Friday, January 28, 2011

ஓடாக்குதிரை (009)

ஓடாக்குதிரை


ஓடும் குதிரை பல உண்டு
ஓடாக் குதிரை ஒன்றுண்டு
ஆடும் வாலும் அதிலிருக்கும்
அழகிய வண்ணம் பல இருக்கும்

போடும் புல்லைத் தின்னாது
பொழுதும் தண்ணீர் குடிக்காது
பாரம் எதுவும் இழுக்காது
பாய்ந்து போகவும் இயலாது

ஆடும் கலையை அறிந்திருக்கும்
அனைவர் மனமும் கவர்ந்திழுக்கும்
மாறும் மனமும் அதற்கில்லை
மனிதரை சுமக்கத் தெம்பில்லை

பாடும் ஜதிகளுக்கேற்றபடி
பாய்ந்து ஆடிடும் குதிரையடி
ஆடும் வாலுடன் குதிரையடி
அதன் பேர் ஓடாக்குதிரையடி

நன்றி: தினமணி-சிறுவர்மணி

No comments:

Post a Comment