டிகளில் ஏற்றிச்செல்வார்கள். அது குப்பையாக இருந்து உரமாக மாறிய காலம் போயேபோய்விட்டது.

இப்போதெல்லாம் எருஅடித்த வயலைப்போய்ப்பாருங்கள். கிழவன் தலை பஞ்சு முடியைப்போல் வயல்முழுவதும் வெள்ளைநிறத்தில் பிளாஸ்டிக் காகிதங்கள்.
நடவுப்பெண்களின் கால்களில் சிக்கி இழவெடுக்கும் வெள்ளை மாசு.

இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் உறைகள் பூவுலகில் பிறந்து 150 ஆண்டுகள்தான் ஆயிற்று என்ற செய்தி ஆச்சரியமானது.

பத்தாண்டு பழமையானவற்றையே “பரண்மேல் ஏற்று” என்று கூக்குரலிடும் மனிதமனம் இந்த பிளஸ்டிக்கைமட்டும் ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டது ஒன்றும் தற்செயலானது அல்ல.

இலேசானது.......
கவர்ச்சியானது......
விலைகுறைவானது......
என்றெல்லாம் அது பிறந்தபோது போற்றப்பட்டது உண்மைதான்.

இன்றைய தினம் நம்முடைய நகராட்சிகளுக்கு நரகாசுரனாக தோற்றமளிப்பதும் இந்த பிளாஸ்டிக் பைகள்தான்.

நரகாசுரனாவது தீபாவளிக்கு தீபாவளி வந்து ஒழிந்துபோவான். இந்த பிளாஸ்டிக் அரக்கன் ஒவ்வொரு மணித்துளியும் அவதாரமெடுத்து நம்முடைய நகரசபைகளை வதைக்கிறான் என்பதுதான் உண்மை.

சீனாவும், வங்காளதேசமும், உகாண்டாவும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக்கட்டுவதில் முன்னணி நாடுகள்.

அமெரிக்க மாநிலங்கள், அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான போருக்கு இடுப்புத்துணியை வரிந்துகட்ட ஆரம்பித்துவிட்டன.

இங்கெல்லாம் “கடைக்குப்போகும்போது துணிப்பைகளை எடுத்துப்போங்கள்” என்று மக்களை கையெடுத்துக்கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

நம்மை ஆளுபவர்கள் கடைசியாக ஓட்டுக்கேட்கும்போது கையெடுத்து கும்பிட்டதாக ஞாபகம்.

பாலிஎத்திலீன் என்பது எண்ணெயிலிருந்து உண்டாக்கப்படும் தெர்மோ பிளாஸ்டிக் ஆகும். இது கரப்பான் பூச்சிகளால் அரிக்கப்படாதது. நாட்கள் செல்லச் செல்ல இந்த வகையான பிளாஸ்டிக்குகள் தீங்கு தரக்கூடிய நுண்ணிய பெட்ரோ பாலிமர்களாக சிதைவடைந்து மண்ணையும், நீரூற்றுக்களையும் சென்றடைகின்றன. இதன் காரணமாக இன்று பிளாஸ்டிக் நம்முடைய உணவுச்சங்கிலியிலும் ஊடுருவியிருப்பது உண்மை.

பெட்ரோ பாலிமர்கள் நீர்த்தாரைகளின் வழியாக கடலில் எப்போதோ கலந்துவிட்டன. வடக்கே ஆர்க்டிக் முதல் தெற்கே பாக்லண்ட் தீவுகள் வரையில் பெட்ரோ பாலிமர்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த கொடுமையான பிளாஸ்டிக் துகள்கள் “வெள்ளை மாசு” என்று பெயரிடப்பட்டுள்ளது.
வனவிலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என்ற எல்லா உயிரினங்களிலும் வெள்ளை மாசு பரவி அவற்றின் இனத்தை அழித்தொழிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை.

ஒரு காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு இருபது மைக்ரான்களுக்கு உட்பட்ட பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான சட்டமுன்வடிவை கொண்டு வந்தது. தொழிலதிபர்களிடமிருந்து பெறப்பட்ட நெருக்குதல் காரணமாக சட்டமுன்வடிவு விவாதப்பொருளாகி வலிமையிழந்துவிட்டது. பெருமளவு தொழிலாளர்கள் வேலையிழப்பர் என்பதை காரணம் காட்டி அரசின் சட்டமியற்றும் எண்ணம் வீரியமிழந்துவிட்டது.

மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் இன்று உச்சத்தில் உள்ளது.

இருபது மைக்ரான்களுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் தடைசெய்யப்படுமானால் இருபத்தோரு மைக்ரான் பிளாஸ்டிக்கை ஏராளமாக தயாரிக்க தொழிலதிபர்கள் தயாராக இருக்கின்றனர்.

பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளின் ஆரோக்கியமற்ற பணிநிலை, குறைந்த ஊதியம் ஆகியவற்றில் அக்கறையில்லாத முதலாளிகள் தொழிலாளிகளின் வேலையிழப்பை மட்டும் முன்னிறுத்தி வெள்ளை மாசை பரப்பிவிடும் பணியில் ஈடுபட்டிருப்பது தமிழ்நாட்டில் ஒன்றும் வியப்பான செய்தியில்லையல்லவா!

இந்த விவாதத்தின்போது பிளாஸ்டிக் குடங்களுக்கு தடைவிதிக்கப்படுமா என்றகேள்விதான் அரசை அச்சுறுத்தியிருக்கவேண்டும். இருபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துவரும் பிளாஸ்டிக் குடங்கள் நீரை சேமித்து வைப்பதற்கு ஏற்றவை அல்ல. அவற்றில் பயன்படுத்தப்படும் வண்ணங்களில் காட்மியம், பாதரசம், ஈயம் போன்ற உலோகங்கள் குடிநீரை நச்சுநீராக மாற்றும் வலிமை கொண்டவை.

பிளாஸ்டிக் குடங்களுக்கு தடைவிதிக்கப்படுமானால் ஈறைப் பேனாக்கி....பேனைப்பெருமாளாக்கும் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும்.

சட்டம் போட்ட கட்சி கட்டம் கட்டப்பட்டு பெருமளவு வாக்குகளை இழக்கநேரிடும்.

மக்களின் உடல் நலமா, ஆட்சி அதிகாரமா என்ற பட்டிமன்றத்தில் ஆட்சி அதிகாரம் வென்றது என்பது சரிதானே!

பிளாஸ்டிக் நாகரிகத்தில் இன்று மக்கள் அதிகமாகப்பயன்படுத்தும் மெல்லிய பிளாஸ்டிக்குகள் ஒழிக்கப்படமுடியாதவை. மறுசுழற்சிக்கு மசியாதவை.
அவற்றை எரிக்க முற்படும்போது டையாக்ஸின் என்ற சிக்கலான வேதிப்பொருள் புகைவடிவில் வெளிப்படுக்கிறது. இவை உண்டாக்கும் நோய்களும் சிக்கலானவை.

புற்றுநோய், பிறவிக்குறைபாடுகள் போன்ற சிக்கலான நோய்களைஉண்டாக்கி இன்றைய மருத்துவர்களின் பணச்சிக்கல்களை தீர்த்துவைக்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்திசெய்யும் தொழிலதிபர்களே பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சிக்காக வாங்கும்படி அரசு சட்டமியற்றவேண்டும்.

வேலையிழக்கும் தொழிலாளிகளுக்கு துணிப்பைகளும், காகிதப்பைகளும் செய்யும் வேலையை அரசே ஏற்படுத்தித் தரவேண்டும்.

இன்று நகராட்சிகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளின் முன்னால் கைகட்டி நிற்கின்றன. அவற்றை வெல்லும் வழியறியாது தீயிட்டு கொளுத்துமாறு தன்னுடைய தொழிலாளிகளை நிர்பந்திக்கின்றன.
விளைவு....

ஒவ்வொரு நாளும் வீதியெங்கும் புகை மண்டலம்.

மதுரையை எட்டிவிட்டோம் என்பதை அங்கிருந்துவந்த நறுமணம் கோவலனுக்கும், கண்ணகிக்கும், கவுந்தியடிகளுக்கும் உணர்த்தியதாம்.

இன்று.....

நகர எல்லையை எட்டிவிட்டோம் என்பதை டையாக்ஸின் புகை நமக்கு உணர்த்துகிறது.

தேவையில்லாதவற்றை தீயிட்டு எரிப்பதுதான் போகிப்பண்டிகையின் நோக்கமாம்.

அய்யா! ஆளப்பிறந்தவர்களே!

மக்களின் ஆரோக்கியத்தை எப்போது சேர்த்தீர்கள் தேவையில்லாதவை என்ற பட்டியலில்?

Friday, April 3, 2009

பகவான் சன்னதியில்......




மலையாள மூலம்:ஓ.வி.விஜயன்
தமிழில்:மு.குருமூர்த்தி

டெல்லியில் ஜீவனம் நடத்துவதற்கான சம்பளம் கிடைத்தவுடன் குருவாயூர் கோவிலுக்குவருவதாக நேர்ந்துகொண்டிருந்தேன். மாதச்சம்பளம் லட்சம் ரூபாயானபோது லீவு எடுத்துக்கொண்டு குருவாயூருக்கு புறப்பட ஆயத்தமானேன்.
விபரத்தை மனைவியிடமும் சொன்னேன்....

