Thursday, June 25, 2009

குறைவான தங்கம்....நிறைவான தரம்




சாதனை படைத்த செவித்திறன் குறைந்தோர் பட்டியலில் மேலும் இருவர் சேர்ந்துள்ளனர்.

இந்த இருவரும் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் செய்தி.

காரைக்குடியைச்சேர்ந்த பாண்டி முருகன், கோயம்புத்தூரைச்சேர்ந்த நாகா தேவராஜ் இருவரும் செவித்திறன் குறைந்தவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளி மாணவர்கள்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இருவரும் முறையே 300/400, 296/400 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் 6 வருட ஒருங்கிணைந்த பி.டெக். பட்டப்படிப்பில் இருவரும் சேர்ந்துள்ளனர்.

இதே பள்ளியில் படித்த நான்கு மாணவர்கள் ஏற்கனவே கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் SPEECH AND HEARING IMPAIRED PERSONS PROGRAMME ல் சேர்ந்து பி.டெக். படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளியின் தலைமை ஆசிரியை மதிப்பிற்குரிய தமிழ்ச்செல்வி கூறும்போது இந்த ஆறுமாணவர்களுக்கும் கலசலிங்கம் பொறியியல் கல்வி நிர்வாகம் இலவச கல்வி அளித்து வருவதாக நன்றியுடன் குறிப்பிட்டார்.

செவித்திறன் குறைந்தவர்களுக்கு கல்வி கற்பது எவ்வளவு கடினமானது என்பதை கற்பிக்கும் பணியில் உள்ளவர்கள் அறிவார்கள்.

கடினமான பணியை அடக்கமாக செய்திருக்கும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இலவசக்கல்வி அளிக்க முன்வந்த கலசலிங்கம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கும் நாம் நன்றி கூறவேண்டும்.

Monday, June 22, 2009

கல்விக்கோயிலில் கள்ளப்பணமழை





வரலாறு பாடப்புத்தகத்தில் ஒரு பிரபலமான கேள்வி இருந்தது.

“குப்தர்களின் காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுவது ஏன்?” என்பதுதான் அந்தக்கேள்வி.

குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் பொய், களவு, சூது இவையெல்லாம் இல்லாமல் இருந்ததாம்.

“ஊழலின் பொற்காலம் எது?” என்று எதிர்கால வரலாற்றுப்புத்தகத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படலாம்.

“திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம்தான் லஞ்சமும் ஊழலும் உச்சத்தில் இருந்தகாலம்” என்று எதிர்காலம் விடையளிக்கும்.

எதையெல்லாம் இலவசமாகக்கொடுக்கலாம் என்று "ரூம்" போட்டு சிந்தித்துக்கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் கல்வியை மட்டும் ஏனோ இலவசமாகக்கொடுக்க மறுத்துவருகின்றனர்.

“அரசாங்கம் நடத்தும் பள்ளிக்கூடங்களில் அநியாய வசூல்”

“பள்ளித்தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை”

என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

ஆனால் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை எந்தவித ரசீதும் இல்லாமல், அரசின் உத்தரவையும் மீறி கட்டணமாக வாங்கும் தனியார் பள்ளிகள் மீது இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லை.

தேர்தலுக்குப்பிறகு தவறு செய்யும் பள்ளிகள்மீது நடவடிக்கை என்று கல்வி அமைச்சர் திருவாய் மலர்ந்தருளினாரே!

தேர்தலும் முடிந்தது. தேன் நிலவும் முடிவுக்கு வந்தது.

அமைச்சரின் வாக்குறுதி என்னவாயிற்று?

தனியார் பள்ளிகளின் முதலாளிகளுக்கும் அமைச்சரின் நடவடிக்கைக்கும் குறுக்கே நிற்பவர் யார்?

அரசின் போதிய கவனிப்பு இன்மையால் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதல பாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

“மாணவர் சேர்க்கைப் பேரணி” என்னும் தலைப்பில் புகைப்படத்துடன் வெளியாகும் படங்களில் பேரணியில் போகும் மாணவர்களின் எண்ணிக்கையைக்காட்டிலும் ஆசிரியர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக தென்படுகிறது.

மாறாக, மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது.

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்விற்கு ஈடுகொடுக்க இயலாதவர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்க முன்வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் தனியார் பள்ளிகளின் முறையற்ற கட்டணவசூலை கண்காணிக்கவோ, கண்டிக்கவோ எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் இதுவரை இல்லை.

கல்வி இப்போது மத்திய அரசின் பட்டியலிலும் இல்லை.

மாநில அரசின் பட்டியலிலும் இல்லை.

கறுப்புப்பண முதலாளிகளின் பட்டியலில் என்றோ சேர்ந்துவிட்டது.

Tuesday, June 16, 2009

கல்வியுடன் கைகுலுக்கும் கறுப்புப்பணம்





தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து பாவேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தமிழக அரசு தாக்கல்செய்த பதில் மனுவில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க ஒரு குழு அமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது வழக்கமான பதில்தான். அரசின் இந்த பதிலைப்பற்றி பொதுமக்கள்தான் கருத்து தெரிவிக்கவேண்டும்.

