Monday, January 31, 2011

அறிவுள்ள காகம் (035)

காகம் நல்ல காகமாம்
கறுப்பு வண்ணக் காகமாம்
காட்டில் வெயிலில் அலைந்த - அதற்கு
கடுமையான தாகமாம்.

நீரைத்தேடி ஊருக்குள்ளே
நீண்ட நேரம் பறந்ததாம்
நீலவண்ணப் பானை கண்டு
நிரம்ப மகிழ்ச்சி கொண்டதாம்.

இரண்டு காலால் பானையை
இறுகப்பற்றி அமர்ந்ததாம்
எட்டி உள்ளே பார்த்தால் நீரோ
எட்டும் தொலைவில் இல்லையாம்.

அறிவு கொண்ட காகமோ
ஆழ்ந்து யோசனை செய்ததாம்
அருமையான திட்டம் கிடைக்க
அகம் மகிழ்ந்து கரைந்ததாம்.

பானை அருகில் கிடந்த கல்லை
பறந்து அலகால் எடுத்ததாம்
குவியல் கற்கள் முழுவதையும்
குடத்தின் உள்ளே போட்டதாம்.

துவளா உறுதி கொண்ட காகம்
தொடர்ந்து முயற்சி செய்ததால்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீரக் குடித்ததாம்.

அழகுக்காகம் அறிவினாலே
தாகம் தணித்த செயலைப்போல்
அணுகும் துயரை நாமும் கூட
அறிவினாலே வெல்லலாம்!

கவிஞர் செ.செயராமன் – சிறுவர்மணி 08.01.2011

No comments:

Post a Comment