" என்னுடன் கோவிலுக்கு வருவதில் உனக்கு ஒண்ணும் சங்கடமில்லையே?, பி.கெ.மரியாம்மா?"
"இப்போ என்னை இந்துவாக்கிடணும். கல்யாணம் கட்டியது அதுக்குத்தானே?"
"அப்படி யார் சொன்னது?"
"அப்போ நான் ஏன் குருவாயூருக்கு வரணும்?"
"நீ உன்னோட மதத்திலேயே இருந்துக்கோ பி.கெ.மரியாம்மா............புருஷன் நேர்த்திக்கடன் செலுத்தப்போகும்போது மனைவியும்கூட போவதுதான் நல்லது. வேண்டிக்கொண்டதற்கு ஒரு மரியாதை..."
"சரி....நான் வருவேன்.....ஆனால் என்னுடைய மதத்தை விடமாட்டேன்....."
"ஒரு விஷயம்..." நான் இடைமறித்தேன்."இழுத்துப்போர்த்திக்கொண்டு வரவேண்டாம். அரைமுண்டு உடுத்து வரணும்."
"ஏன் அப்படி?"
"அப்படிப்போகவில்லையென்றால் கோவில் கூட்டத்தில் அடி விழும்."
"ஓகோ!" அவளுடைய சங்கடம் குரலில் தெரிந்தது.
"ஆலயப்பிரவேசனத்திற்கு முன்பாக நான் ஒரு முறை குருவாயூர் கோவிலுக்குப்போயிருந்தேன். அப்போதே எனக்கு அடிவிழுந்தது. நானொரு ஷெட்யூல்ட் ஜாதிக்காரனென்று கல்யாணத்திற்கு முன்பே உனக்கு சொல்லியிருக்கிறேனில்லையா?......."
அவள் அழத்தொடங்கிவிட்டாள்.
"கடவுளே! நான் எப்போதாவது உங்களோட பேச்சை மீறியிருக்கேனா? நீங்க போற வழிக்குப் பின்னாலெதானெ நானும் வாரேன்.. எப்போதாவது மாட்டேனென்று சொல்லியிருக்கேனா?நீங்க சங்கடப்படவேண்டாம். அரைமுண்டு கட்டிக்கிறேன்."

பெட்டி படுக்கையெல்லாம் சத்திரத்தில் வைத்த கையோடு நானும் பி.கெ.மரியாம்மாவும் கோயிலுக்குப்போனோம்.
கீர்த்தனைகள் சொல்லியபடி கோவில் சன்னதியில் நடந்தேன். என்னைச்சுற்றிலும் அஷ்டபதி பாடி நடந்த பக்தர் கூட்டம் என் கண்ணில் படவில்லை. அங்கிருந்த கருங்கல் தூண்கள் கண்களில் படவில்லை. அஞ்சன நிறத்தான்.......அந்த குருவாயூரப்பன் மட்டும் தான் கண்ணில் தெரிந்தான். அவன் முன்பாக சாஷ்டமாங்க விழுந்தேன்.

"ஸாலே......." குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
குருவாயூரப்பன் தான்....... என்னைப்பார்த்து கண்ணடித்தார்.
பக்திப்பரவசத்தோடு எழுந்து நின்றேன்.
"வொ க்யா ஹை?"
கேட்டது குருவாயூரப்பன் தான். என்னுடைய கையிலிருந்த ஹிந்தி மாத இதழை சுட்டிக்காட்டி கேட்டார்.
"இதுவா?..........ஹிந்தி புத்தகம்.......சினிமா மாதப்பத்திரிக்கை...."
"இங்கே கொடு...." குருவாயூரப்பன் கைநீட்டினார்.
நான் இதழைக்கொடுத்தேன். அதை ஆவலாக குருவாயூரப்பன் படித்து முடித்தார்.
"இன்னும் ஏதும் இருக்கா?"
நான் கையெடுத்துக்கும்பிட்டேன்.
"தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால் இன்னும் நிறைய ஹிந்தி மாதப்பத்திரிக்கையெல்லாம் கொண்டுவந்திருப்பேன்."
"என்ன தெரியாமல் போனது?"
"பகவானே.....உங்களுக்கு ஹிந்தி தெரியுமென்கிற விஷயம்...."
"ஹிந்தி தெரியுமென்கிற விஷயமா!......முட்டாள்.."
பி.கெ.மரியாம்மா சட்டென்று குறுக்கிட்டாள்.
"ஹிந்துக்களோட தெய்வமே ! உங்களோட தாத்தாவயசு இவருக்கு......முட்டாள் என்று சொல்லவேண்டாம்..."
"இது யாருடா?" குருவாயூரப்பன் கேட்டார்.
என்னுடைய கை தானாகவே கூப்பிக்கொண்டது.
"என்னோட மனைவி. பி.கெ.மரியாம்மா. கூட்டிவைத்துக்கொண்டது. கலப்புக்கல்யாணம். என்னை மன்னிக்கணும்."
"ஓ! அதனாலென்ன?......."
எனக்கு நன்றிமேலிட்டது. கைகூப்பி குருவாயூரப்பனை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றேன்.
"க்யா தேக்யோ தும், ஸாலே?" குருவாயூரப்பன் தான் கேட்டார்.
" ..ம்....ஒன்றுமில்லை..." வார்த்தை இடறியது.
"ஒண்ணுமில்லையா?" குருவாயூரப்பனுடைய கேள்வி.
எனக்கு அழுகைவந்துவிட்டது.
"தெய்வமே! இந்த முட்டாள் மீது கருணைவைக்கணும். நான் வெறும் முட்டாள்."
"கருணை வைத்தோம், சொல்!"
"தாங்கள் மலையாளி என்கிற நினைப்பில்தான் நாங்கள் வளர்ந்தும் ஆளானதும்."
"நான் மாயக்காரனென்கிற விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே?"
"மலையாளியென்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். நீங்கள் நம்பூதிரியாகவோ, ஷாரடியாகவோ, வாரியராகவோ இருக்கலாமென்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்.
"மலையாளிகள் முற்றிய பைத்தியங்கள்! பில்கூல் பாகல்லோக் ஹை!"

