தண்ணீர்! தண்ணீர்!
விண்ணின் சாரம் மழையாகும்
மண்ணில் சேர்த்தால் நலமாகும்
நெகிழ்மப் பொருட்களைப் போட்டு நீ
இறங்கும் மழையைத் தடுக்காதே-இனி
நிலத்தடி நீரைக்குறைக்காதே!
உழவுத் தொழிலைச் செய்வதுமே
உயிரைக் காத்துக் கொள்வதுமே
குடித்துக் குளித்து மகிழ்வதுமே
தண்ணீர் இன்றி ஆகுமோ-இனி
வறட்சி இங்கே வேண்டாமே!
ஏரி குளத்தை மேடாக்கி
நிறையக் குப்பையை அதில் கொட்டி
தங்கும் மழை நீர் தடுக்காதே
இயற்கையின் சிறப்பைக் கெடுக்காதே!
மழையே நின்று போனாலே
காடும் கழனியும் கருகிடுமே
நாடும் பாலை ஆகிடுமே
நீரும் கனவாய் மாறிடுமே!
தண்ணீர் தண்ணீர் என்றே நீ
தரையைத் தோண்டி அலையாதே
விண்ணின் மழையை நேசிப்பாய்
விழுந்த மழையை சேமிப்பாய்
மண்ணில் வாழ்க்கை மலர்ந்திடுமே
எல்லா நலனும் விளைந்திடுமே!
-சி.அருள் ஜோசப் ராஜ்
சிறுவர்மணி 10.07.2010
Saturday, January 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment