Tuesday, May 26, 2009

மாநகராட்சிப்பள்ளிகள் மாற்றாந்தாய் பிள்ளைகளா?




பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தனியார் பள்ளிகள் சரிப்பட்டுவராது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதன்காரணமாகத்தான் ஏழைகள் மாநகராட்சிப்பள்ளிகளை நாடிப்போகிறார்கள். நடந்துமுடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பணம் சம்பாதிக்கும் தனியார்பள்ளிகளை பின்னுக்குத்தள்ளி நுங்கம்பாக்கம் மாநகராட்சிப்பள்ளி மாணவி அகல்யாராணி 490 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வேளச்சேரி அரசு பள்ளி மாணவர் கார்த்திக் 489 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 79 சதவீதமாக இருந்த மாநகராட்சிப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் 27 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 14 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியும் அளிக்கப்படுகிறது. மாநகராட்சிப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் படித்தவர்கள் தனியார் பள்ளிகளில் 12ஆம் வகுப்பில் சேர்ந்து படிப்பது சாத்தியமில்லை.
ஆனால் தனியார் பள்ளிகள் வடிகட்டி வீசிஎறிந்த பிள்ளைகளுக்கு மாநகராட்சிப்பள்ளிகளை விட்டால் வேறு வழியில்லை. மாநகராட்சிப்பள்ளிகளில் இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 11ஆம் வகுப்பில் சேரமுன்வருவார்கள் என்பது நிச்சயம்.

மாணவர்சேர்க்கை அதிகமாக இருந்தபோதும் மாநகராட்சிப்பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை உயரவில்லை என்பது இன்றைய செய்தி. பெற்றோர்-ஆசிரியர் கழகம் வாயிலாக ஆசிரியரை நியமித்துக்கொள்வது என்பதெல்லாம் மாநகராட்சிப்பள்ளிகளுக்கு சரிப்பட்டு வராது. பெற்றோர்கள் முதலில் ‘மொட்டை பெட்டிஷன்’ போட்டுவிட்டு அப்புறமாகத்தான் பணம் தருவார்கள். தலைமை ஆசிரியருக்கு ஏற்கனவே கூடுதல் பணிச்சுமை. இந்த கூடுதல் தலைவலி அவருடைய பணித்திறனை நிச்சயம் பாதிக்கும்.

அரசு மனம் இரங்க வேண்டும்.

மாநகராட்சிப்பள்ளிகளின்பால் அருட்பார்வையை செலுத்தவேண்டும்.

கல்வியாண்டு தொடங்கும்போது பாடநூல்கள் கொடுத்துவிடுவதால் அரசின் கடமை முடிந்துவிடாது.

ஆசிரியர்களையும் நியமிக்கவேண்டும்.

செய்வார்களா?

2 comments:

Unknown said...

மாநகராட்சி பள்ளிகள் சாதனை படைக்க பிறந்தவை. பொருளாதாரம் மற்றும் பல குறுநோக்கு எண்ணங்களுக்கு அவை துவண்டு போகக்கூடாது.

மு.குருமூர்த்தி said...

தங்களின் எதிர்வினைக்கு நன்றி.
மு.குருமூர்த்தி

Post a Comment