பட்டதிரியின் குருட்டு பக்தியைவிட பூந்தானத்தின் பக்தியே தனக்கு ரொம்ப இஷ்டம் என்று சொன்னது. அப்புறம் அனந்தன்காட்டுக்கு வரச்சொல்லி அஸனவில்வாதிமங்கலத்திடம் சொன்னது எல்லாம் எனக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
"தெய்வமே! அதையெல்லாம் சுத்தமான மலையாளத்தில் எப்படி சொல்லிவைத்தீர்கள்?"
"நானொண்ணும் அதெல்லாம் சொல்லவில்லை, சாலே! லோக் ஜூட் போல்த்தா ஹை!" இதைக்கேட்டதும் இந்துஸ்தான்காரர்கள் மேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது. பகவானின் அன்பு பெருகி ஆறாய் உருவெடுத்தது. ` என்னுடைய கோபம் அதில் அடங்கிப்போயிற்று.
கண்களைத்திறந்து ஒளிவீசும் அந்த உருவத்தைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

பி.கெ.மரியாம்மா குருவாயூரப்பனிடம் கேட்டாள்.
"ஃபேமிலியெல்லாம் இங்கேதானே?"
"ஓ........ராதாவா?....இல்லை. ஊரிலிருக்கிறாள். இங்கே இருக்கமுடியாது. பிள்ளைகளுடைய படிப்பு கெட்டுப்போகும்."
குருவாயூரப்பனுடைய பதிலால் பி.கெ.மரியாம்மா திருப்தியடையவில்லை.
"எத்தனை பிள்ளைகள்?"
"பத்துலட்சம் பெண்கள். ஏழரை லட்சம் ஆண்கள். அத்தோடு நிறுத்தியாயிற்று."
"சரிதான்." மரியாம்மா தலையாட்டினாள்.
"பிள்ளைகளை இங்கே கொண்டுவந்தால் சாப்பாட்டுக்கே திண்டாட்டமாகும். கம்யூனிஸ்ட்காரர்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்வார்கள்."
"நானும் அதையேதான் நினைத்தேன்," குருவாயூரப்பன் சென்னார்.
"பிள்ளைகளெல்லாம் எங்கே படிக்கிறார்கள்?"
"எல்லாம் வடக்கே இருக்கிற யுனிவர்ஸிட்டிகளில். இடையிடையே மாணவர் போராட்டம் வேறு."
"பிள்ளைகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் குருவாயூரப்பா," மரியாம்மா சொன்னாள்.
"பகவானே!" நான் இடைமறித்தேன். "ராதையை பிரிந்து ரொம்ப நாளாயிற்றா?"
குருவாயூரப்பன் சிந்தனையிலாழ்ந்தார்.
"யுகங்கள்..." குருவாயூரப்பனின் பதிலில் ஏக்கம் தெரிந்தது.

எனக்கும் பி.கெ.மரியாம்மாவிற்கும் குருவாயூரப்பனைப்பார்க்க பாவமாயிருந்தது.
எங்களுடைய கல்யாணம் முடிந்தபிறகும் ஐம்பது வருஷம் நாங்கள் பிரிந்து வாழவேண்டி யிருந்ததை நாங்கள் நினைத்துக்கொண்டோம். நான் டெல்லியிலும் பி.கெ.மரியாம்மா அவளுடைய ஊரிலும். மாதச்சம்பளம் எழுபத்தையாயிரம் ஆனபோதுதான் அவளை டெல்லிக்கு அழைத்துவர எனக்கு சாத்தியப்பட்டது.