‘பொதுமக்கள் புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பது அரசின் வாதம். ‘அரசிடமிருந்து எந்த உதவியும் பெறாத கல்வி நிலையங்களின் அநியாய கட்டண வசூலை கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை’ என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பும் பொதுமக்களிடம் ஏராளமான கேள்விகளை விதைத்துள்ளது. தங்களுடைய பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்கவைக்க ஆசைப்படும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பதுதான் சோகம்.

ஆனால் இம்முறை பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது ஒரு அதிசயமான நிகழ்வு. 14 ஆம் தேதி வெளியான செய்தியின்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் அதிகக்கட்டணம் வசூலிப்பதாக 87 புகார்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றுள் 55 பள்ளிகள் அரசுப்பள்ளிகள் என்பது தமிழக அரசுக்கு பெருமை தருவதாக இல்லை.

பெற்றோர்கள் அளிக்கும் புகார்களும் அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் வெளிப்படைத்தன்மையாக இருத்தல் வேண்டும். பள்ளிக்கல்விக்கென உள்ள இணையதளத்தில் புகார்களையும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

கல்வி நிலையங்களை நடத்துவோருக்கும், அரசியலில் பணம் பண்ணுவோருக்கும் கள்ளக்கூட்டணி இருப்பதாக மக்களிடம் சந்தேகம் இருக்கிறது.

சந்தேகத்தைப்போக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

Monday, June 8, 2009

கருணைக்கண் திறக்குமா?...கல்வித்தாகம் தீருமா?...





அரசுப்பள்ளிகளிலும் அரசின் உதவிபெற்று நடைபெறும் பள்ளிகளிலும் தமிழ்மீடியம் வகுப்புகளைப்போன்றே ஆங்கில மீடியம் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன என்பது நகர்ப்புறவாசிகள் பலரும் அறியாத ஒன்று.

அரசின் உதவிபெற்று நடைபெற்றுவரும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியத்தை மட்டும் அரசே கொடுத்துவிடும். பள்ளியின் நிர்வாகம் முழுவதும் தனிநபர்களிடம் இருக்கும். இவை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இல்லை.

அரசுப்பள்ளிகளிலும் அரசின் உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ்வழியாக பயிலும் மாணவர்களிடம் எந்தஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. முற்றிலும் இலவசம்.

மாறாக, ஆங்கில வழியில் பயில விரும்பும் மாணவர்களுக்கு 6 முதல் 8 வகுப்புகளுக்கு கட்டணமாக 200 ரூபாயும் 9,10 வகுப்புகளுக்கு 250 ரூபாயும் 11,12 வகுப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

அரசுப்பள்ளிகளையும் அரசின் உதவிபெறும் பள்ளிகளையும் நாடிவருபவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள்தான்.

ஆங்கில வழியில் தங்களுடைய பிள்ளைகள் படித்து மேல்தட்டு மக்களுக்கு இணையாக வளர வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுவதில் என்ன தவறு?

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியை முற்றிலும் இலவசமாக அளிப்பதைப்போன்றே ஆங்கில வழியில் பயில விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக்கல்வி அளிப்பதால் வரிவருவாயில் மூழ்கித்திளைக்கும் தமிழக அரசு மூழ்கிப்போய்விடுமா என்ன?

Sunday, June 7, 2009

நம்மவழி...தனீஈஈஈ வழி

இவர்களின் முன்னேற்றத்திற்கு என்னவழி?




இப்படி ஓட்டுவாங்கி........




இப்படிப்போவதுதான்....

Saturday, June 6, 2009

சிக்கலில் சிக்கிய குண்டுக்குழந்தைகள்





தென்னிந்தியக்குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒர் ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

13 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்குழந்தைகளில் 22 சதவீதத்தினரும் பெண்குழந்தைகளில் 18 சதவீதத்தினரும் உடல் பருமனாகவோ, சர்க்கரைநோய் பாதிப்புடனோ இருப்பதாக இந்த தகவல் கூறுகிறது.

தமிழக அரசின் குடும்பநலத்துறை செயலர் திரு வி.கே.சுப்புராஜ் கூறுகையில் “வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவ்வாறு குழந்தைகள் குண்டாகிப்போனதற்கான காரணம்” என்கிறார்.

நமக்கெல்லாம் தெரியாத செய்தி இல்லை இது.

கையில் ஒரு எண்ணெய்ப்பண்டத்தை ஏந்தியபடி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, “இந்தப்பந்தை இப்படிப் பிடித்திருந்தால் அது ‘கேட்ச்’ ஆகி இருக்கும்” என்று ஆண்டி மடம் கட்டியதுபோல் விமர்சனம் செய்துகொண்டு குடும்பமே நாற்காலியில் உட்கார்ந்து கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் அவலம் பல வீடுகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

“தாய் தகப்பன் எக்கேடாவது கெட்டுப்போகட்டும்” என்று நாம் சும்மா இருந்துவிடலாம். “பாவம் இந்த மழலைகள் தொந்திபெருத்து வாழ்க்கைச்சுமையுடன், தொந்தியையும் சுமக்கவேண்டுமா” என்று எண்ணுகையில் நம்முடைய மனம் வேதனைப்படுகிறது.

