Saturday, July 18, 2009

நலங்கெடலாமா இந்த நல்ல வீணை?














தஞ்சாவூரின் புகழ்மகுடத்தில் இன்னொரு மரகதக்கல் இந்த சரசுவதி மகால் நூலகம்.

இதன் சிறப்புகளை விரித்துரைத்தால் பெருகும்.

450 ஆண்டுகள் பழமையானது இந்த நூலகம்.

இந்தியாவில் உள்ள நூலகங்களில் மிகவும் பழமையானது.

இங்குள்ள சுவடிகளின் எண்ணிக்கை நம்மை மலைக்கவைக்கும்.

தமிழில் 3817,
சம்ஸ்க்ருதத்தில் 25560,
தெலுங்கில் 1075,
மராட்டியத்தில் 3080 என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இங்குள்ள காகிதச்சுவடிகளின் எண்ணிக்கை 21041.

எல்லாம் மன்னர் சரபோஜியின் முயற்சியால் சேகரிக்கப்பட்டவை.

4500 க்கும் அதிகமான அச்சு நூல்கள் இங்குள்ளன.

கிரீக், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைச்சேர்ந்தவை இவை.

இவையன்றி தற்காலத்திய அச்சு நூல்கள் 65000 வேறு உண்டு.

அரிய வண்ணப்படங்கள் இங்கு உள்ளன.

100 சதவீதம் அரசின் நிதியிலிருந்து நடத்தப்படுகிறது இந்த நூலகம்.

1918 முதல் பொதுநூலகமாக இயங்குகிறது.

1983ல் இந்த நூலகம் சங்கமாக பதிவு செய்யப்பட்டது.

இந்த நூலகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எதற்காக இந்த நீண்ட முன்னுரை என்று கேட்கிறீர்களா?

தஞ்சாவூர் சரஸ்வதிமகால் நூலகத்திற்கு 18 ஆண்டுகளாக முழுநேர இயக்குநர் இல்லாமல் இருப்பதுதான் முக்கியமான செய்தி.

இதுமட்டுமல்ல. இந்த நூலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் பட்டியலும் நூலகத்தின் பெருமையைப்போலவே பெரியது.

தமிழ், தெலுங்கு, மராட்டி, மோடி ஆகிய துறைவல்லுநர்கள், காப்பாட்சியர், சுவடிகள் பாதுகாப்பாளர், பதிப்பு மேலாளர் ஆகிய பணியிடங்கள் வெற்றிடங்களாகவே உள்ளன.

மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெறாமையால் ஆயிரக்கணக்கான சுவடிகள் இன்னும் இருட்டிலேயே உள்ளன.

என்ன இருந்தாலும் “உடையவன் பாரா வேலை ஒருமுழம் கட்டை” என்பது சரிதானே?

No comments:

Post a Comment