Monday, March 9, 2009

நாலுகால் பாய்ச்சலில் நமது நாடு




அரசே, நலம். நலமறிய ஆவல்.

கொடநாட்டில் இருந்து முன்னாள் முதல்வர் சென்னையை நோக்கி பயணப்பட்டுவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் சென்னையில் நடுக்கம்... பூமகளுக்குத்தான் அரசே... நான் சொல்ல வந்தது நிலநடுக்கத்தை.

"நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருக்கிறது."

அப்படித்தான் ஆட்சிக்கட்டில் சொல்லுகிறது. விஷயமறிந்த அமார்த்தியசென் வேறுவிதமாக சொல்லுகிறார்.

மூன்று கொடுமைகளாம்...அரசுகள் கவனிக்கத்தவறிவிட்டனவாம்...ஏழைக்குழந்தைகளுக்கு ஊட்டமான உணவில்லையாம்...அடிப்படை மருத்துவ வசதி இல்லையாம்...தரமான ஆரம்பக்கல்வி இல்லையாம்.

வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பிச்சையெடுக்கும் குழந்தைகளைப்பார்த்தால் அவர் சொல்லுவதில் உண்மை இருக்கும்போல் இருக்கிறது அரசே! ஓட்டல்களிலும், சிறு தொழில் கூடங்களிலும் வேலைசெய்யும் சிறுவர்களைப்பார்க்கும்போதுகூட அவர் சொன்னது சரியாக இருக்கும் போலத்தெரிகிறது அரசே!

கல்வித்துறையில் ஒரு லட்சம்கோடி கள்ளப்பணம் புழங்குகிறதாமே? அமார்த்தியசென் சொன்னது சரியாக இருக்குமோ?

நாட்டில் முக்கால்வாசிப்பேர்களின் ஒரு நாளைய வருமானம் வெறும் இருபது ரூபாய்க்கும் கீழே என்று அரசாங்க புள்ளிவிவரம் சொல்லுகிறது. ஊழல் மாநிலங்களில் தமிழ்நாடு 12 வது இடத்தில் இருக்கிறதாம். "ஏழைகளை ஏழைகளாகவே வைத்திரு" என்பதுதான் அரசியல் கட்சிகளின் அடிப்படை சித்தாந்தமாக இருக்குமோ அரசே!

அரசே! அங்கு இங்கு எனாதபடி இறைவன் இருந்தது ஒரு காலம். அந்த இடத்தை இப்போது ஊழலுக்கு கொடுத்துவிட்டு இறைவன் இறங்கிப்போய்விட்டான் போலிருக்கிறது அரசே!

"ஆண்டாண்டு காலம் அடிமைச்சிறையில் அடைபட்டுப்போயிருந்த ஏழை எளிய மக்களின் கைகளில் ஓர் ஓட்டுச்சீட்டினைக்கொடுத்து அவர்களைத்தேடி ஜமீந்தார்கள், மிட்டா மிராசுகள், படித்தவர்கள், பணக்காரர்கள் எல்லோரும் கெஞ்சிக்கூத்தாடி ஓட்டுக்கேட்கும் நிலைமையை உருவாக்குவேன்" இது பண்டித நேரு சொன்னது.

அவருடைய கட்சிக்காரரின் இன்றைய முழக்கம் வேறுவிதமாக அல்லவா இருக்கிறது அரசே!

"இன்றைய நிலை வேறு. தனித்தனியாகப்போய் ஓட்டுக்கேட்ட காலம் கடந்தகாலம். கூட்டணியாகப்போய் ஓட்டுக்கேட்பது நிகழ்காலம். வெற்றிபெற்றபிறகு அதிகாரத்தை கூறுபோட்டுக்கொள்வோம். பிணக்கு வந்தால் பிரிந்து போய்விடுவோம். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்படும் ஒரு நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு என்பது கொள்கை ரீதியான முடிவு."

இந்த முழக்கத்தில் எனக்குப்புரிந்தது இதுதான்:" கூட்டணி என்பது ஓட்டுப்போட்டவனுக்கு நாமம் போடும் வேலை. கூட்டணிக்கும் கொள்கைக்கும் சம்பந்தமில்லை."

காகத்தின் வாயில் இருந்த வடையை தட்டிப்பறிக்க நரிசெய்த சாகசம் பள்ளிக்கூட பிள்ளைகளுக்கும் தெரியும். பாமர மக்களின் ஓட்டுக்களை தட்டிப்பறிக்க அரசியல் நரிகள் செய்யும் தந்திரங்களைப் பார்த்துவிட்டு ஒரிஜினல் நரிகள் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டன. ஒரிஜினல் நரியின் பேச்சை தூக்கிச்சாப்பிட்டுவிடும் இந்தக்கால அரசியல் நரிகளின் மேடைப்பேச்சுக்கள்.

"இல்லாமையை இல்லாமல் செய்வோம்" "வரியைக்குறைப்போம் வசதியைப்பெருக்குவோம்" "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்றெல்லாம் சூளுரைத்து வந்தவர்களின் ஆரம்பகால அலங்கார மேடைப்பேச்சுக்களை இன்றைய இளைய தலைமுறையினர் கேட்டிருக்க மாட்டார்கள்.

ஒரே ஒரு சாம்பிள். மைக்முன்னால் நிற்பதாக கற்பனை செய்துகொண்டால் சுவை கூடுதலாகும்.

"கொடிகட்டி வாழ்ந்த தமிழகம், குடிகெட்டுப்போனதை, நான் இடிபட்ட மனதுடன் எடுத்துரைக்கின்றேன்!

நம்முடைய தோழர் காட்டிலே வெட்டப்பட்டிருந்தால் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன்.

நாட்டிலே...நடுரோட்டிலே...பட்டப்பகலிலே...பலர் மத்தியிலே வெட்டிக்கொல்லப்பட்டிருப்பது, நாம் கட்டிக்காத்த நெறிமுறைகளை கொட்டிக்கவிழ்த்து விட்டதன்றோ?"

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

//கூட்டணி என்பது ஓட்டுப்போட்டவனுக்கு நாமம் போடும் வேலை. கூட்டணிக்கும் கொள்கைக்கும் சம்பந்தமில்லை."//

உங்களின் ஆதகங்கள் எனக்கும் இருகின்றது ஐயா!

Post a Comment