Friday, January 28, 2011

காலம் உயிரினும் மேலே......(012)

காலம் உயிரினும் மேலே......


மேற்கில் மறைந்த கதிரவனும்
மீண்டும் விடிந்து உதித்திடுவான்
நேற்று சென்ற நேரந்தான்
தெய்வம் நினைந்தும் திரும்பாதே

இழந்த பொன்னை ஈட்டிடலாம்
தொலைத்த பொருளை மீட்டிடலாம்
பொழுதை இழந்தால் இழந்ததுதான்
பொன்னினும் பொழுது சிறந்ததுதான்

உடம்பே நோயில் இளைத்தாலும்
உணவில் ஓய்வில் தேற்றிடலாம்
கடத்திக் காலம் வீணடித்தால்
கருகி வீழ்ந்து சருகாவோம்

திரிந்த பாலும் தேறாது
பிரிந்த உயிரும் சேராது
மறைந்த நேரம் மீளாது
மனதிற் கொள்வாய் மறவாது

இருக்கும் வேலைகள் பலகோடி
எது எது முக்கியம் எனத்தேடி
சுருக்காய் முடித்தால் வாழ்வுனக்கு
சுகமும் மகிழ்வும் தரும் உனக்கு

எடுக்கும் பணிகள் எதுவெனினும்
இன்றே முடிக்கப் பழகிவிடும்
கெடுத்து நேரம் வீணடிப்பார்
கிட்ட வராமல் தடுத்துவிடும்

நன்றி: தினமணி-சிறுவர்மணி

No comments:

Post a Comment