Sunday, March 8, 2009

லாபமா? நஷ்டமா?



இது நமக்கெல்லாம் சிக்கலான கணக்கு...அரசியல்வாதிகளுக்கோ மனக்கணக்கு

முதல் பார்வையில் சுலபமான கணக்கு போலத் தெரிந்தது. போட்டுப்பார்க்கும்போது தலைசுற்றுகிறது. கொஞ்சம் உதவி செய்யுங்களேன்!

கணக்கு எண்.1 ரேஷன் கடையில் ஒரு லிட்டர் மண் எண்ணை விலை 9 ரூபாய். ஒரு ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் மண் எண்ணை கிடைக்கும். 5 லிட்டர் மண் எண்ணைக்கு தேர்முட்டியில் கடை வைத்திருக்கும் நல்லதம்பி 95 ரூபாய் கொடுப்பான். நல்லதம்பி அந்த 5 லிட்டர் மண் எண்ணையையும் பக்கத்து டவுனில் கடை வைத்திருக்கும் சத்தியமூர்த்தியிடம் விற்றால் நல்லதம்பியின் கைக்கு 145 ரூபாய் கிடைக்கும். சத்தியமூர்த்தி 5 லிட்டர் மண் எண்ணையையும் குடும்பஸ்தன் குசேலனுக்கு விற்றால் சத்தியமூர்த்தியின் பெட்டிக்கு லஞ்சத்திற்கு செலவழித்தது போக 180 ரூபாய் வந்துசேரும்.

இந்த வியாபாரத்தில் அதிகமாக லாபம் அடைந்தது நானா? நல்லதம்பியா? சத்தியமூர்த்தியா? மண் எண்ணை நான் வாங்காமல் இருந்தால் இந்த லாபம் முழுவதும் யாருக்குப் போகும்?

என்னுடைய வீட்டில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது. என்னுடைய பெரிய பயலுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது. என்னுடைய நடுப்பயலுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது. என்னுடைய கடைசிப்பயலுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது.

எங்கள் எல்லோருக்கும் அடுப்பு ஒன்றுதான். மண் எண்ணை விற்ற வகையில் எங்கள் வருமானம் எவ்வளவு?

கணக்கு எண். 2 ரேஷன் கடையில் ஒரு கிலோ அரிசி விலை 2 ரூபாய். என்னுடைய ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி கிடைக்கும். 15 கிலோ அரிசியை கிலோ ஒன்று 9 ரூபாய்வீதம் பெட்டிக்கடை வைத்திருக்கும் சத்தியபுத்திரன் எடுத்துக்கொள்வான். டவுனுக்குள் அரிசிக்கடை வைத்திருக்கும் உண்மைவிளம்பி அந்த ரேஷன் அரிசியை கிலோ ஒன்று 12 ரூபாய் வீதம் வாங்கி, கிலோவுக்கு 50 பைசா செலவழித்து பாலீஷ் ஏற்றி 19.50 பைசா வீதம் விற்றால் இந்தவியாபாரத்தில் அதிகமாக லாபம் அடைந்தது நானா? சத்தியபுத்திரனா? உண்மைவிளம்பியா?

இந்த ரேஷன் அரிசியை நான் வாங்காமல் போனால் லாபம் முழுவதும் யாருக்குப்போகும்?

ரேஷன் அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு 1 ரூபாயாக இருந்தால் இரண்டுபங்கு லாபம் கிடைக்கும் என்பது உண்மையா?

கணக்கு எண்.3 அன்னாடங்காச்சியின் குடிசைவீட்டுக்கு இலவச மின்சாரம். ஒரு லைட் மட்டும் போட்டுக் கொள்ளலாம். இப்போது அவருடைய வீட்டிற்குள் 60 வாட் மின்விளக்கு ஒன்றும், மாட்டுக் கொட்டகையில் 100 வாட் மின்விளக்கு ஒன்றும், கட்டிலுக்கு மேல் 80 வாட் ஃபேன் ஒன்றும், மேசைமேல் 65 வாட் டிவி பெட்டி ஒன்றும் இருக்கிறது. 750 வாட் கிரைண்டர் ஒன்றும் அடுப்புக்குப் பக்கத்தில் இருக்கிறது. விளக்குகள் எல்லாம் 8 மணி நேரம் எரியும். ஃபேனும், டிவி பெட்டியும் கரண்ட் இருக்கும்போதெல்லாம் இயங்கும். கிரைண்டர் ஒரு மணிநேரம் இயங்கும். அன்னாடங்காச்சியின் வீட்டுக்கு இலவசமின் இணைப்பு என்பதால் அவருக்கு மின்கட்டணம் இல்லை. மின்கட்டணம் உண்டு என்று அரசு அறிவித்தால் அவர் ஒவ்வொருமாதமும் எத்தனை ரூபாய் மின்கட்டணம் கட்டவேண்டும்?

அவருடைய கிராமத்தில் இலவசமின்சாரம் பெறும் 85 வீடுகள் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் மின்கட்டணம் உண்டு என்று அரசு அறிவித்தால் அதனால் அரசுக்கு லாபமா? நஷ்டமா?

No comments:

Post a Comment