Monday, June 1, 2009

தனிவழியே போகும் தமிழ்வழிக்கல்வி




கோடை விடுமுறைக்குப்பிறகு இன்று (01-06-2009) அரசுப்பள்ளிகளும் அரசின் உதவிபெறும் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எதிர்வரும் 3ஆம் தேதி திறக்கப்படும் என்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 5ஆம் தேதி திறக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பள்ளிக்கூடம் எந்தத்தேதியில் திறந்தால் என்ன? இதில் என்ன முக்கியத்துவம் உள்ளது என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் இந்த வேறுபட்ட தேதிகள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

ஒரு மக்கள் நல அரசுக்கு தன்னுடைய மாநிலத்தில் கல்விநிலையங்களின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதை இந்த வேறுபட்ட தேதிகள் நமக்கு உணர்த்துவதாக ஏன் கருதக்கூடாது?

சமச்சீர் கல்வியைக்கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால் இதுபோன்ற சிறு சிறு நிர்வாக முடிவுகளை அனைத்துவகையான கல்விநிலையங்களும் ஏற்குமாறு செய்தல்வேண்டும்.

என்னுடைய கருத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாகத்தான் இன்றைய தினமணியின் தலையங்கம் இருக்கிறது.

+2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போது அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருப்பதால் தேர்வுமுடிவுகளை ஒன்றாகச்சேர்த்து வெளியிடுகின்றனர்.

ஆனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தரவரிசைப்படுத்தும்போது தமிழை முதல் மொழியாக படித்து தேர்வு பெற்றவர்களைமட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறது இந்த அரசு.

அதாவது தமிழ்வழியாகவே அனைத்து பாடங்களையும் படித்தவர்களையும், ஆங்கிலவழியில் அனைத்து பாடங்களையும் படித்தவர்களையும் ஒரே தராசில் நிறுத்து தரவரிசையை கணக்கிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

தமிழைப்படிப்பது வேறு; தமிழிலேயே படிப்பதுவேறு என்பது ஏன் இந்த அரசுக்கு தெரியவில்லை.

இதற்கு மாறாக பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகளை வெளியிடும்போது அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் இவற்றிற்கான முடிவுகள் தனியாகவும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தனியாகவும், ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தனியாகவும் வெளியிடப்படுகின்றன. உண்மையில் இந்த பள்ளிகள் அனைத்தும் ஒரே வினாத்தாளைக்கொண்டவை இல்லை.

அரசிற்கு உண்மையிலேயே தமிழக மாணவர்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வற்ற சமச்சீரான இலவசக்கல்வி வழங்கவேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் இந்த வேறுபாடுகளைக்களைவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment