Friday, April 3, 2009

பகவான் சன்னதியில்......




மலையாள மூலம்:ஓ.வி.விஜயன்
தமிழில்:மு.குருமூர்த்தி

டெல்லியில் ஜீவனம் நடத்துவதற்கான சம்பளம் கிடைத்தவுடன் குருவாயூர் கோவிலுக்குவருவதாக நேர்ந்துகொண்டிருந்தேன். மாதச்சம்பளம் லட்சம் ரூபாயானபோது லீவு எடுத்துக்கொண்டு குருவாயூருக்கு புறப்பட ஆயத்தமானேன்.
விபரத்தை மனைவியிடமும் சொன்னேன்....

" என்னுடன் கோவிலுக்கு வருவதில் உனக்கு ஒண்ணும் சங்கடமில்லையே?, பி.கெ.மரியாம்மா?"
"இப்போ என்னை இந்துவாக்கிடணும். கல்யாணம் கட்டியது அதுக்குத்தானே?"
"அப்படி யார் சொன்னது?"
"அப்போ நான் ஏன் குருவாயூருக்கு வரணும்?"
"நீ உன்னோட மதத்திலேயே இருந்துக்கோ பி.கெ.மரியாம்மா............புருஷன் நேர்த்திக்கடன் செலுத்தப்போகும்போது மனைவியும்கூட போவதுதான் நல்லது. வேண்டிக்கொண்டதற்கு ஒரு மரியாதை..."
"சரி....நான் வருவேன்.....ஆனால் என்னுடைய மதத்தை விடமாட்டேன்....."
"ஒரு விஷயம்..." நான் இடைமறித்தேன்."இழுத்துப்போர்த்திக்கொண்டு வரவேண்டாம். அரைமுண்டு உடுத்து வரணும்."
"ஏன் அப்படி?"
"அப்படிப்போகவில்லையென்றால் கோவில் கூட்டத்தில் அடி விழும்."
"ஓகோ!" அவளுடைய சங்கடம் குரலில் தெரிந்தது.
"ஆலயப்பிரவேசனத்திற்கு முன்பாக நான் ஒரு முறை குருவாயூர் கோவிலுக்குப்போயிருந்தேன். அப்போதே எனக்கு அடிவிழுந்தது. நானொரு ஷெட்யூல்ட் ஜாதிக்காரனென்று கல்யாணத்திற்கு முன்பே உனக்கு சொல்லியிருக்கிறேனில்லையா?......."
அவள் அழத்தொடங்கிவிட்டாள்.
"கடவுளே! நான் எப்போதாவது உங்களோட பேச்சை மீறியிருக்கேனா? நீங்க போற வழிக்குப் பின்னாலெதானெ நானும் வாரேன்.. எப்போதாவது மாட்டேனென்று சொல்லியிருக்கேனா?நீங்க சங்கடப்படவேண்டாம். அரைமுண்டு கட்டிக்கிறேன்."

பெட்டி படுக்கையெல்லாம் சத்திரத்தில் வைத்த கையோடு நானும் பி.கெ.மரியாம்மாவும் கோயிலுக்குப்போனோம்.
கீர்த்தனைகள் சொல்லியபடி கோவில் சன்னதியில் நடந்தேன். என்னைச்சுற்றிலும் அஷ்டபதி பாடி நடந்த பக்தர் கூட்டம் என் கண்ணில் படவில்லை. அங்கிருந்த கருங்கல் தூண்கள் கண்களில் படவில்லை. அஞ்சன நிறத்தான்.......அந்த குருவாயூரப்பன் மட்டும் தான் கண்ணில் தெரிந்தான். அவன் முன்பாக சாஷ்டமாங்க விழுந்தேன்.