"தெய்வமே, நான் ஒரு பாட்டுபாடவா? உங்கள் திருவடிக்கு ஆறுதலாக இருக்கும்."
"பாடு."
நான் பாடத்தொடங்கினேன்.
"மேரே மன் கி கங்கா
ஒளர் தேரே மன் கி ஜம்னா கா
போல் ராதா போல், ஸங்கம்
ஹோகா கி நஹி"
"வாவ்! அரே வாவ்!" குருவாயூரப்பன் கூவினார்.
"சொந்த வீட்டில் இருப்பது போல இருக்கிறது இல்லையா?" மரியாம்மாவின் கேள்வி.
"ஆமாம்" குருவாயூரப்பனின் முகத்தில் சிரிப்பு.
"அத்தோடு இதையும் வைத்துக்கொள்ளுங்கள்," என்று சொல்லியபடி மேல்துண்டின் முடிச்சவிழ்த்து குருவாயூரப்பனுக்கு முன்பாக நீட்டினேன். டெல்லியில் 'வெங்கேர்ஸ்' ல் வாங்கிய கோதுமை அவல் அது. குருவாயூரப்பன் ஒரு பிடி அவல் வாரி எடுத்தார்.
இரண்டாவது பிடி எடுக்கும்போது மேல்சாந்தி நம்பூதிரி குருவாயூரப்பனைத் தடுத்தார்.
என்னுடைய மூட்டையை நம்பூதிரி தட்டிப்பறித்துக்கொண்டார்.

இத்தனை சம்பாஷணைக்கு இடையிலும் குருவாயூரப்பன் கர்ப்பக்கிரகத்திற்கு பின்னால் இருந்த குளோஸட்டிற்கு இரண்டு மூன்று தடவைகள் போய்வந்து கொண்டிருந்தார்.
"என்ன?......உடம்பு சரியில்லையா?" மரியாம்மா கேட்டாள்.
"இவங்க போடுற அரிசி......." குருவாயூரப்பன் அலுத்துக்கொண்டார். "நித்தமும் அரிசிச்சோறும், அரிசிப்பாயஸமும் தான். நாசம். என்னுடைய வயிற்றை புரட்டிக்கொண்டே இருக்கிறது."
நான் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன்.
குருவாயூரப்பன் தான் பேசினார்."இருக்கட்டும். இதற்கெல்லாம் ஒரு முடிவு வருமடா! கட்டாய இந்தியும் கட்டாய சப்பாத்தியும் வரத்தான் போகிறது. அன்றைக்கு இந்த அரிசி சாப்பிடுகிற தேவஸ்தான கமிஷனரை தூக்கியடிப்பேன். ஒரு கோடி சூரியன் பொங்கிவந்தாற்போலிருக்கும் அப்போது."
"அது எப்போது நடக்கும்." பக்தி மேலீட்டு நான் கேட்டேன்.
"கல்கி!" குருவாயூரப்பன் தான் சொன்னார்.

"போகலாம்" மேல்சாந்தி இடைமறித்தார். "தரிசனம் முடிந்தது. நீங்கள் போகலாம்."
"பத்மாஷ்" குருவாயூரப்பன் கொதித்தெழுந்தார்.
"உங்களுக்கு வேண்டுமென்கிறதை எங்களிடம் கேளுங்கள்," நம்பூதிரி குருவாயூரப்பனை அமைதிப்படுத்தினார்.
என்னிடம் திரும்பி,"ஸால், நீங்கள் இடத்தைவிட்டுப்போவது தான் உத்தமம். மறுபடியும் ஏதாவது பர்பியோ, ஷம்மிகபாபோ கொடுத்து சங்கடம் உண்டாக்கப்பார்க்கவேண்டாம்."
உடனே பகவானிடம் திரும்பி,"விளையாட்டெல்லாம் வேண்டாம். போனதடவை நீங்கள் செய்த முட்டாள்தனத்தால் தேவஸ்தானத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம்."
"ஏய்! நம்பூதிரி.....பி.கெ.மரியாம்மா கொதித்தெழுந்தாள்." சின்னப்பையனைப்பார்த்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லாதே!"
குருவாயூரப்பன் திரும்பி நின்று கொண்டார். ஒன்றுமறியாதவரைப்போல 'உச்' கொட்டினார்.
அதற்குமேல் அங்கு நிற்கப்பிடிக்காமல் நானும் பி.கெ.மரியாம்மாவும் அங்கிருந்து வெளியேறினோம்.

