Saturday, June 6, 2009

சிக்கலில் சிக்கிய குண்டுக்குழந்தைகள்





தென்னிந்தியக்குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒர் ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

13 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்குழந்தைகளில் 22 சதவீதத்தினரும் பெண்குழந்தைகளில் 18 சதவீதத்தினரும் உடல் பருமனாகவோ, சர்க்கரைநோய் பாதிப்புடனோ இருப்பதாக இந்த தகவல் கூறுகிறது.

தமிழக அரசின் குடும்பநலத்துறை செயலர் திரு வி.கே.சுப்புராஜ் கூறுகையில் “வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவ்வாறு குழந்தைகள் குண்டாகிப்போனதற்கான காரணம்” என்கிறார்.

நமக்கெல்லாம் தெரியாத செய்தி இல்லை இது.

கையில் ஒரு எண்ணெய்ப்பண்டத்தை ஏந்தியபடி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, “இந்தப்பந்தை இப்படிப் பிடித்திருந்தால் அது ‘கேட்ச்’ ஆகி இருக்கும்” என்று ஆண்டி மடம் கட்டியதுபோல் விமர்சனம் செய்துகொண்டு குடும்பமே நாற்காலியில் உட்கார்ந்து கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் அவலம் பல வீடுகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

“தாய் தகப்பன் எக்கேடாவது கெட்டுப்போகட்டும்” என்று நாம் சும்மா இருந்துவிடலாம். “பாவம் இந்த மழலைகள் தொந்திபெருத்து வாழ்க்கைச்சுமையுடன், தொந்தியையும் சுமக்கவேண்டுமா” என்று எண்ணுகையில் நம்முடைய மனம் வேதனைப்படுகிறது.

இப்போதெல்லாம் 20 சதவீத தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த குறைபாட்டிற்கு ஒரு முக்கியமான காரணம் உடற்பருமன் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்கு பள்ளிப்பருவத்திலேயே உடலை சீராக வைத்திருப்பதன் அவசியத்தை வகுப்பறைகளிலேயே சொல்லித்தரவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஏற்கனவே நீதிபோதனை வகுப்புகளை நாம் வேண்டாமென்று ஒதுக்கித்தள்ளிவிட்டோம்.

இந்த சூழ்நிலையில் “தொப்பை இல்லாமல் வாழ்வது எப்படி” என்று பிள்ளைகளுக்கு வகுப்பெடுப்பது சாத்தியமா? சொன்னாலும் மாணவர்கள் சிரிக்காமல் கேட்டுக்கொள்வார்களா என்பதெல்லாம் ஐயத்திற்குரியவைதான்.

Indian Journal of Community Medicine அளிக்கும் தகவலின்படி குழதைப்பருவத்தில் தொந்தி தொப்பைகளுடன் இருப்பவர்களில் 50 முதல் 80 சதவீதம் பேர்கள் வாழ்க்கைமுழுவதும் உடற்பருமனோடு வாழ்கிறார்களாம்.

மேலும் உடற்பருமனுக்கு கொசுறாக உற்பத்தியாகும் நோய்களும் இவர்களின் உடலில் குடியேறிக்கொள்கிறதாம்.

ஆங்கிலக்கல்வி மீது நமக்கு ஏற்பட்டிருக்கும் மோகத்தால் நாம் இழந்தவை ஏராளம்.

நம்முடைய குழந்தைகள் இழக்கப்போவதும் ஏராளம்.

குழந்தைகள் “குழந்தைத்தனம்” இல்லாது வளருகிறார்கள்.

எப்போதும் “படி,படி” என்று நச்சரிப்பதால் தூக்கம் கலையாமல் பள்ளிக்குப்போவதும் தூக்கக்கலக்கத்துடனேயே வீட்டுக்கு வருவதும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

நமது குழந்தைகள் அமைதியாக உறங்கட்டும். விழிப்படையவேண்டியது பெற்றோர்களே!

2 comments:

ராஜ நடராஜன் said...

பயனுள்ள இடுகை.நன்றி ஐயா!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிகப் பயனுள்ள பதிவு, பெற்றோருடன் பிள்ளைகளும்
படித்துப் பயன் பெற வேண்டியது.

Post a Comment