"ஸாலே......." குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
குருவாயூரப்பன் தான்....... என்னைப்பார்த்து கண்ணடித்தார்.
பக்திப்பரவசத்தோடு எழுந்து நின்றேன்.
"வொ க்யா ஹை?"
கேட்டது குருவாயூரப்பன் தான். என்னுடைய கையிலிருந்த ஹிந்தி மாத இதழை சுட்டிக்காட்டி கேட்டார்.
"இதுவா?..........ஹிந்தி புத்தகம்.......சினிமா மாதப்பத்திரிக்கை...."
"இங்கே கொடு...." குருவாயூரப்பன் கைநீட்டினார்.
நான் இதழைக்கொடுத்தேன். அதை ஆவலாக குருவாயூரப்பன் படித்து முடித்தார்.
"இன்னும் ஏதும் இருக்கா?"
நான் கையெடுத்துக்கும்பிட்டேன்.
"தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால் இன்னும் நிறைய ஹிந்தி மாதப்பத்திரிக்கையெல்லாம் கொண்டுவந்திருப்பேன்."
"என்ன தெரியாமல் போனது?"
"பகவானே.....உங்களுக்கு ஹிந்தி தெரியுமென்கிற விஷயம்...."
"ஹிந்தி தெரியுமென்கிற விஷயமா!......முட்டாள்.."
பி.கெ.மரியாம்மா சட்டென்று குறுக்கிட்டாள்.
"ஹிந்துக்களோட தெய்வமே ! உங்களோட தாத்தாவயசு இவருக்கு......முட்டாள் என்று சொல்லவேண்டாம்..."
"இது யாருடா?" குருவாயூரப்பன் கேட்டார்.
என்னுடைய கை தானாகவே கூப்பிக்கொண்டது.
"என்னோட மனைவி. பி.கெ.மரியாம்மா. கூட்டிவைத்துக்கொண்டது. கலப்புக்கல்யாணம். என்னை மன்னிக்கணும்."
"ஓ! அதனாலென்ன?......."
எனக்கு நன்றிமேலிட்டது. கைகூப்பி குருவாயூரப்பனை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றேன்.
"க்யா தேக்யோ தும், ஸாலே?" குருவாயூரப்பன் தான் கேட்டார்.
" ..ம்....ஒன்றுமில்லை..." வார்த்தை இடறியது.
"ஒண்ணுமில்லையா?" குருவாயூரப்பனுடைய கேள்வி.
எனக்கு அழுகைவந்துவிட்டது.
"தெய்வமே! இந்த முட்டாள் மீது கருணைவைக்கணும். நான் வெறும் முட்டாள்."
"கருணை வைத்தோம், சொல்!"
"தாங்கள் மலையாளி என்கிற நினைப்பில்தான் நாங்கள் வளர்ந்தும் ஆளானதும்."
"நான் மாயக்காரனென்கிற விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே?"
"மலையாளியென்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். நீங்கள் நம்பூதிரியாகவோ, ஷாரடியாகவோ, வாரியராகவோ இருக்கலாமென்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்.
"மலையாளிகள் முற்றிய பைத்தியங்கள்! பில்கூல் பாகல்லோக் ஹை!"

பட்டதிரியின் குருட்டு பக்தியைவிட பூந்தானத்தின் பக்தியே தனக்கு ரொம்ப இஷ்டம் என்று சொன்னது. அப்புறம் அனந்தன்காட்டுக்கு வரச்சொல்லி அஸனவில்வாதிமங்கலத்திடம் சொன்னது எல்லாம் எனக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
"தெய்வமே! அதையெல்லாம் சுத்தமான மலையாளத்தில் எப்படி சொல்லிவைத்தீர்கள்?"
"நானொண்ணும் அதெல்லாம் சொல்லவில்லை, சாலே! லோக் ஜூட் போல்த்தா ஹை!" இதைக்கேட்டதும் இந்துஸ்தான்காரர்கள் மேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது. பகவானின் அன்பு பெருகி ஆறாய் உருவெடுத்தது. ` என்னுடைய கோபம் அதில் அடங்கிப்போயிற்று.
கண்களைத்திறந்து ஒளிவீசும் அந்த உருவத்தைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

பி.கெ.மரியாம்மா குருவாயூரப்பனிடம் கேட்டாள்.
"ஃபேமிலியெல்லாம் இங்கேதானே?"
"ஓ........ராதாவா?....இல்லை. ஊரிலிருக்கிறாள். இங்கே இருக்கமுடியாது. பிள்ளைகளுடைய படிப்பு கெட்டுப்போகும்."
குருவாயூரப்பனுடைய பதிலால் பி.கெ.மரியாம்மா திருப்தியடையவில்லை.
"எத்தனை பிள்ளைகள்?"
"பத்துலட்சம் பெண்கள். ஏழரை லட்சம் ஆண்கள். அத்தோடு நிறுத்தியாயிற்று."
"சரிதான்." மரியாம்மா தலையாட்டினாள்.
"பிள்ளைகளை இங்கே கொண்டுவந்தால் சாப்பாட்டுக்கே திண்டாட்டமாகும். கம்யூனிஸ்ட்காரர்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்வார்கள்."
"நானும் அதையேதான் நினைத்தேன்," குருவாயூரப்பன் சென்னார்.
"பிள்ளைகளெல்லாம் எங்கே படிக்கிறார்கள்?"
"எல்லாம் வடக்கே இருக்கிற யுனிவர்ஸிட்டிகளில். இடையிடையே மாணவர் போராட்டம் வேறு."
"பிள்ளைகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் குருவாயூரப்பா," மரியாம்மா சொன்னாள்.
"பகவானே!" நான் இடைமறித்தேன். "ராதையை பிரிந்து ரொம்ப நாளாயிற்றா?"
குருவாயூரப்பன் சிந்தனையிலாழ்ந்தார்.
"யுகங்கள்..." குருவாயூரப்பனின் பதிலில் ஏக்கம் தெரிந்தது.

