Friday, April 10, 2009
ஓடிப்போ குதிரையே! லாயத்தைப் பூட்டவேண்டும்!
10-4-2009 வெள்ளிக்கிழமை அன்று தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் கருத்தாழமிக்கது. மக்களின் அன்றாட பிரச்சினைய வெளிச்சம்போட்டுக்காட்டும் அந்த தலையங்கத்தை நடுநிலையாளர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் தனியார் பள்ளிகள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதை இந்தத் தலையங்கம் குறைகூறுகிறது. அண்மையில் வெளியான தமிழக அரசின் அறிவிப்பின்படி தேர்தல் முடிந்தபிறகு தவறுசெய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகு முன் தேதியிட்டு இந்த பணப்பயன் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் ஒருநாள் தாமதமாக சம்பளம் கிடைத்தது என்கிற காரணத்திற்காக 74 பள்ளிகளை மூடிவிட்டு 158 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முன் தேதியிட்டு இரத்து செய்யப்பட்டது.
ஆனால் கல்விக்கட்டணம் என்கிற பெயரில் பொதுமக்களிடம் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளின் மீது தேர்தல் முடிந்தபிறகுதான் நடவடிக்கையாம். இது என்ன நியாயம்?
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தனியார்பள்ளிகள் மாணவர் சேர்க்கையை முடித்து கல்லா கட்டிவிடும். குதிரை ஓடிப்போனபிறகு லாயத்தை பூட்டுவது போன்றது இது.
சிறிய நகரத்தில்கூட ஒரு குழந்தைக்கு கல்விக்கட்டணமாக 6,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கொடுத்து அழ வேண்டியிருக்கிறது. இதைத்தவிர பாடப்புத்தகம், சீருடை, காலணி என்று இந்தப்பள்ளிகள் அடிக்கும் கொள்ளை தனி.
ஆனால் இந்த தனியார் பள்ளிகளுக்கு அரசு பல்வேறு வரிச்சலுகைகளை இப்போதும் அளித்து வருகிறது.
பெரும்பான்மையான தனியார்பள்ளிகள் சிறுபான்மையினரால் நடத்தப்படுவதால் தேர்தல் சமயத்தில் அவர்களின் வாக்கு வங்கியை சீண்டவேண்டாம் என்றுகூட இந்த அரசு கருதியிருக்கலாம். தங்களுடைய குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக்கொடுக்கவேண்டும் என்பதற்காக பல சவுகரியங்களையும் தியாகம் செய்யும் பெற்றோர்களை இந்த அரசு எண்ணிப்பார்க்காததுதான் இப்போதைய சோகம்.
இந்த அரசு எதை எதையோ இலவசமாக அளிக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத்தேவையான கல்வியை மட்டும் எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறது.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று மட்டுமே நாம் இப்போது சொல்லமுடியும்.
Labels:
என் பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//இந்த அரசு எதை எதையோ இலவசமாக அளிக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத்தேவையான கல்வியை மட்டும் எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறது.//
நல்ல ஆதங்கம் ஐயா..
Post a Comment