Sunday, March 8, 2009

அரசியல்வாதியின் வாகனம் கொசு





மூதேவியின் வாகனம் கழுதை. முருகனின் வாகனமோ மயில். விநாயகர் ஏறும் வாகனம் மூஞ்சூறு. அய்யப்பனின் சவாரியோ புலிமேல். சிவபெருமானின் பயணம் காளைமேல். திருமால் ஆரோகணிப்பது கருடன்மேல்.

கடவுளுக்குக் கிடைக்கும் அனைத்து சோடன உபசாரங்களும் நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் கிடைக்குபோது ஏன் அவர்களுக்கும் ஒரு வாகனம் இருந்துவிட்டுப்போகட்டுமே!

அங்கு இங்கு என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுவே அரசியல்வாதிகளுக்கு பொருத்தமான வாகனம். கொசுவின் ஜாதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் குணம் ஒன்றே.

கொசுக்கள் கொழுக்கும் காலம் அல்லவா இது!

நம்மை இருளில் தள்ளி இரத்தைக் குடிக்கும் கொசுக்கள் கொழுக்கும் காலம் இது. அதிகாலையில் இருள். அந்திவேளையில் இருள். நள்ளிரவிலும் இருள்.

இரவில் உறக்கமிழந்ததால் நமக்கு பகலுறக்கம். இரவெல்லாம் உண்டு களைத்ததால் கொசுக்களுக்கு பகலுறக்கம். நாட்டின் வளத்தையெல்லாம் நாடுகடத்திய கொசுக்கள், உண்ட நிறைவால் உறங்கிக்களிக்கின்றன. அவை உறங்கிக்களிக்கட்டும்.

கொசுக்கள் கொழுக்கும் காலம் இது.

கொசுக்கள் எப்போதும் கூட்டமாக வரும். எல்லைகடந்து வரும் கொசுக்களும் உண்டு. சில கொசுக்கள் பிள்ளைக் குட்டிகளோடு வரும். வாரிசுகளோடு வரும் கொசுக்களும் உண்டு. தனியாக வருகிற கொசுக்களும் உண்டு.

நீங்களெல்லாம் கால்வலிக்க நடக்கும்போது கொசுக்கள் மட்டும் சொகுசுக்கார்களில் ஊர்வலமாக வரும்.

நீங்களெல்லாம் இருட்டில் தவிக்கும்போது கொசுக்கள் மட்டும் விளக்கு வெளிச்சத்தில் ஊர்வலமாகப் போகும்.

உங்கள் பிள்ளைகளை நீங்கள் படிக்க அனுப்பினால் கொசுக்கள் எல்லாம் சேர்ந்து உங்களை கடனாளியாக்கிவிடும்.

நீங்கள் நோய்ப்படுக்கையில் விழுந்தால் கொசுக்களுக்கு கொண்டாட்டம். உங்கள் நகை நட்டுகளை பிடுங்கிக்கொள்ளும்.

உங்கள் ஊரின் வளத்தையெல்லாம் நாடுகடத்தும். உங்கள் ஆடுமாடுகளைக்கூட கொண்டுபோய்விடும். உங்களுக்குள்ள அரிசியைக்கூட விலைபேசி விற்றுவிடும்.

தேர்தல் நேரத்தில் கொசுக்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள்.

விலையேறிப்போனதால் நீங்கள் நிலைமாறிப்போயிருக்கலாம். உங்கள் நிலையறியா கொசுக்கள் கொழுக்கும் காலம் இது.

கொசுக்களுக்கு ஈவு இரக்கமே கிடையாது.

நீங்கள் எப்படிப்புரண்டு படுத்தாலும் உங்கள் இரத்தத்தைக்குடிக்கும் சாமர்த்தியம் அவைகளுக்கு உண்டு.

தேர்தல் காலத்தில் கொசுக்கள் கூட்டமாக வரும். கைகூப்பித்தொழும். பல்காட்டி சிரிக்கும். அது சிரிப்பல்ல. இளிப்பு. நாமெல்லாம் இளிச்சவாயர்களென்று நினைவுபடுத்தும் சிரிப்பு.

கொசுக்களை நீங்கள் ஒழிக்க முடியாது. நீங்கள் ஒழிக்க முயன்றால் அவை கூட்டணியாக சேர்ந்துகொள்ளும். கூட்டமாக இரத்தம் குடிக்கும். கொண்டாட்டம் போடும். சண்டை வந்தால் பிரிந்துபோகும். அதை நிஜமென்று நம்பிவிடாதீர்கள். அது நடிப்பு.

நீங்கள் போர்த்திக்கொண்டாலும் அது காத்து நிற்கும். அதற்குத்தெரியும்...உங்களுக்கு வியர்க்கும் என்பதும்...போர்வை விலகப்போவது நிச்சயம் என்பதும்...

3 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

நீங்கள் போர்த்திக்கொண்டாலும் அது காத்து நிற்கும். அதற்குத்தெரியும்...உங்களுக்கு வியர்க்கும் என்பதும்...போர்வை விலகப்போவது நிச்சயம் என்பதும்...

Super Sir

அசோக் said...

Super sir.........

அசோக் said...

Super......

Post a Comment