Thursday, March 12, 2009

பெற்றுப் பிழைத்துவரும் பெண்சாதி...



வளையல்காப்பு போட்டவுடன் பிறந்தவீட்டுக்குப்போகும் கர்ப்பிணிப்பெண்களுக்காக பெரியவர்களின் அனிச்சையான வேண்டுதல்:

"இவள் நல்லபடியாக பெற்றுப்பிழைத்துவரணும் ஆண்டவனே!"

கர்ப்பிணிப் பெண்களுக்கெல்லாம் பொதுவான வேண்டுதல்தான் இது.

ஆனால் இந்தியப்பெண்களுக்கு அவசியமானது.

இல்லையென்றால் ஐக்கியநாடுகளின் சிறப்பு அறிக்கையில் இந்தியாவின் பேறுகால மரணங்களைக்குறித்து கவலை தெரிவிக்கப் பட்டிருக்கவேண்டியதில்லை அல்லவா?

உலகத்தில் நடைபெறும் பேறுகால மரணங்களில் இருபது சதவீத மரணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறதாம்.

அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு தாய் பிரசவ அறையில் மரணத்தை சந்திக்கிறாள்.

இத்தனைக்கும் இந்திய அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு செய்துள்ள நிதி ஒதுக்கீடு முன்பு 0.9 சதவீதமாக இருந்தது. தற்போது 3.0 சதவீதமாக உள்ளது.

அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் எது தெரியுமா?

நிதியை முழுமையாக பயன்படுத்துவதில் இருக்கும் தடைக்கற்களாம்.

அது என்ன தடைக்கற்களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

அரசுநிர்வாகத்தில் உள்ள இரண்டாயிரம் சமுதாய நலக்கூடங்களுக்கு 6,000 பயிற்சிபெற்ற ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் வெறும் 700 பயிற்சிபெற்ற மருத்துவர்களே இருக்கிறார்கள். ஆனால் தனியார் துறையில் 20,000 பயிற்சிபெற்ற மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.

ஏழை எளிய மக்களுக்கு சேவைசெய்வதில் தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சமூகப் பொறுப்பும் அக்கறையும் வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை.

மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யப்போவதாக பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்கும் மாணவ மாணவிகள் ஏன்தான் மனம்மாறிப் போனார்களோ?

கர்ப்பிணிப்பெண்களிடம் அதிகமாக காணப்படும் அனீமியா எனப்படும் இரும்புச்சத்து குறைபாடு தான் பேறுகால மரணங்களுக்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பப்பெண்கள், படித்த பெண்மணிகள், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் இவர்களிடம்கூட இந்த இரும்புச்சத்து குறைபாடு நோய் காணப்படுகிறது என்பதுதான் அதிசயம்.

பெண்கள் இதுகுறித்து போதிய அக்கறை காட்டுவதில்லை. பள்ளிக்கூட பருவத்திலேயே பெண்பிள்ளைகள் இந்த நோய்க்கு ஆளாகிப்போனதுதான் சோகம். கருத்தரித்த பெண்களில் முக்கால்வாசிப்பேர் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலகம் முழுவதும் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேறுகால மரணங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேறுகால மரணங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் அனீமியா நோயால் ஏற்படும் மரணங்கள் மட்டும் எண்பது சதவீதம். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 5 கிராம் / டெசி லிட்டருக்குக் குறையும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பேறுகால மரணங்களைப்பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் தரப்படுவதில்லை என்பது ஒரு அதிர்ச்சி அளிக்கும் உண்மை.

பேறுகால மரணங்களுக்கு அனீமியா அல்லாத வேறு காரணங்களும் உள்ளன. முடிவெடுப்பதில் தாமதம், மருத்துவ வசதிக்காக பிரயாணம் செய்யவேண்டியிருத்தல், போக்கு வரத்து வசதியின்மை காரணமாகவும் இந்த மரணங்கள் ஏற்படுகின்றன.

போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில், ஏழைக்குடும்பங்களில், பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படுமானால் அவர்கள் மவுண்ட்ரோட்டில் மாட்டிக்கொண்ட அணில் குஞ்சு மாதிரி தவித்துத்தானே போவார்கள்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

கலாமிடம் பாராட்டு பெறுவது சாதாரணமல்ல. அவருடைய ஆசையையும் அதே நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அது அன்புமணிக்கான செய்தியாகத்தான் கருத வேண்டும்.

புகையிலை தடை சட்டம், மது ஒழிப்பில் ஆர்வம் போன்ற செயல்பாடுகளால் அமைச்சர் அன்புமணி பாராட்டுக்கு உரியவராகியிருக்கிறார்.

பேறுகால மரணங்களை தடுப்பதில் அன்புமணி முழுமையான ஆர்வம் காட்டினால் அவருடைய புகழ் தொப்பியில் இன்னுமொரு வண்ண இறகு நிச்சயம் சேர்ந்துகொள்ளும்.

நாட்டின் எந்தெந்தப்பகுதிகளில் பேறுகால மரணங்கள் அதிகமாக ஏற்படுகிறது என்பதை கண்காணித்து, மரணத்தை உடனடியாக பதிவுசெய்யுமாறு உத்தரவிடவேண்டும்.

பேறுகால மரணம் சம்பவித்த குடும்பங்களில் நேர்காணல் நடத்தி உடல்நல மற்றும் சமூக காரணங்களை கண்டறிய வேண்டும்.

கிடைத்த விவரங்களை அலசி ஆராய்ந்து தீர்வு காணவேண்டும். கிடைத்த முடிவுகளை மீண்டும் சமூகக்குழுக்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அதிகாரிகள் அனைத்து நடைமுறைகளையும் கண்காணிக்க வேண்டும்.

குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கடமை.

வேதனையும், வெறுப்பும், சலிப்பும், இன்பமும், துன்பமும் கலந்த ஒரு அரிய அனுபவம் இது.

பத்து மாதத் தவத்தின் நிறைவாக அருமையான முத்துப் பிள்ளையைப் பெற்றெடுத்து தாய்மை என்ற தகுதியை சமுதாயத்தில் பெறுகிறாள் பெண்.

ஆனால் பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களைப் பார்க்கும் போது இனி குழந்தையே பெறக்கூடாது என்று அவளும் அவளைப் பார்க்கின்ற இதர இளம் பெண்களும் நினைக்கின்றனர்.

"பிறக்குபோதே அம்மாவை விழுங்கிய துக்கிரி" என்கிற அபாண்டமான பழிச்சொல் நம்மில் சிலருக்கு இருக்கலாம்.

அப்படியொரு பழிச்சொல் எந்த மனிதருக்குமே ஏற்படாதவாறு நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆனதைச் செய்வோம்.

No comments:

Post a Comment