காடு
கார்த்திகை தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடி-கிளியே
பார்வை குளிருமடி!
காடு பொருள் கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக்களித்திடவே-கிளியே
குளிர்ந்த நிழல் கொடுக்கும்!
குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனிபறிக்கும்
மரங்கள் வெயில் மறைக்கும்-கிளியே
வழியில் தடையிருக்கும்!
மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மதுசுரக்கும்-கிளியே
போவார் அடி வழுக்கும்!
பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சரவங் கலங்கும்-கிளியே
நரியெல்லாம் ஊளையிடும்!
கல்லுரல் போன்ற முகம்
காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான் தடுக்கும்-கிளியே
வேங்கைகள் வால் நிமிர்க்கும்!
சிங்கம் புலி கரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடி-கிளியே
இயற்கை விடுதியிலே!
உவமைக்கவிஞர் சுரதா
நன்றி: சிறுவர் மணி 09.10.2010
Friday, January 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment