Monday, March 9, 2009

குதிரைமேல் ஏறிக்கொண்ட ஜனநாயகம்




அரசே, நலம். நலமறிய ஆவல்.

செங்கோட்டையில் குதிரை வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட வியாபாரிகள் சென்னைக் கோட்டையில் ஆர்ப்பரித்திருக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. இது கோட்டைக்கு வெளியில் நடக்கிற வெட்டுக்குத்து. இந்த பலூன் மிரட்டலுக்கெல்லாம் நீங்கள் பயப்படமாட்டீர்கள் என்பது எனக்குத்தெரியும். வேண்டிய ஊசிமருந்து டெல்லி அன்னையிடம் இருக்கிறது என்பதும் உங்களுடைய கண் ஜாடையில் அது குத்தியேற்றப்படும் என்பதும் எனக்குத்தெரியும்.

சிவப்பு நாடாவிற்குள் ஃபைல்கள் மூச்சு முட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு பிடிக்காது என்று படித்ததும் எனக்கு புல்லரித்துப்போனது.

உங்களுக்குப்பிடிக்காத ஒன்று சில அரசு ஊழியர்களுக்கு பிடித்திருக்கிறதே? அது ஏன்? அதையும் கொஞ்சம் கண்திறந்து பாருங்கள் அரசே!

நீங்கள் சிரமத்தில் இருப்பது எனக்குத்தெரியும்.

நான் நலமாக இருக்கிறேனா என்று நீங்கள் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமில்லை.

நான் நலமாக இருப்பதால் தான் தங்களுக்கு வரி, வாய்தா எல்லாம் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் தாராளமாக அள்ளிக் கொடுக்கிறீர்கள்.

சின்னத்திரைக்கு ரூபாய் கொட்டிக்கொடுத்திருக்கிறீர்கள்.

நீங்கள் ரூபாயைக் கொட்டி ஆதரவை அள்ளுகிறீர்கள்.

அவர்கள் அழுகையைக்கொட்டி ரூபாயை அள்ளுகிறார்கள்.

நாங்கள் வரியைக்கொட்டி அழுகையை அள்ளுகிறோம்.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சின்னத்திரைக்கு விருது கொடுத்தமாதிரி, தமிழ்நாட்டில் அதிகமான விற்பனையைக்காட்டும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு விருது கொடுத்தால் என்ன?

வருமானமும் கூடும். அழுகையும் கூடும்.

சின்னத்திரை அழுகையைக்காட்டிலும் இந்த அழுகை ரொம்பவும் "ரியல்" ஆக இருக்கும்.

No comments:

Post a Comment