வாசலைக்கடந்து வெளியே வரும்போது உரத்தகுரலில் ஒரு கேள்வி."யாரடா இந்த முட்டாள்!"
அங்கே தொங்கிக்கொண்டிருந்த பெரிய மணியிலிருந்துதான் அந்தக்கேள்வி வந்தது. பக்கத்தில் போய் நான் அந்த மணியைப்பார்த்தேன். ஒரு சிறிய வால் அந்த மணியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்தது. பெருவிரலுக்கும் சுண்டுவிரலுக்கும் இடையில் அந்த வாலை அழுத்திப்பிடித்துக்கொண்டு அது என்னவென்று பார்த்தேன். ஒரு பாம்புக்குட்டியிலன் வால் அது. அதை மெல்ல வெளியே இழுத்தபோது நீண்டுகொண்டே வந்தது.
"அய்யோ!" பி.கெ.மரியாம்மா அலறினாள்.
பாம்பு மிகப்பெரியதாக நீண்டுகொண்டிருந்தது. நான் அதைப்பிடித்தவாறே நடந்தேன். பிரதட்சணம் செய்தேன். மூன்றுமுறை பிரதட்சணம் செய்தேன். மூன்று முறை தெய்வத்தை கூவி அழைத்தேன். பாம்பு அப்போதும் நீண்டுகொண்டே இருந்தது.
"அடியே......பி.கெ.மரியாம்மா " என்று மரியாம்மாவைக் கூப்பிட்டேன். "நீ பஸ் ஸ்டாண்டிற்குப் போ.
நான் வரும்வரை அங்கேயே காத்திரு!"
பாம்பின் வாலைப்பிடித்தபடி நான் கோவில் குளத்தைநோக்கி ஓடினேன். பிடித்தபிடியை விட்டுவிடாமல் நீரில் மூழ்கியபடி நூறுமுறை கடவுளை ஜபித்தேன். "ஸாலா பேஞ்சோத்!"
அசரீரி கேட்டது.
"வாஸூகி.....விட்டுவிடு. அவன் டெல்லியிலிருந்து வருகிறவன். "
தண்ணீர்ப்பரப்பிற்கு மேலாக மேகக்கூட்டங்களுக்கிடையில் அசரீரி முழங்கியது."ச்சோடோ,வாஸூகி!.......ச்சோடோயா!"
கடைசியில் நான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தபோது பி.கெ.மரியாம்மா எனக்காக காத்துக்கொண்டிருந்தாள்.
"அன்பே!" என்று வாஞ்சையோடு அழைத்தாள்.
"நீங்கள் எல்லாவற்றையும் சமாளித்து வந்துவிடுவீர்கள் என்று எனக்குத்தெரியும். நான் உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்."
அவள் அத்தோடு நிற்கவில்லை.
"திருவிதாங்கூர்காரர்களை நம்பினாலும் நம்பலாம், இந்துஸ்தானி காரர்களை நம்பக்கூடாது."


`

Wednesday, April 1, 2009

களைத்துப் போன கால்களும் களைத்துப் போகாத உள்ளங்களும்




“பஸ் கட்டணம் ஏற்கனவே 50 சதவீதம் உயர்ந்து விட்டது. பஸ் புறக்கணிப்பை நீங்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்தால் போக்குவரத்து நிறுவனத்திற்கு உண்டாகும் இழப்பை ஈடுகட்ட நீங்கள் மேலும் 18 மாதங்களுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்தவேண்டும். அதுமட்டுமல்ல.. வாழ்நாள் முழுவதுமே நீங்கள் கூடுதலாக பஸ்கட்டணம் செலுத்தவேண்டி வரும்..

உங்களுடைய கடமை உணர்ச்சி எங்கே போனது? ஒருநிமிடம் உங்களுடைய வீட்டைப் பாருங்கள். உங்களுக்கு நாகரிகமாக சமைக்கக் கற்றுக் கொடுத்தது யார்? மருந்துகளும் மின்சாரமும் துணிமணிகளும் வீடும் காரும் எப்படி வந்தது?

நீங்கள் வாழ்வதற்கே மாண்ட்கோமரி நகரத்து வெள்ளையர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்களில் பலரையும் வெள்ளை இன டாக்டர்தான் இந்த பூமிக்கு கொண்டுவந்தார் என்பது நினைவில் இருக்கட்டும்.

உங்களுக்கு கல்வி கொடுக்கவும் வேலை கொடுக்கவும் வீடு கொடுக்கவும் ஆகும் செலவில் 95 சதவீதம் வெள்ளையர்களாகிய நாங்கள் கொடுக்கும் பணத்தில்தான் என்பதை மறந்துவிட வேண்டாம். நாங்கள் உங்களுக்கு வேலை கொடுக்கவில்லையென்றாலும் இருக்க இடம் கொடுக்கவில்லையென்றாலும் நீங்கள் எங்கே போவீர்கள்?”

மாண்ட்கோமரி அட்வர்டைஸர் இதழில் 1956 ஜனவரி 13 தேதியன்று அந்த நகரத்தின் நீக்ரோக்களை எச்சரிக்கை செய்து ஹில் லிண்ட்சே என்ற வெள்ளையர் வெளியிட்ட அறிக்கைதான் நாம் மேலே படித்தது.

அமெரிக்க நாட்டின் அலபாமா மாகாணத்தின் மாண்ட்கோமரி நகரத்து கறுப்பின மக்களான நீக்ரோக்களை வெள்ளையர்கள் எச்சரிக்க வேண்டிய அவசியம் என்ன?

கிட்டத்தட்ட நம்முடைய ஊரில் இருக்கும் பிரச்சினை போன்றதுதான். இன அடிப்படையிலான தீண்டாமைதான்.

மாண்ட்கோமரி நகரம் ஆயிரக்கணக்கான நீக்ரோக்களின் பிறப்பிடம். அடிமைத்தனத்தை ஆதரிக்கும் பழமைவாதிகளின் கோட்டை. கறுப்பர்களை வெளிப்படையாகவே எதிர்க்கும் வெள்ளையர்களின் இருப்பிடம்.

