Monday, June 22, 2009

கல்விக்கோயிலில் கள்ளப்பணமழை





வரலாறு பாடப்புத்தகத்தில் ஒரு பிரபலமான கேள்வி இருந்தது.

“குப்தர்களின் காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுவது ஏன்?” என்பதுதான் அந்தக்கேள்வி.

குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் பொய், களவு, சூது இவையெல்லாம் இல்லாமல் இருந்ததாம்.

“ஊழலின் பொற்காலம் எது?” என்று எதிர்கால வரலாற்றுப்புத்தகத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படலாம்.

“திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம்தான் லஞ்சமும் ஊழலும் உச்சத்தில் இருந்தகாலம்” என்று எதிர்காலம் விடையளிக்கும்.

எதையெல்லாம் இலவசமாகக்கொடுக்கலாம் என்று "ரூம்" போட்டு சிந்தித்துக்கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் கல்வியை மட்டும் ஏனோ இலவசமாகக்கொடுக்க மறுத்துவருகின்றனர்.

“அரசாங்கம் நடத்தும் பள்ளிக்கூடங்களில் அநியாய வசூல்”

“பள்ளித்தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை”

என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

ஆனால் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை எந்தவித ரசீதும் இல்லாமல், அரசின் உத்தரவையும் மீறி கட்டணமாக வாங்கும் தனியார் பள்ளிகள் மீது இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லை.

தேர்தலுக்குப்பிறகு தவறு செய்யும் பள்ளிகள்மீது நடவடிக்கை என்று கல்வி அமைச்சர் திருவாய் மலர்ந்தருளினாரே!

தேர்தலும் முடிந்தது. தேன் நிலவும் முடிவுக்கு வந்தது.

அமைச்சரின் வாக்குறுதி என்னவாயிற்று?

தனியார் பள்ளிகளின் முதலாளிகளுக்கும் அமைச்சரின் நடவடிக்கைக்கும் குறுக்கே நிற்பவர் யார்?

அரசின் போதிய கவனிப்பு இன்மையால் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதல பாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

“மாணவர் சேர்க்கைப் பேரணி” என்னும் தலைப்பில் புகைப்படத்துடன் வெளியாகும் படங்களில் பேரணியில் போகும் மாணவர்களின் எண்ணிக்கையைக்காட்டிலும் ஆசிரியர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக தென்படுகிறது.

மாறாக, மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது.

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்விற்கு ஈடுகொடுக்க இயலாதவர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்க முன்வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் தனியார் பள்ளிகளின் முறையற்ற கட்டணவசூலை கண்காணிக்கவோ, கண்டிக்கவோ எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் இதுவரை இல்லை.

கல்வி இப்போது மத்திய அரசின் பட்டியலிலும் இல்லை.

மாநில அரசின் பட்டியலிலும் இல்லை.

கறுப்புப்பண முதலாளிகளின் பட்டியலில் என்றோ சேர்ந்துவிட்டது.

No comments:

Post a Comment