Friday, April 30, 2010

அதெல்லாம் பழகிப்போயிட்டுதுங்க...





கல்வியும் மருத்துவமும் பணம்படைத்தவர்களுக்கே என்பது நமக்கு பழக்கமாகிவிட்டது.

அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது.

அரசுப்பள்ளிகளின் மீது நம்பிக்கையிழப்பு, ஆங்கில மோகம் இவற்றால் தனியார் பள்ளிகள் மதுக்கடைகளுக்கு ஈடான எண்ணிக்கையில் பெருகி வருகின்றன.

தமிழகத்தில் தற்போது இயங்கும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் உதவி பெறும் பள்ளிகள் இவற்றின் எண்ணிக்கை சுமார் 10,100.

இவையாவும் மக்களின் நன்கொடைகளை நம்பி இயங்கும் பள்ளிகள்.

நன்கொடை என்கிற பெயரில் நடைபெறும் கட்டணக்கொள்ளையை கேள்வி கேட்க நாதியில்லை.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை நீர்த்துப்போகச்செய்யும் நோக்கத்துடன் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதியைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குழுவும் அதன் பணியை முடித்துவிட்டது.

தனியார் பள்ளிகள் வாரிக்குவிக்கவேண்டிய கட்டணங்கள் பற்றிய அறிவிப்பு மே முதல்வாரம் வெளியிடப்படுமாம்.

பள்ளிகளின் உள் கட்டமைப்பு,
விளையாட்டு மைதானம்,
ஆசிரியர் எண்ணிக்கை,
ஏ சி வகுப்பறைகள்,
ஊரகப்பகுதியில் அமைந்தவை,
மாவட்ட தலைநகரங்களில் அமைந்தவை,
நகராட்சி, மாநகராட்சிகளில் அமைந்தவை,

என்ற அளவுகோள்களில் இந்த கட்டண நிர்ணயம் அமைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டண அறிவிப்பிற்குப்பிறகு முறையான தகவல் அந்தந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுமாம்.

அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை பள்ளிகள் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

ஏற்க மறுப்பவர்கள் குழுவிடம் முறையிடலாமாம்.

அதற்கப்புறம் கோர்ட்டில் மேல் முறையிடக்கூடாதா என்ன?

அப்புறம் என்ன?

தடையாணைதான்.

போனவருடம் வசூலான அதே கட்டணம்.

பெற்றோர்களின் புலம்பல்.

அப்போ.....

கட்டணக்கொள்ளை என்ற கூக்குரல்?

அதெல்லாம் பழகிப்போயிட்டுங்க........

No comments:

Post a Comment