1955 டிசம்பர் 1ஆம் தேதி ரோஸா பார்க்ஸ் என்ற தையல் தொழில் செய்யும் நீக்ரோ பெண்மணி மாண்ட்கோமரி புறநகரில் க்ளீவ்லாண்ட் அவென்யூ பஸ்ஸில் ஏறினாள். கறுப்பர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துகொண்டாள்.

வெள்ளையர்கள் அதிகமாக ஏறினால் கறுப்பர்கள் எழுந்து இடம் கொடுக்கவேண்டும் என்பது அந்த நகரத்தின் சட்டம். டிரைவரின் கட்டளையை ஏற்று அவளுடைய வரிசையில் அமர்ந்திருந்த எல்லோரும் எழுந்துகொண்டனர். ரோஸா பார்க்ஸ் மட்டும் எழுந்திருக்க மறுத்துவிட்டாள்.

சில நிமிடங்களுக்குள் ரோஸா பார்க்ஸ் கைதுசெய்யப்பட்டு மாண்ட்கோமரி சிறையில் அடைக்கப்பட்டாள். மாண்ட்கோமரி நகரத்து சட்டப்படி நகர பஸ்களில் முன்பகுதி வெள்ளையர்களுக்கும் பின்பகுதி கறுப்பர்களுக்கும் ஒதுக்கப்பட்டு இடையில் ஒரு தடுப்பு வைக்கப்பட்டிருக்கும்.

வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கறுப்பர்கள் அமர முடியாது. வெள்ளையர்கள் அதிகம்பேர் ஏறினால் தடுப்பு பின்னோக்கி நகர்த்தப்படும். உட்கார்ந்திருந்த கறுப்பர்கள் எழுந்து கொள்ளவேண்டும். கறுப்பர்கள் அதிகம் பேர் ஏறினால் தடுப்பு முன்னோக்கி நகர்த்தப்பட மாட்டாது. வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தாலும் கூட அதில் கறுப்பர்கள் அமர முடியாது. நின்றுகொண்டுதான் பயணம் செய்ய வேண்டும்.

இத்தனைக்கும் அந்த நகரத்தின் பஸ் பயணிகளில் 60% பேர் கறுப்பர்கள். கறுப்பர்கள் முன்வாசலில் ஏறிச்சென்று டிக்கெட் வாங்கியபிறகு இறங்கி வந்து பின்வாசல் வழியாக மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கொள்ளவேண்டும். அதற்குள் பஸ் நகரத் தொடங்கிவிட்டாலும் கேள்வியில்லை.

நீக்ரோ பணிப்பெண்கள் வெள்ளையர்களின் குழந்தைகளை சுமந்து செல்லும்போதும், இயலாத வெள்ளையர்களுக்கு துணையாக செல்லும் போதும் மட்டும் வெள்ளையர்களின் இடங்களில் உட்காரலாம். பஸ் டிரைவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு போலீஸ் அதிகாரிக்கு நிகரான அதிகாரத்தை பஸ் டிரைவர்களுக்கு இந்த சட்டம் வழங்கியிருந்தது.

நிறப்பாகுபாடு பஸ்களில் மட்டுமல்லாமல் பூங்காக்கள், பள்ளிகள், ஒய்வுவிடுதிகள், திரையரங்குகளிலும் நிலவியகாலம் அது. கறுப்பர்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை. நீதிமன்றங்கள் கூட கறுப்பர்களுக்கு சாதகமாக இல்லை. ரோஸா பார்க்ஸ் கைதுசெய்யப்பட்ட பிறகு என்ன நடந்தது? அடுத்த நாள் கறுப்பின மக்களில் முக்கியமானவர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.

மாண்ட்கோமரி முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக உரிமைகளுக்கான ஒரு போராட்ட வீரர் உலகிற்கு அன்றுதான் அறிமுகமானார். அன்றையதினம் அவர் நிகழ்த்திய போராட்ட உரை மக்களைக் கவர்ந்தது.

“ஒரு முக்கியமான முடிவெடுக்க இங்கே கூடியிருக்கிறோம். நாமெல்லோரும் அமெரிக்க குடிமக்களாக இருப்பதினால் நமது குடியுரிமையை முழுமையாக பயன்படுத்த இங்கே கூடியிருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிருப்பதால் இங்கே கூடியிருக்கிறோம்.

வலிமையற்ற காகிதத்திலிருந்துதான் வலிமையான செயல்வடிவம் பெற முடியும் என்ற நம்முடைய ஆழமான நம்பிக்கையினால் இங்கே கூடியிருக்கிறோம். ஆனால் ஒரு நோக்கத்திற்காக கூடியிருக்கிறோம். மாண்ட்கோமரி நகரத்தின் பஸ்களில் நமக்கு இழைக்கப்படும் அநீதியை களைவதற்காக இங்கே கூடியிருக்கிறோம்.”

