Tuesday, June 16, 2009

கல்வியுடன் கைகுலுக்கும் கறுப்புப்பணம்





தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து பாவேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தமிழக அரசு தாக்கல்செய்த பதில் மனுவில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க ஒரு குழு அமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது வழக்கமான பதில்தான். அரசின் இந்த பதிலைப்பற்றி பொதுமக்கள்தான் கருத்து தெரிவிக்கவேண்டும்.

‘பொதுமக்கள் புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பது அரசின் வாதம். ‘அரசிடமிருந்து எந்த உதவியும் பெறாத கல்வி நிலையங்களின் அநியாய கட்டண வசூலை கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை’ என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பும் பொதுமக்களிடம் ஏராளமான கேள்விகளை விதைத்துள்ளது. தங்களுடைய பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்கவைக்க ஆசைப்படும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பதுதான் சோகம்.

ஆனால் இம்முறை பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது ஒரு அதிசயமான நிகழ்வு. 14 ஆம் தேதி வெளியான செய்தியின்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் அதிகக்கட்டணம் வசூலிப்பதாக 87 புகார்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றுள் 55 பள்ளிகள் அரசுப்பள்ளிகள் என்பது தமிழக அரசுக்கு பெருமை தருவதாக இல்லை.

பெற்றோர்கள் அளிக்கும் புகார்களும் அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் வெளிப்படைத்தன்மையாக இருத்தல் வேண்டும். பள்ளிக்கல்விக்கென உள்ள இணையதளத்தில் புகார்களையும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

கல்வி நிலையங்களை நடத்துவோருக்கும், அரசியலில் பணம் பண்ணுவோருக்கும் கள்ளக்கூட்டணி இருப்பதாக மக்களிடம் சந்தேகம் இருக்கிறது.

சந்தேகத்தைப்போக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment