Wednesday, July 15, 2009

மாங்குடியில் ஒரு சாதனைப்பள்ளி





மாங்குடி ஒரு உள்ளடங்கிய கிராமம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் 2007-08 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருதை இந்த ஊரில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றிருப்பது பாராட்டிற்குரியது.







மாங்குடியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சிறப்புகள் பல.

ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக தொலைக்காட்சிப்பெட்டிகள் உள்ளன.

குடிநீர் இணைப்புடன் நீர்வைக்கும் பாத்திரமும் உண்டு.

பள்ளிக்குட்பட்ட அஞ்சல்பெட்டியும் உண்டு.

இப்பள்ளியில் உள்ள நூலகத்தில் 800 புத்தகங்கள் இருக்கின்றன.

திறந்தவெளி படிப்பகம் செயல்படுகிறது.

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவியருக்கு தையல் வகுப்புகளும், மாணவர்களுக்கு புத்தக பைண்டிங்கும் சொல்லித்தரப்படுகிறது.

இங்கு பயிலும் 238 மாணவ, மாணவிகளுக்கும் சீருடை உண்டு. அத்துடன் அடையாள அட்டையும் உண்டு.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வி.ஜோதிமணி கூறுகையில் கம்ப்யூட்டர்கள், எல்.சி.டி.புரஜக்டர்கள், இண்டர்நெட் ஆகியவற்றை கற்பித்தலில் அதிகமாக பயன்படுத்துவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இணைய முகவரி உள்ளது.

இந்தப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி கே.மிருதுளா கூறுகையில் தனக்கு இணையம் பற்றிய போதுமான அறிவு இருப்பதாகவும் பஹ்ரைனில் இருக்கும் தன்னுடைய தந்தைக்கு இ-மெயில் மூலம் போட்டோக்களும், செய்திகளும் அனுப்பிவருவதாக தெரிவித்தார்.

ஒழுக்கம், சுத்தம், சுற்றுச்சூழல் இவையே பள்ளியின் தாரகமந்திரங்கள் என்றும், பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதாகவும் தலைமை ஆசிரியர் திரு.ஜோதிமணி கூறுகிறார்.

எல்.சி.டி. ப்ரொஜக்டர்களைப்பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வகுப்பும் ஐந்துமாணவர்களைக்கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பாடத்தில் உள்ள கடினமான சொற்களில் தொடங்கி, பின்பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் வரை உள்ள பகுதிகளுக்கு ஏற்ற ஒளித்தகடுகளை இந்தக்குழுவினர் தயாரிக்கின்றனர்.

பெற்றோர்களிடமிருந்தும், கல்வியாளர்களிடமிருந்தும் தொடர்ந்து கிடைக்கப்பெற்றுவரும் ஆதரவினால் மாங்குடி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைநிமிர்ந்து நிற்கிறது.

மாங்குடி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சாதனையால் தமிழக கல்வித்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது.

1 comment:

Tamil Home Recipes said...

பாராட்டுகிறேன்.

Post a Comment