இப்போதெல்லாம் 20 சதவீத தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த குறைபாட்டிற்கு ஒரு முக்கியமான காரணம் உடற்பருமன் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்கு பள்ளிப்பருவத்திலேயே உடலை சீராக வைத்திருப்பதன் அவசியத்தை வகுப்பறைகளிலேயே சொல்லித்தரவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஏற்கனவே நீதிபோதனை வகுப்புகளை நாம் வேண்டாமென்று ஒதுக்கித்தள்ளிவிட்டோம்.

இந்த சூழ்நிலையில் “தொப்பை இல்லாமல் வாழ்வது எப்படி” என்று பிள்ளைகளுக்கு வகுப்பெடுப்பது சாத்தியமா? சொன்னாலும் மாணவர்கள் சிரிக்காமல் கேட்டுக்கொள்வார்களா என்பதெல்லாம் ஐயத்திற்குரியவைதான்.

Indian Journal of Community Medicine அளிக்கும் தகவலின்படி குழதைப்பருவத்தில் தொந்தி தொப்பைகளுடன் இருப்பவர்களில் 50 முதல் 80 சதவீதம் பேர்கள் வாழ்க்கைமுழுவதும் உடற்பருமனோடு வாழ்கிறார்களாம்.

மேலும் உடற்பருமனுக்கு கொசுறாக உற்பத்தியாகும் நோய்களும் இவர்களின் உடலில் குடியேறிக்கொள்கிறதாம்.

ஆங்கிலக்கல்வி மீது நமக்கு ஏற்பட்டிருக்கும் மோகத்தால் நாம் இழந்தவை ஏராளம்.

நம்முடைய குழந்தைகள் இழக்கப்போவதும் ஏராளம்.

குழந்தைகள் “குழந்தைத்தனம்” இல்லாது வளருகிறார்கள்.

எப்போதும் “படி,படி” என்று நச்சரிப்பதால் தூக்கம் கலையாமல் பள்ளிக்குப்போவதும் தூக்கக்கலக்கத்துடனேயே வீட்டுக்கு வருவதும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

நமது குழந்தைகள் அமைதியாக உறங்கட்டும். விழிப்படையவேண்டியது பெற்றோர்களே!

Monday, June 1, 2009

தனிவழியே போகும் தமிழ்வழிக்கல்வி




கோடை விடுமுறைக்குப்பிறகு இன்று (01-06-2009) அரசுப்பள்ளிகளும் அரசின் உதவிபெறும் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எதிர்வரும் 3ஆம் தேதி திறக்கப்படும் என்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 5ஆம் தேதி திறக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பள்ளிக்கூடம் எந்தத்தேதியில் திறந்தால் என்ன? இதில் என்ன முக்கியத்துவம் உள்ளது என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் இந்த வேறுபட்ட தேதிகள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

ஒரு மக்கள் நல அரசுக்கு தன்னுடைய மாநிலத்தில் கல்விநிலையங்களின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதை இந்த வேறுபட்ட தேதிகள் நமக்கு உணர்த்துவதாக ஏன் கருதக்கூடாது?

சமச்சீர் கல்வியைக்கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால் இதுபோன்ற சிறு சிறு நிர்வாக முடிவுகளை அனைத்துவகையான கல்விநிலையங்களும் ஏற்குமாறு செய்தல்வேண்டும்.

என்னுடைய கருத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாகத்தான் இன்றைய தினமணியின் தலையங்கம் இருக்கிறது.

+2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போது அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருப்பதால் தேர்வுமுடிவுகளை ஒன்றாகச்சேர்த்து வெளியிடுகின்றனர்.

ஆனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தரவரிசைப்படுத்தும்போது தமிழை முதல் மொழியாக படித்து தேர்வு பெற்றவர்களைமட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறது இந்த அரசு.

அதாவது தமிழ்வழியாகவே அனைத்து பாடங்களையும் படித்தவர்களையும், ஆங்கிலவழியில் அனைத்து பாடங்களையும் படித்தவர்களையும் ஒரே தராசில் நிறுத்து தரவரிசையை கணக்கிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

தமிழைப்படிப்பது வேறு; தமிழிலேயே படிப்பதுவேறு என்பது ஏன் இந்த அரசுக்கு தெரியவில்லை.

இதற்கு மாறாக பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகளை வெளியிடும்போது அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் இவற்றிற்கான முடிவுகள் தனியாகவும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தனியாகவும், ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தனியாகவும் வெளியிடப்படுகின்றன. உண்மையில் இந்த பள்ளிகள் அனைத்தும் ஒரே வினாத்தாளைக்கொண்டவை இல்லை.

அரசிற்கு உண்மையிலேயே தமிழக மாணவர்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வற்ற சமச்சீரான இலவசக்கல்வி வழங்கவேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் இந்த வேறுபாடுகளைக்களைவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.