எனக்கும் பி.கெ.மரியாம்மாவிற்கும் குருவாயூரப்பனைப்பார்க்க பாவமாயிருந்தது.
எங்களுடைய கல்யாணம் முடிந்தபிறகும் ஐம்பது வருஷம் நாங்கள் பிரிந்து வாழவேண்டி யிருந்ததை நாங்கள் நினைத்துக்கொண்டோம். நான் டெல்லியிலும் பி.கெ.மரியாம்மா அவளுடைய ஊரிலும். மாதச்சம்பளம் எழுபத்தையாயிரம் ஆனபோதுதான் அவளை டெல்லிக்கு அழைத்துவர எனக்கு சாத்தியப்பட்டது.

"தெய்வமே, நான் ஒரு பாட்டுபாடவா? உங்கள் திருவடிக்கு ஆறுதலாக இருக்கும்."
"பாடு."
நான் பாடத்தொடங்கினேன்.
"மேரே மன் கி கங்கா
ஒளர் தேரே மன் கி ஜம்னா கா
போல் ராதா போல், ஸங்கம்
ஹோகா கி நஹி"
"வாவ்! அரே வாவ்!" குருவாயூரப்பன் கூவினார்.
"சொந்த வீட்டில் இருப்பது போல இருக்கிறது இல்லையா?" மரியாம்மாவின் கேள்வி.
"ஆமாம்" குருவாயூரப்பனின் முகத்தில் சிரிப்பு.
"அத்தோடு இதையும் வைத்துக்கொள்ளுங்கள்," என்று சொல்லியபடி மேல்துண்டின் முடிச்சவிழ்த்து குருவாயூரப்பனுக்கு முன்பாக நீட்டினேன். டெல்லியில் 'வெங்கேர்ஸ்' ல் வாங்கிய கோதுமை அவல் அது. குருவாயூரப்பன் ஒரு பிடி அவல் வாரி எடுத்தார்.
இரண்டாவது பிடி எடுக்கும்போது மேல்சாந்தி நம்பூதிரி குருவாயூரப்பனைத் தடுத்தார்.
என்னுடைய மூட்டையை நம்பூதிரி தட்டிப்பறித்துக்கொண்டார்.

இத்தனை சம்பாஷணைக்கு இடையிலும் குருவாயூரப்பன் கர்ப்பக்கிரகத்திற்கு பின்னால் இருந்த குளோஸட்டிற்கு இரண்டு மூன்று தடவைகள் போய்வந்து கொண்டிருந்தார்.
"என்ன?......உடம்பு சரியில்லையா?" மரியாம்மா கேட்டாள்.
"இவங்க போடுற அரிசி......." குருவாயூரப்பன் அலுத்துக்கொண்டார். "நித்தமும் அரிசிச்சோறும், அரிசிப்பாயஸமும் தான். நாசம். என்னுடைய வயிற்றை புரட்டிக்கொண்டே இருக்கிறது."
நான் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன்.
குருவாயூரப்பன் தான் பேசினார்."இருக்கட்டும். இதற்கெல்லாம் ஒரு முடிவு வருமடா! கட்டாய இந்தியும் கட்டாய சப்பாத்தியும் வரத்தான் போகிறது. அன்றைக்கு இந்த அரிசி சாப்பிடுகிற தேவஸ்தான கமிஷனரை தூக்கியடிப்பேன். ஒரு கோடி சூரியன் பொங்கிவந்தாற்போலிருக்கும் அப்போது."
"அது எப்போது நடக்கும்." பக்தி மேலீட்டு நான் கேட்டேன்.
"கல்கி!" குருவாயூரப்பன் தான் சொன்னார்.

"போகலாம்" மேல்சாந்தி இடைமறித்தார். "தரிசனம் முடிந்தது. நீங்கள் போகலாம்."
"பத்மாஷ்" குருவாயூரப்பன் கொதித்தெழுந்தார்.
"உங்களுக்கு வேண்டுமென்கிறதை எங்களிடம் கேளுங்கள்," நம்பூதிரி குருவாயூரப்பனை அமைதிப்படுத்தினார்.
என்னிடம் திரும்பி,"ஸால், நீங்கள் இடத்தைவிட்டுப்போவது தான் உத்தமம். மறுபடியும் ஏதாவது பர்பியோ, ஷம்மிகபாபோ கொடுத்து சங்கடம் உண்டாக்கப்பார்க்கவேண்டாம்."
உடனே பகவானிடம் திரும்பி,"விளையாட்டெல்லாம் வேண்டாம். போனதடவை நீங்கள் செய்த முட்டாள்தனத்தால் தேவஸ்தானத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம்."
"ஏய்! நம்பூதிரி.....பி.கெ.மரியாம்மா கொதித்தெழுந்தாள்." சின்னப்பையனைப்பார்த்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லாதே!"
குருவாயூரப்பன் திரும்பி நின்று கொண்டார். ஒன்றுமறியாதவரைப்போல 'உச்' கொட்டினார்.
அதற்குமேல் அங்கு நிற்கப்பிடிக்காமல் நானும் பி.கெ.மரியாம்மாவும் அங்கிருந்து வெளியேறினோம்.

வாசலைக்கடந்து வெளியே வரும்போது உரத்தகுரலில் ஒரு கேள்வி."யாரடா இந்த முட்டாள்!"
அங்கே தொங்கிக்கொண்டிருந்த பெரிய மணியிலிருந்துதான் அந்தக்கேள்வி வந்தது. பக்கத்தில் போய் நான் அந்த மணியைப்பார்த்தேன். ஒரு சிறிய வால் அந்த மணியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்தது. பெருவிரலுக்கும் சுண்டுவிரலுக்கும் இடையில் அந்த வாலை அழுத்திப்பிடித்துக்கொண்டு அது என்னவென்று பார்த்தேன். ஒரு பாம்புக்குட்டியிலன் வால் அது. அதை மெல்ல வெளியே இழுத்தபோது நீண்டுகொண்டே வந்தது.
"அய்யோ!" பி.கெ.மரியாம்மா அலறினாள்.
பாம்பு மிகப்பெரியதாக நீண்டுகொண்டிருந்தது. நான் அதைப்பிடித்தவாறே நடந்தேன். பிரதட்சணம் செய்தேன். மூன்றுமுறை பிரதட்சணம் செய்தேன். மூன்று முறை தெய்வத்தை கூவி அழைத்தேன். பாம்பு அப்போதும் நீண்டுகொண்டே இருந்தது.
"அடியே......பி.கெ.மரியாம்மா " என்று மரியாம்மாவைக் கூப்பிட்டேன். "நீ பஸ் ஸ்டாண்டிற்குப் போ.
நான் வரும்வரை அங்கேயே காத்திரு!"
பாம்பின் வாலைப்பிடித்தபடி நான் கோவில் குளத்தைநோக்கி ஓடினேன். பிடித்தபிடியை விட்டுவிடாமல் நீரில் மூழ்கியபடி நூறுமுறை கடவுளை ஜபித்தேன். "ஸாலா பேஞ்சோத்!"
அசரீரி கேட்டது.
"வாஸூகி.....விட்டுவிடு. அவன் டெல்லியிலிருந்து வருகிறவன். "
தண்ணீர்ப்பரப்பிற்கு மேலாக மேகக்கூட்டங்களுக்கிடையில் அசரீரி முழங்கியது."ச்சோடோ,வாஸூகி!.......ச்சோடோயா!"
கடைசியில் நான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தபோது பி.கெ.மரியாம்மா எனக்காக காத்துக்கொண்டிருந்தாள்.
"அன்பே!" என்று வாஞ்சையோடு அழைத்தாள்.
"நீங்கள் எல்லாவற்றையும் சமாளித்து வந்துவிடுவீர்கள் என்று எனக்குத்தெரியும். நான் உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்."
அவள் அத்தோடு நிற்கவில்லை.
"திருவிதாங்கூர்காரர்களை நம்பினாலும் நம்பலாம், இந்துஸ்தானி காரர்களை நம்பக்கூடாது."


`

2 comments:

துளசி கோபால் said...

அச்சச்சோ...... சூப்பர்!!!!

வல்லிசிம்ஹன் said...

வெகு சுவாரஸ்யம்:)

Post a Comment