அன்று முக்கியமான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டிசம்பர் 5ஆம் தேதியில் இருந்து போராட்டம் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது. பஸ் டிரைவர்கள் கனிவாக நடந்து கொள்வார்கள் என்ற உறுதி ஏற்படும்வரையில் நீக்ரோக்கள் பஸ்களில் பயணம் செய்ய மாட்டர்கள்.

பஸ்களில் இனப்பாகுபாடு நீக்கப்படவேண்டும். முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படவேண்டும். நீக்ரோக்களையும் டிரைவர்களாக நியமிக்க வேண்டும்.

போராட்டத்தின் முதல்நாளன்று ஏறத்தாழ 100 சதவீதம் நீக்ரோக்கள் நகரத்து பஸ்களை புறக்கணித்தனர். நடந்தும், வாடகைக்கார் மூலமாகவும், நண்பர்களின் கார்களின் மூலமாகவும் வேலைக்குச்சென்றனர். சிலர் கழுதைகளைப் பயன்படுத்தியும் பயணம் செய்தனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நான்காம் நாளன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டத் தலைவர்கள் விட்டுக் கொடுப்பதாயில்லை.

நீக்ரோக்கள் நடத்திவந்த வாடகை டாக்ஸிகளுக்கு சவாரி ஒன்றுக்கு பஸ் கட்டணத்திற்கு இணையாக இதுவரை 10 செண்ட் வசூலிக்கப்பட்டு வந்தது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக டாக்ஸி கட்டணம் நபர் ஒன்றுக்கு 45 செண்ட் ஆக உயர்த்தி நகர நிர்வாகம் உத்தரவு போட்டது.

17,500 நீக்ரோக்கள் பஸ் பயணத்தை நம்பி வேலைக்குச் சென்றுவந்த நிலையில் இந்த உத்தரவு கறுப்பின மக்களுக்கு பேரிடியாக இருந்தது. வேலைக்குச்செல்வோரும், கடைகளுக்கு பொருட்கள் வாங்கச்செல்வோரும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோரும் நடந்தே சென்றனர்.

கறுப்பின மக்களில் கார் வைத்திருந்தவர்கள் பிரைவேட் டாக்ஸி என்ற முறையில் கறுப்பினத்தவரை வேலைக்குச்செல்ல உதவி செய்ததால் போராட்டம் தொய்வின்றி நடந்தது.

போராட்டத்தை இதே வழியில் நீண்ட நாட்களுக்கு நடத்தமுடியாது என்பதை உணர்ந்த கறுப்பினத் தலைவர்கள் மாண்ட்கோமரி நகர நிர்வாகத்தை எதிர்த்து பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

1956 ஜூன் 4ம் தேதி பஸ்களில் இனப்பாகுபாடு சட்டவிரோதம் என்ற தீர்ப்பை இரண்டு நீதிபதிகளில் ஒருவர் மட்டும் வழங்கினார். எனினும் மாண்ட்கோமரி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. எனவே போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. ஓராண்டு முடிவில் 1956 டிசம்பர் 20ல் பஸ்களில் இனப்பாகுபாடு சட்டவிரோதம் என்பதை சுப்ரீம்கோர்ட் உறுதி செய்தது.

மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்புப் போராட்டத்தின் முக்கியத்துவம் அதனுடைய வன்முறையற்ற போராட்ட நடைமுறையாகும். வன்முறையற்ற போராட்ட நடைமுறை வெள்ளையர்களைக்கூட கவர்ந்தது.

மேலும் அரசியல் தீர்வு காண்பதற்காக வன்முறையற்ற போராட்ட நடைமுறை பல உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்தின் வெற்றி இனஒதுக்கல் கொள்கையர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண அடியாக கருதப்படுகிறது.

போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவர்கள் கிறித்துவ மத கோட்பாடுகளில் ஊறியவர்களாகவும் கடவுள், அன்பு, நீதி ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். மேலும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். சாத்வீகமான முறையில் இனப்பாகுபாட்டை எதிர்த்தொழிக்க முடியும் என்ற நம்பிக்கையை நீக்ரோக்களிடையே இந்தப் போராட்டம் விதைத்தது.

நாட்டின் நீதிமன்றங்களின் மேலிருந்த நம்பிக்கை தகர்ந்து விடாதிருக்கவும் இந்த போராட்டம் காரணமாக இருந்தது. மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்புப் போராட்டம் அமெரிக்க வரலாற்றின் பக்கங்களில் அடிக்கோடிட்ட பகுதியாக விளங்குகிறது.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வன்முறையற்ற போராட்டமாக உருவெடுத்தது. இயேசு கிறிஸ்துவின் அன்பு, சமாதானம், பகைவனுக்கும் அன்பு பாராட்டுதல் என்ற கொள்கைகளோடு மகாத்மா காந்தியின் அகிம்சை கோட்பாட்டையும் ஆதார சுருதியாக இணைத்துக் கொண்டதால் உலக நாடுகளின் கவனத்தை இந்த போராட்டம் ஈர்த்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.